அறுந்து விழுதலின் சாத்தியங்கள் உரைக்கும்
அந்தப் புராதன பாலத்தின் கிரீச் ஒலி தொட்டு
உறைந்த என் ஐம்புலன்கள்
பயணத்தின் பாதைதோறும் கிடக்கின்றன
துள்ளிச்சரியும் தூரத்து சிற்றருவி
தன் கூதல் ஒலி நீட்டி
கன்னத்து ரோமத்தை நெருடுகிறது
நீண்டு நெளியும்
ஓர் புராதன தொங்குப் பாலத்தில்
நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்
புணர்தலை கலையாக்க முயலும்
ஊமைக்கலைஞனின் உளிப்பேச்சு
அப்பாறையெங்கும் சரிந்து அசைகிறது
முக்கி முக்கி
களைத்த தாய் மீன்கள்
கொஞ்சம் சூரியனை பருகவெண்ணி
கூழாங்கல் ஏறுகின்றன
கூட்டு நடனம் ஒன்றை
இயற்றிக்காட்டியபடி பறவைக்கூட்டம் விண் வென்று
கரையேகுகின்றன

****
- செ.சுஜாதா, பெங்களூர்.

Pin It