மவுனத்தில் எத்தனையோ
பேசும் உடல்மொழி
சந்திப்புகளில் ஊமையாய்.

விசாரிப்புகளில்
அர்த்தமிழந்துவிடுகிறது
ஒவ்வொரு சொல்லும்.

எதையோ நினைத்து
எதையோ பேசி
எதையும் சொல்லாமல்
எப்போதும் கழிகிறது
எப்போதாவது சந்திக்கும்
எழுதாதக் கவிதைகள்.

------------------

வனதேவதையின் வாசலில்
பாடிக்கொண்டிருக்கும்
குயிலின் தவம்
கலைந்துவிடாமலிருக்க
அடைகாத்து
விழித்திருக்கிறது
காக்கையின் சிறகுகள்.

*

றக்கை முளைத்தவுடன்
பறந்துவிடும்
கதகதப்பான சுகமனைத்தும்
மறந்துவிடும்
மன்னிக்க முடிவதில்லை
குயிலின் மனவிகாரங்களை
என்றாலும்
எப்போதும் காத்திருக்கிறது
குயிலின் வரவுகளுக்காய்
காக்கையின் கூடுகள். 

புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It