அழகுதான் ஒம்பேரு
அதயாரு மறுப்பாரு
பழகினோம் வெளயாடி
மறக்குமா? யம்மாடி...

புரியா வயசுலேயே
புரிஞ்சுது காதலுன்னா
ஆறியாம நாமிருந்தா
அப்படியா நடந்திருக்கும்!

வரிவரியா எப்போதும்
வச்வமுத்தம் இனிக்கும்படி
கன்னத்துல கோலமிட
எண்ணதத்துல வந்தவளே!

பாவாட சட்டயில
பாத்து ரசிக்கவச்சு
பாவாட தாவணிக்கு
பட்டுன்னு மாறிட்டியே!

அச்சமே இல்லாத
அன்பா இருந்தவளே
உச்சமா ஒனக்குள்ளே
உருமாறி போயிட்டியே!

வெக்கமா சிவந்துக்கிட்டு
வேறபக்கம் திரும்புறியே
பக்கமா வந்தாக்க
படுகூச்சம் காட்டுறியே!

துங்கமா தோனுறியே
தக்காளிப் பழங்கணக்கா
எங்கிருந்து வந்ததிந்த
எலுமிச்ச நெறமொனக்கு

வெடிச்ச வெள்ளரியா
வெடலப்புள்ள நீமாறி
புடிச்சமாதுறியே
பொன்னழகா பூத்திட்டியே!

எனக்கதுல சந்தோசம்
தலகாலு புரியாம
ஏதேதோ ஆகுதடி
எதமாத்தான் கொல்லுமடி!

வருவ வருவேன்னு
வழிநெடுக கண்ணவப்பேன்
ஒருதடவ பாத்திடவே
பலமணியா காத்திருப்பேன்

வந்தாத்தான் எந்திரிப்பேன்
வல்லேன்னா நொந்திருப்பேன்
பந்தாவ நானிருந்து
பருவத்த ஏங்கவப்பேன்

வெந்த வெறகாட்டம்
வேதனய சொல்லியழ
தந்தாயே சோகமொன்னு
தாங்கலயடி எம்மனசு

பட்டப் படிப்புக்கு
பட்டணந்தான் போகனுன்னு
பட்டுத்தான் ஆகனுன்னு
பளிச்சினு தெரிஞ்சாலும்

பட்டமா பறந்தோமே
பாதய மறந்தோமே
விட்டதூறம் கொஞ்சமில்ல
கட்டுப்பாடு போடவில்ல

தொட்டிழுக்க முடியாம
துண்டுபட்ட நூலாட்டம்
தொலைச்சிட்டு தேடுறேண்டி உன்ன
தொலைக்க மனமில்லயடி!


இனியதாசன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It