modern artஇன்றைக்கொரு கவிதை
எழுத வேண்டும் போல்
தோன்றுகிறதெனக்கு

அது
பூக்களின் நிறங்களையொத்த
வார்த்தைகளோடும்
பனித்துளி வழிந்தோடும்
சத்தங்களோடும்
பிசுபிசுத்த குருதியின்
காயங்களோடும்
இல்லாமலிருக்கலாம்

பசியில் உருளும்
குடல்களின்
இரைச்சலை ஒத்திருக்கலாம்

வெளியேறி விடாத
மயிர்க்கால்களின்
சிலிர்ப்பை போலிருக்கலாம்

உறைவதற்கு முந்தைய
இரத்தத்தின்
இளஞ்சூட்டை கொண்டிருக்கலாம்

வெட்டுண்ட உயிரின்
கடைசி
அதிர்வினை ஒத்திருக்கலாம்

ஏன்
அது கவிதையாகக் கூட
இல்லாமலிருக்கலாம்

- ப.செல்வகுமார்

Pin It