கீற்றில் தேட...

வளைவு வரை
கண்கள் வாங்கிப் போகும்
நதி
அதன் பிறகு
என் கவிதை
வாங்கிப் போவதை
அடுத்தூர் ஆத்துமேட்டு
அனார்கலிகள்
படிக்க நேரிடலாம்

*
ஆசையாய் கட்டிக்கொண்டது
வாட்ச் மிட்டாய்
சுவைத்து குடித்தது
குட்டி பாக்கெட் ரஸ்னா
கண்கள் திகட்ட தின்றது
தேன் மிட்டாய்
அடம் பிடித்து
வாங்கிக் கொண்டது
தேங்காய் பன்னு
இலக்கிய விழாவுக்கு
வந்து விட்டு
வீடு திரும்பும்
சிறார் இலக்கியமா நீ

*
எனக்குள் பேசிக் கொள்வதை
எப்படி மூடி மறைத்தாலும்
கசிந்து விடுகிறது
கண்ணீரை மறைக்கத்
தெரிந்த எனக்கு
கவிதையை மறைக்கத்
தெரிவதில்லை

- கவிஜி