‘அ’ழகான செந்தமிழே! ‘ஆ’தாரக் கருப்பொருளே!
‘இ’ளகாத கல்லுள்ளும் ‘ஈ’ரமெனச் சுரப்பவளே!
‘உ’ளமெங்கும் ஒளியாகி, ‘ஊ’னுக்குள் உயிராகி,
‘எ’ழுத்தாலே கலையாகி ‘ஏ’ற்றமுடன் இருப்பவளே!
‘ஐ’யனெங்கள் வள்ளுவனின் அரியகுறள் மகுடமுடன்
‘ஒ’ய்யார நடைநடந்து ‘ஓ’ங்குபுகழ் சேர்ப்பவளே!
‘ஒள’டதமாய்ப் பிணிகளைந்து, அ‘ஃ’காமல் நிலைப்பவளே!

அறியாமைக் ‘கசட’றவே அறச்சரி‘த’ம் ‘ப’யின்‘ற’வளே!
ஆதிமுதல் எங்‘ங’னமும் அ‘ஞ’ர்எய்தாப் பேர‘ண’ங்கே!
செறிவுமிகு ‘ந’று‘ம’ணஞ்சால் செம்மொழியே! தே‘ன’முதே!
பரிவுமிகு தா‘ய’ன்பே! ப‘ர’வுபுகழ்ச் சொல்‘ல’ழகே!
பைந்தமிழே! ‘வழ’க்கம்போல் வணக்கம், நின் ஒள்‘ள’டிக்கே!!

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It