நான் வளர்த்த செல்லம்
ஓர் மிருக ஜாதி
அறியவில்லை அன்று.

தவழத் துவங்கிய நாளில்
கையோடு அள்ளியணைத்து
மகிழ்ந்தப் போதெல்லாம்
எழுந்து நின்று
குதியாட்டம் போட
பெருத்த புதிரில் சிலிர்த்தேன்.

ஆமையாய் ஒடுங்கி
பாம்பெனத் தலையெடுத்து
பூனையாக இரவுகளில்
கண்விழிக்கவே
மிரண்டு
கட்டிப்போட நினைத்தும்
வென்று நின்றது அது.

இரைத்தேடி
மாமிச திரட்சிக்காக
ஆளாய் பறந்தலைய
விலை கொடுத்து வாங்கி
போட்டுப் பார்த்தேன்
அடங்குவதாய் இல்லை.

இம்சை தாளாது
இரைப் பிராணியோன்றை தேடி
வீட்டில் கட்டிப்போட்டேன்.
நாள் விடாது கொத்தியதை
ருசித்துப் பதம் பார்க்கவும்
கொழுத்தது இரைப் பிராணி.

விட்டு விட்டு நொண்டத்
தொடங்கியதோர்
கறுப்பு நாளில் தன்
உருவத்தை விட்டும்
காணாமல் போனது மிருகம்.
மினுக்கத் தொடங்கிய
இரைப் பிராணியின்
கண்களும் ஜொலிக்கவே
நித்திரைச் சலனங்களில்
மிருகம் விட்டுப்போன
தடயங்கள் தட்டுப்பட
முயன்று விரையத்
தேடியும் பயனில்லை.

தாஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It