lady_322நெடுந்தூரத் தனிமையை
சாமர்த்தியமாகத் தன்னுள்ளில்
போர்த்திக்கொண்டு
கடற்கரையை நோக்கி பயணிக்கிறது
நம் இருவரின் கால்களும். .

தற்காலிக விரல்களின்
மென் உரசல்களின் போது
தவிப்புடன் பார்வைகளைப்
பரிமாறிக்கொள்கிறோம்
சிறு புன்னகைகளை முன்னிருத்தி.

கடற்கரை நண்டுகள்
உன் பாதங்களைத் தீண்ட முயற்சிக்க
கண் இமைக்கும் நேரத்தில்
என்னை இறுகப் பற்றிக்கொள்கிறாய்
உன் கூந்தல் வாசத்தை
என்னுள்ளில் முழுவதும் நிறைத்தபடி

இப்படியாக அடிவானச் சிகப்பில்
நாம் இருவரும் தொலைந்து போகும்
தவிப்பான தருணங்களில
கவிழும் இருளை இரண்டாகக் கிழித்து
நேரம் கடந்து கூட்டிற்கு விரையும்
தாய்ப் பறவையின்
தளர்ச்சியான இறகசைப்பின் ஒலியில்
கரைந்து போகிறது
நம் இருவரின் மனதிலும்
ஒளித்து வைத்த
ஒத்திகை முத்தங்கள்.

- பிரேம பிரபா

Pin It