நல்லதொரு இடத்தில்
எனை நட்டுவைத்து
வளர்க்கப்போவதாய் பறைசாற்றி
சின்னதாய் பாலித்தீன் கவரில்
மண் நிரப்பி
என் வேர் மட்டும்
புதையுமாறு
பார்த்துக் கொண்டாய்.

தினமும் சில நிமிடங்கள்
வெய்யிலில் காட்டுகிறாய்.
உன் அலுவல் பரபரப்பில்
களவு போய்விடுவேனோவென்று
கதவுகளுக்குள்
இடம்பெயர்க்கத் தவறுவதில்லை.

என்னை வாங்கிவருகையில்
ஸ்கூட்டரில்
உனது கால்களுக்கிடையில்
கெட்டியாகப் பற்றிவந்த போது
உன்வீட்டில் வளர்வதையே
விரும்பினேன்.

ஆனால்
ஒரு குழந்தையை
அன்பு செய்யத்
தெரியாதவன் வீட்டில்
எந்த மரமும் தழைப்பதில்லை
என்கிற விதியை மெய்ப்பிப்பதற்காகக்
கருகி மடிகிறேன் நான்.

Pin It