எல்லா கவிஞர்களும்
சொல்வது போல
எனக்கும்
இரவைத் திரட்டி செய்த
கூந்தல்தான்.

கரிய
பெரிய விழிகள்

அண்டங்காக்கையின்
சிறகு பிரித்து
செய்தது போல புருவம்

சற்று முன்னர்தான்
சாணை பிடித்தது போல்
கூரான நாசி

தேனில் ஊறிய
இதழ்கள்

கொஞ்சமும் கூச்சமின்றி சொல்கிறேன்
எனக்கு
எடுப்பான மார்பு
எட்டு போல இடை.

பல்கலைக்கழக முதுகலைத் தேர்வில்
எனக்குத்தான்
முதல் இடம்.

நான்
வாசலில் கோலமிட்டால்
கோடிக் கண்கள் மொய்க்கும்

இதழ் திறந்தால்
இசை மழை பொழிவேன்

கவிதையும் கைவரும்

என இத்தனை இருந்தும்
என்னைப்
பெண் பார்க்க வருகிற
அத்தனை பேரும்
முதலில் விசாரிப்பது
போலியோவால் சூம்பிப்போன
என்
இடது காலைப் பற்றித்தான்...


பாலகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It