பாத்திரம் கழுவும் நீரில்
வழிந்தோடுகிறது
வேலைக்காரம்மாவின் கண்ணீர்
****
பொறந்த வீட்டுச் சீதனமாக
வந்த மெத்தையில்
முகம் புதைத்து
குலுங்கினாள் அம்மா
உறவு முறிந்த
உடன்பிறப்பை எண்ணி
****
பாம்படத்தோடு புதைக்கப்பட்ட
மூக்காயி கிழவிக்கு
இனி
பாம்படம் சொல்லும்
ஊரின் சங்கதிகளை
****
உயர்ந்த இடத்தில்
ஏற்றி விட்ட அப்பாவை
உயரத்தில் வைத்தான்
புகைப்படமாக
****
தெருவின் முகவரியாய்
மாறிப் போனாள்;
அடையாளம் தொலைத்த
பைத்தியக்காரி
****
இயற்கையோடு இயைந்த
பெரு வாழ்வு
குளத்தங்கரையில்
அரச மரத்தடி
பிள்ளையார்க்கு
****
கிழிந்த உடையுடன்
கலைந்த கோலமாய்
தெருவில் அலையும்
தாயம்மா
ஒருநாளும்
கேட்டதில்லை காசு
ஊர் சொல்லியது
பைத்தியக்காரியாம் அவள்
- ந.சுரேஷ், ஈரோடு