மழை ஓய்ந்துபோன ஒரு முன் இருட்டில்,
தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் தெரிந்தது,
நிலவின் பிம்பம் என்று என் கவணத்தை
வேறு எங்கோ திருப்பி இருக்க வேண்டும்!
 
lover_303கொலுசு அணிந்த உன் காலடியில்,
மிதிபட்ட என் பார்வையை
அத்துடனாவது தொலைத்து இருக்க வேண்டும்!
 
கிழக்கு கணவாயிலில் சூழ்கொண்டு,
சமவெளியில் பயணித்த காற்று,
சட்டென்று உன் முகத்திரை விலக்கும் என்று
நான் எங்கே நினைத்திருந்தேன்!

எத்தனை காடுகளை கடந்திருப்பேன்,
விழிக்கோப்பைகளில் நிரப்பிய உன் பார்வையை
பருகித் தீர்க்க முடியவில்லை!
என்றோ மறைந்து போன நட்சத்திரங்கள்
இப்பொழுதும் எனக்குள் மின்னிக் கொண்டிருக்கிறது.
 
புதர்கள் மண்டிய மேடுகளிலும்,
அருவியை ஒட்டிச்செல்லும் வழுக்குப் பாதைகளிலும்,
பூக்களை காயப்படுத்தாமல்
முன்னால் செல்லும் உன் கால் தடங்களை
என் நிழல் தொடர்கிறது!
தேரைகள் ஒளிந்துள்ள பனிப் பாறைகள்
வெப்பப் பெருமூச்சு விடுகின்றது!.
 
வெறித்திமிர் முன்னோக்கியும்,
உன் நினைவுகள் பின்னோக்கி இழுப்பதுமாய்
ஒரு காந்த அலைகளுக்குள் சிக்கித் தவிக்கிறேன்!.
 
இரு மலைகள் முட்டிக்கொள்ளும் அடிவாரத்தில்,
நிலவும், நடசத்திரங்களும் உறங்கும்
நீர்மெத்தையென விரிந்து கிடக்கும் இந்த ஏரியின்
மறுமுனையில் நீ இருப்பதாய் உணர்கிறேன்!
 
வளைந்த கிளையொன்றின் விரல்கள்,
அலையலையாய் சுமந்து வரும்
உன் நினைவுகளை வருடிக் கொண்டிருக்கிறது!.
  
உனக்குள் ஒரு போர்க்கைதியாய் முடங்கிக்கிடக்கும்
அந்த தருணத்தை இன்னும் சற்று தாமதித்துக்கொள்..!
 
கட்டறுந்த ஒற்றைக் கோளாய் இந்த பிரபஞ்ச வெளியில் சுழலுகின்றேன்!
உன் வருகையை இன்னும் சற்று தாமதித்துக் கொள்!.
 
விழுந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இலைகளும்
என் மரணத்தை முன்னறிவிப்பு செய்கின்றன!
ஆள் உயர புல்வெளியிலோ!
அதனையடுத்த வயல்வெளிகளிலோ!
ஆயுதம் தாங்கிய என் உடல் சிதறிக் கிடக்கலாம்!
 
ஆன்மாவின் அலறல்களால்
இந்த காடுகள் அடக்கம் செய்யப்படும் முன்,
கண்ணீரில் கரையாத ஒளிக்கீற்றை
உன் விழிகளில் தேக்கி வைத்திரு!
அடம்பிடிக்கும் என் உயிரை
பேரின்ப தூண்டிலால்
முரட்டுத்தனமாக வெளியேற்று!..

முன் தினம் மழை ஓய்ந்து போன
அந்த முன்னிருட்டு நாளுடன்
நான் மறைந்து போகிறேன்!

Pin It