மலைப்பாம்பு அரிசி மூட்டைகளுடன்
வருகிறது.
தனது வருகைக்கு முன்பாகவே
கொளுத்த மலைப்பாம்பு
நமது வாக்கு மூலங்களை
அவசரமாகவே தின்று விடுகிறது.
பாம்புகள் உட்புகுந்தலைகிற
நகரங்களில்
அவைகள் எழுப்புகிற புற்றுகளில்
முட்டைகளைப்போல
வாக்கு மூலங்கள்
விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மலைப்பாம்பு ஒன்றினது
வருகையை முன்னிட்டு
திருத்தப்படுகிற வீதியில்
வரவேற்பதற்காய்
குழந்தைகள் வரவழைக்கப்படுகிறார்கள்.
பிணைந்து கிடக்கிற இரண்டு
கைகளிற்குள்
பெருமெடுப்பில் அடிக்கிற
ஆயுத வெக்கையில்
முகங்கள் அவிகின்றன.
கொடிகள் நாட்டப்பட்ட
கதிரைகளின் முன்பாக
எனது நகரை
பெரும் புற்றாக்க அலைகிற
பெரும் பாம்பின் கனவுடன்
மலைப்பாம்பு பால் குடிக்கிறது.
ஒடுங்கிய பிரதேசத்தில்
அலைச்சல் மிகுந்த இரவில்
வாக்குமூலங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன.
எல்லாவற்றையும் தின்ற பாம்பு
வானத்தையும்
சமுத்திரத்தையும்
தின்றபடி
வருகையை திட்டமிடுகிறது.
கோழிக்குஞ்சுகள்
கூடைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றன.
முட்டைகள் தின்று
அலைந்து கொண்டிருக்கிற பாம்புகளிடமிருந்து
கோழிக்குஞ்சுகளை
காப்பாற்றுகிற மலைப்பாம்பு
இன்னும் சில நாட்களில் வருகிறது.
முட்டைகளில் ஒளிந்திருக்கிற
குழந்தைகள்
வாக்குமூலங்களுடன்
வரவேற்க காத்திருக்கிறார்கள்.
(பிரணாப்முகர்ஜியின் கொழும்பு வருகையை முன்வைத்து)
- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- தீபச்செல்வன்
- பிரிவு: கவிதைகள்