எனக்குச் சொல்வதற்கென
எந்தச் சொல்லை
எடுத்து வரப்போகிறாய்?
உனக்கு
அதுவொரு சொல்
எனக்கோ
என்னை இயக்கும்
மந்திரம்!
விசும்பலோடிருக்கும்
மனதைத் தேற்றும்
அருமருந்து!
தவித்திருக்கும்
நினைவுகளின்
தாகந்தணிக்கவிருக்கும்
அருஞ்சுனை ஊற்று!
உன் ஒரு சொல்
என் இரவின்
மௌனத்தை உடைக்கும்!
உன் ஒரு சொல்
என் பாலைநிலத்து
முதல் மழைத்துளி!
உன் ஒரு சொல்
என் அன்றைய நாளின்
ஆதித்தொடக்கம்!
விடிகிற பொழுதெல்லாம்
உன் சொல்லுக்கெனவே
விடிகிறது!
இப்போது சொல்!
எனக்குச் சொல்வதெற்கென
எந்தச் சொல்லை
எடுத்து வரப்போகிறாய்?
- இசைமலர்
RSS feed for comments to this post