கட்டிடக் காடுகளில்
யானைகள் உலாவும்
வழித் தடத்தில்
சிற்றெறும்புகளும்
ஜீவித்துக் கிடக்கின்றன

இடைஞ்சல்கள் ஏதும்
இல்லாத போதும்
பெருத்த யானைகள்
சிறுத்த எறும்புகளை
சகித்துக்கொள்ள விரும்புவதில்லை

சிற்றெறும்புகளின்
சின்னஞ்சிறு அசைவுகளும்
சினம் கொள்ளச் செய்யலாம்
காடாளும் யானைகளை

வேட்டை நாய்களை
வெறிகொண்டு ஏவி
நாசப்படுத்தலாம்
சிற்றெறும்புகளின்
சின்னஞ்சிறு உடைமைகளை

ஏதுமற்ற எறும்புகளின்
வழித்தட வாழ்வுரிமையும்
பறிக்கப்படலாம்
பூண்டோடு அழிக்கப்படலாம்

கெஞ்சியும்
இறைஞ்சியும்
பயனில்லாது போகும்
வேளையில்
யானை அடக்கும்
அங்குசமாய் மாறி
அடக்குவதை தவிர
மாற்று வழியில்லை
எறும்புகளுக்கு

ஏனெனில் இது
யானைகளின் காடல்ல
எறும்புகளின்
பூர்வீக பூமி.....

- வீர பாண்டி

Pin It