சீறும் எரிமலையாகவும்
சுழன்றடிக்கும் புயல்மழையாகவும்
பிரயத்தனப்படும் பிரளயத்தில்
சிக்கிய தேகம்,
பிரபஞ்சத்தின் ஒரு உச்ச கணத்தில்
மேலே எழும்பி,
உயிர் அதனிடத்தும் பிரிந்துலவி
பின்பு இரண்டும் மீண்டும் கலந்தது...
சுற்றிய சூழ்கொடி இன்னமும்
அறுக்கப்படாமல் கிடக்கிறது,
என் பிண்டத்திலிருந்து பிரிந்த
ஒரு துண்டம்...
என் சிசுவாகிய நீயும்
ஒரு சிறிய அளவு அண்டம் !
உன்னைத் தொட்டு தூக்குகிறேன்
முதன் முறை,
என் தீண்டலின் உணர்ச்சியில்
உனக்குள் ஒரு அதிர்ச்சி
அதைத் தொடர்ந்து சிறு சிணுங்கல்,
நீ அழுவதற்காக
முயற்சி செய்கிறாய்
நான் அழுது விட்டேன் !
கால்களுக்கிடையில் இன்னும்
மரண வலி !
எனையாள வந்த உனக்கோ
அது பிறப்பின் வழி !
முகங்காண முடியாவிட்டாலும்
எங்கோ பார்த்து சிரிக்கிறாய் !
இதழ்குவியும் சிரிப்பும்
முகங்கோணும் அழுகையும்
மொழியாக நிறைந்த உன்னுலகத்தில்
சத்தங்கள் மட்டுமே
சங்கேதக் குறிப்புகள்...
கூரைக்கு வெளியே
வெடித்துச் சிதறும்
கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும்
எதிராக ஒலிக்கப் போகும்
உன் உரிமைக் குரலுக்காக
ஒரு இனமே காத்திருக்கிறது
நீ என் உயிரின் உருவம்
ஈனநிலைமாற்ற வந்த
விதியின் வடிவம்...!
- அவனி அரவிந்தன்
மரண வலி !
எனையாள வந்த உனக்கோ
அது பிறப்பின் வழி ! Aravindhan arumaiyana varigal......or u pen thai endra isthanathai adaiyum oor uchakattahai ...arputhamaga un kai peasiirrukirath u eluthhukalal... . keep it up
RSS feed for comments to this post