வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்,
நிலமிடை ஆளும் அரசு அதிகாரம்
நிலவெனக் குளிரும் பார்ப்பனர் தமக்கே
புதிதாய்ப் புதிதாய்ப் பலவழி களிலும்
கதிராய் எரிக்கும் உழைப்பவர் தம்மையே
குழைவாய்த் தோன்றும் குலமுறை அநீதியே
இன்றும் உள்ள முதன்மை முரணென
என்று உணர்வதோ சிந்தை தெளிவதோ
சாதியைக் கணக்கில் கொள்ளாப் புரட்சி
ஆதியில் அழியும் பின்னரும் தொடரும்
அண்ணலின் பாடம் கண்னெத் தகுமே!
 
(இமயமே வட எல்லையாகவும், குமரிக்கோடே தென் எல்லையாகவும், கீழ்க் கடலே கிழக்கு எல்லையாகவும், மேற்கடலே மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ள நிலப் பகுதியில் (இந்தியாவில்) நிலவும் அரசதிகாரம் பார்ப்பனர்களுக்கு நிலவைப் போல குளிர்ச்சியைத் (இன்பத்தைத்) தருகிறது. (ஆனால்) உழைக்கும் மக்களைப் புதிது புதிதாகப் பல வழிகளில் வெங்கதிரைப் போல் எரிக்கின்றது. அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளில் மிகவும் சாது போலத் தோற்றமளிக்கும் குலத்திற்கு ஒரு நீதி எனும் கொடுமை தான் அனைத்துக் கொடுமைகளுக்கும் வேர் என என்றைக்குத் தான் உணர்ந்து கொள்ளப் போகிறோமோ! உணர்ந்து சிந்தை தெளியப் போகிறோமோ! சாதி ரீதியாக உள்ள ஒடுக்கல் முறையை (பார்ப்பன ஆதிக்கத்தை) கணக்கில் கொள்ளாமல் புரட்சியை முன்னெடுத்தால் அது தோன்றும் முன்பே அழிந்துவிடும்; அழிவின் பின்னரும் (சாதிய ஒடுக்கலின்) கொடுமைகள் தொடரும் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்ன பாடத்தைக் கண்ணெனக் கொண்டு (வர்க்கப் புரட்சியை முன்னெடுப்பதற்காக) சாதிக் கொடுமைகளை முதலில் களைவோம். (உயர் சாதியினர் உயர்நிலை வேலைகளிலும், மற்றவர்கள் கீழ் நிலை வேலைளிலும் குவிந்துள்ள இன்றைய நிலையை மாற்றி அனைத்து சாதியினரும் அனைத்து நிலை வேலைகளிலும் இருந்தே ஆக வேண்டிய அவசியத்தை ஏற்படுததுவோம்.)
 
- இராமியா

Pin It