இயலாமையின்
வெப்பத்திலிருந்து கசிகிறது
தான்மை
உடைபட்ட கொப்புளத்தின்
சீழினைப் போல.

எல்லாமறிந்தவனென்னும்
போர்வையை
இழுத்துப் போர்த்திக் கொள்ள
இழித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது
ஏதேனும் அறிந்தவர்களை.

அங்கத இலக்கியத்தில்
தஞ்சமடைந்த படி
காழ்ப்பு மனம்
தன் குரூரத்தின்
பற்களில்
ஒழுகும் குருதி துடைக்கிறது.

நேற்றைய மன்னர்களின்
சமாதிகளைத் தோண்டியெடுத்து
தனக்கான
நாளைய வீதிகளை
சமைத்துக்கொள்ளத்துடிக்கிறது
தற்கிலி குணம்.

எழுதின் மேல் கவியும்
நோயறிவால்
இருண்டு விடுகிறது
எழுதுகோல்களின் சுய வெளிச்சமும்.!

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It