Femaleஒரு மதயானையின் நிழல்
என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது
விளக்குகளுக்கிடையே அகப்பட்ட ஸ்படிகமாய்ச்
குழப்பமடைந்திருந்த நாளில்
தீயசகுனங்களால் சப்தித்தது

தனது வாலைச் சுழற்ற
அதிர்ந்த நட்சத்திரங்கள் உதிர்ந்தன
மெளனம் வேய்ந்த உச்சிவேளைகளில்
பாறைகளை அலறச் செய்தது
விடாய் தீர்க்கப் போகையில்
நதியையே பருகித்
தன்மாமிசம் குலுங்கக் கொக்கரித்தது
தாமரைகள் பூத்த குளத்தையும்
கனவுகள் பூக்கும் இரவினையும்
வண்ணமிழக்கச் செய்தது

இன்று காலைதான் அம்மதயானை
என்னுள்ளே புகுந்தது
நிழல் கரைந்தது

குட்டி ரேவதி

Pin It