ஜெயலலிதா திருந்தி விட்டாரென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. “கண்டிப்பாக ஈழம் பெற்றுத் தருவேன்” என்று உரத்த குரலில் சபதமிடும் ஜெயலலிதா, தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் இதை மாற்றிப் பேசமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஜெயலலிதா நாடகமாடுகிறார் என்பதை யாரும் விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டியதில்லை. ஆக இந்த அளவில் நாம் ஜெயலலிதாவை நம்பலாம். ஆனால் கண்டிப்பாக கருணாநிதியை எந்த விதத்திலும் எள்ளளவும் நம்பக்கூடாது என்று அவரே நிருபித்து வருகிறார்.

Jayalalitha's campaignசகோதர யுத்தம் கூடாது என்று கண்ணீர் விடுகிற இந்த கருணாநிதி, எண்பதுகளில் எம்.ஜி.ஆர் மீது கொண்ட பகைமையினால் ஈழப்போராளிக் குழுக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டதை நாம் பெருந்தன்மையுடன் மறந்து விட்டோம். பிறகு 93இல், விடுதலைப் புலிகளைக் கொண்டு தன்னை வைகோ கொல்லப் பார்கிறார் என்று தனது சுயலாபத்திற்காக விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தியதையும் நாம் மறந்து விட்டோம். கடந்த வருடம்கூட, வைகோ தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளவர், தன்னைக் கொல்லத் திட்டமிடுகிறார் என்று தயாநிதிமாறன் ஜனாதிபதியிடம் பிராது கொடுத்ததும் நமக்கு நினைவில் இல்லை. (வைகோவிற்காக பரிந்து பேசவில்லை. அவர் புலியல்ல, மியாவ்)

தற்போது நடந்து வரும் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து, தமிழகமெங்கும் போர்நிறுத்தம் கோரி போராட்டங்கள் வெடித்தபோது, இந்தப் போராட்டத்தை திசைதிருப்ப கருணாநிதி நடத்திய நாடகம்தான், மக்களிடம் நிவாரணநிதி வசூல் செய்தது. எத்தனை கோடி ரூபாய்களை நாம் வசூல் செய்தாலும், அதைவிட பத்து மடங்கு அதிகமான பணத்தையும் பொருளையும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அவர்களது உறவுகளுக்காக சேகரிக்க முடியும் என்பது கருணாநிதி அறியாததல்ல. அவர்கள் நம்மிடம் பசியென்று பிச்சை கேட்கவில்லை, உயிரைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்கள்.

பிறகு ஒருபக்கம் மனிதச் சங்கலி, கண்ணீர்க் கடிதம் என்றும், மற்றொரு பக்கம் இனப்படுகொலையை மக்களிடம் கொண்டு செல்லும் இன உணர்வாளர்களை ஒடுக்குமுறை சட்டங்களில் கைது செய்து மக்களை பயமுறுத்தியதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

கருணாநிதிக்கு வயதாகி விட்டது, வேட்டியை நனைத்துக் கொண்டார் என்று வக்கிரமாக ஞாநி எழுதியபோது, ஞாநியை பார்ப்பானென்று திட்டினோம். ஆனால் பிரபாகரனைப் பிடித்தால் கௌரவமாக நடத்த வேண்டுமென்று அதே வக்கிரத்தோடு கருணாநிதி சொன்னபோது எந்த சுவற்றில் போய் நாம் செய்தோம்?

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத்தமிழரைக் கொன்றொழிக்கும் இந்திய அரசு என்பது சோனியா காந்தியின் அரசு மட்டுமல்ல, அது கருணாநிதியின் அரசும்தான் என்பதை நாம் யாருக்காக இன்னும் மறைக்கிறோம்?

ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைக்கு பார்ப்பனிய அரசியல்தான் காரணமென்று சிறிதுகாலம் முன்புவரை நாம் திடமாக நம்பினோம். சோ, இந்து ராம், சு.சாமி, ஜெயலலிதா என்று பார்ப்பனர்களாய்ப் பார்த்து வசைபாடினோம். கருணாநிதி மட்டும் என்ன செஞ்சு கிழிச்சுட்டாரு என்று பார்ப்பன நண்பர்கள் கேட்டபொழுது, அவர் ஆட்சியில் இருப்பதால்தான் நாங்கள் இந்தளவாவது பேசமுடிகிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம். இன்றும் பார்ப்பனர்கள் நமக்கு எதிராய்த்தான் இருக்கிறார்கள். தமிழின விரோத கருத்துகளை/ செய்திகளை ஊடகங்களில் நமக்கெதிராய் பரப்பி வருகிறார்கள். ஆனால் அவர்களையும்மீறி நம் தரப்பு நியாயங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னே கொண்டு செல்ல முடிகிறது. இளைஞர்களில், ஒரு சில பார்ப்பனர்கள்கூட நம் பக்கம் வந்து நிற்கிறார்கள்.

ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, கபட நாடகமாடி, மக்களை வஞ்சிக்கும் கருணாநிதியின் துரோகத்தை நாம் மிகத் தாமதமாகவே புரிந்து கொண்டோம். இராஜாஜியைப் பற்றி கருணாநிதி முன்பொருமுறை சொன்னாராம், இராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை, அந்த மூளையெல்லாம் வஞ்சகம் என்று. இராஜாஜி செத்துவிட்டார், அந்த இடத்தில் இப்போது கருணாநிதி. கருணாநிதிக்கு உடம்பெல்லாம் மூளை, அந்த மூளையெல்லாம் வஞ்சகம், துரோகம், வக்கிரம், சுயநலம்.

ஜெயலலிதா கொடுமைக்காரி. இந்துத்துவ அடிப்படைவாத கருத்துடையவர். அவருடைய ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இன்றுபோல் அவர் நாளையும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார் / செயல்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஒரு நப்பாசை உண்டு. ஜெயலலிதா ஒரு பிடிவாதக்காரி. அந்த பிடிவாதத்திற்காகவாவது, இன்னும் கொஞ்ச நாளைக்கு ஈழம்தான் தீர்வு என்று பேசமாட்டாரா என்றொரு நப்பாசை.

கூடவே இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன ஆசைகளும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருமென்று பலரும் ஆருடம் சொல்கிறார்கள். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும். நள்ளிரவில் கருணாநிதியை அவருடைய சின்ன வீட்டிலிருந்து கைது செய்ய வேண்டும். “அய்யய்யோ கொல்றாங்கப்பா” என்ற கருணாநிதியின் அலறல் நாடகத்தைப் பார்க்க வேண்டும். மானங்கெட்ட வீரமணி ஜெயலலிதா காலில் போய் மீண்டும் மண்டியிடுவதைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு பழைய கோபம் பாக்கியிருந்தால், இருள்நீக்கி சுப்பிரமணியின் மீதான கொலை வழக்கை ஒழுங்காக நடத்த வேண்டும்.

ஈழத்தில் மக்கள் படும் இன்னல்கள் பற்றிய செய்திகள் இன்னும் நம் மக்களுக்கு பெரிதாகப் போய் சேர்ந்ததாகத் தெரியவில்லை. கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகள் தொடர்ந்து இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் கிராமங்களுக்கும் ஈழத்துச் செய்திகளை கொண்டு செல்லும் மிகப்பெரும் வலிமை ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உண்டு. இந்தத் தேர்தலில், கருணாநிதி + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வதற்கு ஜெயலலிதாவிற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. முக்கியமாக, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டு மற்றும் குடும்ப அரசியல். இவைகளைவிட ஈழத்தமிழர் பிரச்சனையை அவர் முன்னெடுத்திருப்பது நமக்கு சாதகமான விசயம். இந்த தேர்தல், தமிழ் ஈழ ஆதரவு X எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் யார் பக்கம் என்று பார்ப்போம்.

எந்த காலத்திலும் இரட்டை இலைக்கு வாக்களிப்பேன் என்று நான் நினைத்ததில்லை. தலைவிதியின் மீது நம்பிக்கையில்லை. ஆனால் இப்போது விதி என்று சொல்வதைத் தவிர வேறு பதிலில்லை. உங்கள் ஓட்டு எதிரிக்கா? துரோகிக்கா? என்றொரு நிலையில், எதிரியை மன்னிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. முதலில் துரோகியை ஒழித்துவிட்டு, பிறகு எதிரியை கவனிக்கலாம். ஆகவே, போடுங்கம்மா ஓட்டு! இரட்டை இலையைப் பார்த்து!!! 

- பிரபாகரன் அழகர்சாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It