மழையால் உருபெற்ற சாலையை
வண்ணச்சிறகுகளால்
அளந்து கொண்டிருக்கிறது சாம்பல் பறவை..
ஒவ்வொரு துளியையும்
அது தன் சிறகுகளின் தனித்த அறையில்
ரசனையுடன் சேமிக்க தவறுவதேயில்லை...
சிறகுகளின் நரம்புகளில் வேற்றுலகிற்குச்
செல்லும் வழியை இரகசியமாய்
காக்கிறது..
சிறகுகளைப் பிய்த்தெரியும்
விரல்களுடன் ஊர்ந்து வருகிறது
சர்ப்பமொன்று..
பறவையுடன் நட்பு கலந்து
உலகங்களுக்குள் வண்ணமாய் பயணிக்கவும்
கற்கிறது..
உச்சியில் சுவையேறிய
அடுத்த நிமிடம்
துடிதுடிக்க பறவையைச் சுவைக்கிறது..
இரத்தத்தில் நனைந்து சுகந்த சர்ப்பம்
மெள்ள மெள்ள
மற்றுமோர் உலகை நோக்கி
பயணித்தபடி
மனிதனாய் உருமாறத் துவங்கியிருக்கிறது...

Pin It