ஓரறி வுயிர்முதல் ஐந்தறி வுயிர்வரை
பாரினில் வாழப் பொருளது உண்டு
ஆறாம் அறிவுடை மனிதர் வாழ
மாறா நிபந்தனை உழைப்பு என்பதால்
வினைஞர் இன்றி அமையாது உலகு
ஏய்ப்பவர் மக்களை மேய்த்து வாழ்வதை
மாய்ப்பது என்றே விடுதலை உணர்வுடன்
உறுதியாய் வினைஞர் முனைந்து நின்றால்
நிறுத்தும் விசையோ உலகினில் இல்லை
(மரம், செடி, கொடி முதலான ஓரறிவு உயிரினங்கள் முதல் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் வரை உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு இவ்வுலகில் தேவையான பொருட்கள் இயற்கையிலேயே கிடைக்கின்றன. (ஆனால்) ஆறாம் அறிவு படைத்த மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை உழைப்பினால் மட்டுமே பெற முடியும் என்பது (இயற்கையின்) நிரந்தர நிபந்தனையாக இருப்பதால், வினைஞர் (அதாவது தொழிலாளர்கள்) இல்லாமல் இவ்வுலகம் இயங்க முடியாது. (ஆகவே உழைக்காமல்) ஏய்க்கும் கூட்டம் மக்கள் மீது அதிகாரம் செய்யும் கொடுஞ் செயலை, ஒழித்தே தீருவது என்று தொழிலாளி வர்க்கத்தினர் சதந்திர உணர்வு கொண்டு உறுதியாக முயன்றால், அதனைத் தடுக்கும் விசை இவ்வுலகத்தில் இல்லை.)
- இராமியா
RSS feed for comments to this post