நலம்..
நலமறிய அவா!

நினைவிருக்கிறதா?
அன்றொரு மழை நாள்
கையில் நினைவோடு
என் வாசற்படியில் உன்னை கப்பல் விட்டது?

நீ
நனைந்தபடியே பேசிக்கொண்டிருந்தாய்...
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்க
தேநீர் உனக்கு காது கொடுத்திருந்தது!

மழை விட்ட கொஞ்ச நேரத்தில்
இரவு பொழிய
சாத்தப்பட்டன பகற்கதவுகள்...

நீ கண்களை மூடிக்கொள்ள
நான் கனவுகள் தேடினேன்...
நிகழ்வுகளற்ற அவ்வுலகத்தில்
நீ, நான், மௌனம் மற்றும் தனிமை!
 
என் மிக நெருக்கமானவையும்
என் மிக பிடிக்காதவையும்
அவை இரண்டு!
மரியாதைக்கு கூட
சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்...
 
நாளை நீ சந்திக்க நேர்ந்தால்
அவைகளை கேட்டதாக மட்டும் சொல்!
 
நினைவுகளுடன்,
ரசிகன்   

Pin It