மருத்துவர்களாலும்
நிர்ணயிக்க முடியாத நேரத்தை
நிச்சயித்து விடுகிறது
நீதித்துறை..!

தூக்குக் கொட்டடியில்
மரணம் நிகழும் வேளை..!

புனையப்பட்ட வழக்குகள்

சித்ரவதைக் கூடத்தின்
செயல் திட்டங்கள்

வன்முறையின் வழியில்
வலி தாங்க இயலாத
வாக்குமூலங்கள்...!

பொய்மையும் கயமையும்
பொங்கிப் பிரவகிக்கும்
சட்டத்தின் ஓட்டையில்
குரூரத்தின்
குருதி ஊற்றுக்கள்..!

ஊடக யூகங்களால்
பிடிபட்ட பூனைகள்
புலிகளாக்கப்படுகின்றன..!

எல்லா சட்டநூல்களையும்
பொய்யாக்கி விடுகின்றன
பூணூல்கள்..!

சட்டத்தின் கயிற்றில் இறுகும்
சாமானியனின்
உயிர்கள் மட்டும்..!

உயிரைப் பறிக்கும் உரிமை
இயற்கைக்கு மட்டுமே!
எவனுக்கும் இல்லை..!!

கழுத்து நெரிபட்டு
கடைசியாய்
கதறித் துடிக்கும்
உயிரின் ஓலத்தில்
செத்து விடுகிறது
உலகின் மனித நேயம்..!
இந்தியாவின்
இறையாண்மை..!

தேசியப் பறவையைக்
கொன்றால் குற்றம்..!
தேசியம் நம்மைக்
கொன்றால் குற்றமல்ல..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It