பிணத்துடன் பேசிக்கொண்டிருக்கும்
அவளின் முகம் இழுத்து
இளுப்பி விடுகிறார்கள் மஞ்சளை.
நெற்றியில் அழித்த குங்குமம்.
தூமத்துணியை மாற்றும் அசூயையுடன்
கட்டிக்கொள்கிறாள் புதுச்சேலைகளை.
உதிர்க்கப்பட்டிராத சொல் கொண்டு
துரோகமிழைத்த சாமியை சபிக்கும் வாய்.
அழுகையாய் கொப்பளித்து
வழிகிறது மன ரத்தம்.
பறையடித்து பணம் விட்டுக்கொண்டு
பூ பொட்டு புடவை ஏந்தி
வந்துகொண்டிருக்கிறது
மற்றொரு கூட்டம்.
முறைவைத்து முறைவைத்து நாட்கணக்காய்
அழுது கொண்டிருக்கிறாள்.
உப்பிப்புழுத்து வீச்சமடித்துக்கொண்டிருக்கிறது
புருசனின் பிணம்
அவள் பிழைப்பில்

அழகிய பெரியவன்
Pin It