கற்றதில் காலம் அழித்தது போக
மற்றதாய் எஞ்சுவதாய் கல்வியறிவு
பெற்றதில் களவும், செலவும் போக
சொற்பமாய் மிஞ்சுவதாய் செல்வம்

மனம் விட்டு நன்கு சிரித்தது போக
முறுவலாய் இதழோரமாய் புன்னகை
துயரங்களால், தோல்விகளால் அழுது
துடைத்து, காய்ந்த உப்புக்கண்ணீர்

வாழ்ந்தது வடித்தது, வசித்தது போக
வரலாறாய் மழை, வெயில் தாங்கிய
அரண்மனை இடிபாடுகள் இடையே
அன்று வாழ்ந்தவர் மூச்சுக்காற்றும்

வியர்வை வாசமும் வீச, இன்னாளில்
அயர்வைத் தரும் அன்றாட வாழ்வில்
உயர்வைத் தேடி ஓடும் சுயநலத்தின்
முயற்சிகளும், முன்னேற்றமும் சுவடு

இல்லாத பதிவாய் மறையும் ஒருநாள்
கல்வெட்டுகள் உடைந்தாலும் அதில்
சொல்லிய கருத்துக்கள் உடையாது
மெல்லிய பனைஓலைகள் கிழிந்தும்

வல்லின, மெல்லினங்கள் கிழியாமல்
நெல்லில் சுற்றிய அரிசியாய் பதிவை
பல்வேறு தலைமுறைக்கு கொடுக்கும்
நல்லோரின் அன்பளிப்பால் உலகமும்

கற்காலத்தில் நிற்காமல் கலைகளின்
பொற்காலமாய் இருக்கின்றது இன்று
விற்காமல் போனாலும் நூல்கள் நாளை
சொற்கோலம் போடும் கடந்தகாலத்தை!


பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It