நேற்று தூயமரியன்னை
ஆலயத்தினருகே
மறியொன்றை
சுமந்த மரியாளின்
குமாரனை சிருஷ்டித்தவன்,
நேற்று முன்தினம்
கட்ராபாளையம் பள்ளிவாசலின் அருகே
கூன்பிறையையும் 786யும் சிருஷ்டித்தவன்,
இன்று கூடலழகர் பெருமாள்
கோவில் சாலையில்
கோவர்த்தன கிரியை
ஒற்றை விரலால் தாங்கிநிற்கும்
'U'நாமமிட்ட கோவிந்தனை
சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான் ,
இரண்டு நாளாய் கொட்டித் தீர்த்தப்
பெருமழைக்கு இன்று ஒருநாள் மட்டும்
விடுப்பு அளித்து
அருளவேண்டும் என்கிற
விசித்திரப் பிரார்த்தனையோடு.
- ஸ்ரீதர்பாரதி