(முந்தைய பகுதி - ரூ.500, 1000 செத்தது ஏன்? மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா! - 2)

கோமாவில் வீழ்ந்த தனது தேசியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு பொருளார விதிகளுக்கு முற்றிலும் புறம்பான கடன் பொருளாதாரம் என்பதை நடைமுறைப்படுத்த அமெரிக்கா துவங்கியது. வங்கிக்கடனை மக்களுக்கு வாரி வழங்கியது. அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்வுக்கான ஆதாரமாக வங்கிக்கடன் மாறியது.

trump putin

            தனது பொருளாதார சரிவைத் தடுக்க ரசியா, ஈரான் ஆகியவற்றின் எண்ணெய், எரிவாயு சந்தைகளை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டது. அய்ரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு தரைவழிப் பாதை அமைத்து எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல முயன்ற அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைக்காத நாடுகளின் ஆட்சியாளர்களை பதவியிலிருந்து தூக்கி எறிய சதிசெய்தது.

            இதற்காக அய்.எஸ். தீவிரவாத அமைப்பை உருவாக்கியது. அதற்குத் தேவையான நிதி, ஆயுதம் ஆகியவற்றை சவுதி அரேபியா மூலமாக வழங்கியது. ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றிய அய்.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றி வைத்தனர்.

            தனது திடட்த்திற்கு எதிராகவும், ரசியாவிற்கு ஆதரவாகவும் உள்ள சிரியா அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து தூக்கி எறிய தனது ஆதரவு குழுக்கள் மூலம் உள்நாட்டுப்போரையும் தூண்டிவிட்டது.

            எகிப்தில் ராணுவப் புரட்சியை தூண்டிவிட்டு அதன் அதிபரை பதவியில் இருந்து விரட்ட முயன்றது.

            துருக்கி நேட்டோவில் இருந்தாலும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒத்துழைக்காததால், தனது ஆதரவு குழுக்கள் மூலம் ரசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது. தனது ராணுவத்தின் செயலுக்காக மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து துருக்கி, ரசியாவுடன் சமரசம் செய்துகொண்டது. ரசியாவின் கோபத்திலிருந்து தப்பிக்க, துருக்கி தன்னிடம் வரும் என்ற அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறவில்லை. இதனால் துருக்கி அதிபருக்கு எதிராக ராணுவப்புரட்சியை தூண்ட திட்டமிட்டது. இதை உளவறிந்த ரசியா, துருக்கி அதிபருக்குத் தெரிவித்தது. அமெரிக்காவின் ராணுவப் புரட்சி முயற்சியை முறியடித்தது துருக்கி. அமெக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது நாட்டின் வழியே ரசியா எண்ணெய்க் குழாய் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.             

            இதே வேளையில் சிரிய அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரசியா தனது விமானப்படையை அனுப்பி நேரடியாக களத்தில் இறங்கியது. சிரியாவின் உள்நாட்டு கலகக்குழுக்கள் மற்றும் ஐஎஸ் தீவரவாதிகள் மீது கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐஎஸ் தீவரவாதிகளை முறியடிக்க போரிட்டு வரும் அரசு படைகளுக்குத் தேவையான நேரடியான கள உதவிகளை ஈரான் செய்து வருகிறது.  இதனால் அமெரிக்காவின் ஆதரவு கலகக் குழுக்களும், ஐஎஸ் தீவரவாதிகளும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.  அமெரிக்கா திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விழி பிதுங்கி நிற்கிறது.

            இதனோடு ஐரோப்பாவிற்குத் தேவையான இயற்கை எரிவாயுவை உக்ரேன் வழியாக குழாய் மூலம் ரசியா அனுப்பி வருகிறது. இந்த எரிவாயுக் குழாய் செல்லும் பாதையை உக்ரேன் ஆட்சியாளர்கள் மூலம் அமெரிக்கா தடுக்க முயன்றது. இதற்கு பதிலடி கொடுத்த ரசியா தனது எரிவாயுக் குழாய் செல்லும் பகுதியையே அம்மக்களின் ஆதரவோடு தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்காவின் முகத்தில் கரியைப் பூசியது.

            அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியாலும், ஆசிய, ஐரோப்பிய எண்ணெய், எரிவாயு சந்தையைக் கைப்பற்ற முனைந்த அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்ததாலும்,  உலக நாடுகளிடையே அரசியல் ரீதியாக அமெரிக்கா பின்னடைவை சந்தித்தது.

            அமெரிக்காவின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட ஜெர்மனி தனக்குத் தேவையைான எரிவாயுவைப் பெறுவதற்கு  இரண்டாவது ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் செய்து கொண்டது.

            ஆசியாவில் அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருந்த தாய்லாந்து மற்றும் மலேசியா சீனாவுடன் இணைந்து கொண்டன.

             முதலும் கோணல், முற்றிலும் கோணல் என்பதற்கு உதாரணமாகத் திகழும் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால்,  ரசியாவுடன் நேருக்கு நேராகப் போரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்படி ஒரு போரில் ரசியாவுடன் ஈடுபட்டால், அது மூன்றாம் உலகப் போராக ஆகிவிடும். இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றிருந்தாலும் நேச அணியில் இருந்த பிரிட்டன் தனது உலக மேலாதிக்கத்தை அமெரிக்காவிடம் இழந்தது.  மூன்றாம் உலகப்போரில் அமெரிக்கா வெற்றியடைந்தாலும் தனது உலக மேலாதிக்கத்தை இழப்பதுடன், இதுவரை அது சந்திக்காத பெரும் அழிவையும் சந்திக்க நேரிடும். இதை விரும்பாத அமெரிக்க முதலாளிகளில் ஒரு பிரிவினரும், மக்களும் டொனால்டு ட்ரம்ப்பை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

            அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டதால் மூன்றாம் உலகப்போர் தவிர்க்கப்பட்டுள்ளது என்று ரசிய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

            அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஆட்சிக்கு வந்தால் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன், உலக நாடுகளோடு அனைத்து விவகாரங்களையும் பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காண முற்படுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

            அதன்படி தனது நூறுநாள் செயல் திட்டத்தையும் அறிவித்துள்ளார். உருக்கு, கார், மருத்துவம் ஆகிய துறைகளின் உற்பத்தி முழுவதும் அமெரிக்க மண்ணில்தான் நடக்க வேண்டும். அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களில் ஆசியாவைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் ஏற்புடையது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

            அமெரிக்க அதிபரின் இந்த செயல்திட்ட அறிவிப்பினால், தாங்கள் இழந்த வேலையை அமெரிக்க மக்கள் மீண்டும் பெறப் போகின்றனர். அமெரிக்காவுக்காக அந்த வேலையை இதுவரை செய்து வந்த ஆசியாவைச் சேர்ந்தவர்கள் தமது வேலையை இழக்கப் போகின்றனர். அமெரிக்க தேசியப் பொருளாதாரம் வலுவடையும். இதுவரை அந்த வருவாயைப் பெற்று வந்த ஆசிய நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்திக்கப் போகின்றது.

            அமெரிக்கா, டாலரின் மதிப்பை அதிகரிக்க வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்த உடனே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.76 என்ற அளவுக்கு சரிந்தது. டாலரின் மதிப்பு எந்த அளவுக்கு உயர்கிறதோ அந்த அளவுக்கு அமெரிக்காவிடம் கடன் வாங்கியுள்ள நாடுகளின் கடன் அளவும் அதிகரிக்கப் போகிறது.  

            உலகமயம், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க ஏற்றுமதியை பெற்றுத் தந்தது. இதன் மூலம் இந்த நாடுகளின் பொருளாதாரம் முற்றாக ஏற்றுமதியையே சார்ந்திருந்தது. இப்போது அமெரிக்க சந்தையை இழக்கப் போகும் இந்த நாடுகள் அனைத்தும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.

இதை எதிர்பார்த்திருந்த சீனா தன்னை தற்காத்துக் கொள்வதோடு, அமெரிக்க உலக மேலாதிக்கத்தை வீழ்த்த மாற்றுத் திட்டங்களையும் செயல்படுத்தத் துவங்கிவிட்டது. தனது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த தனது நாட்டுத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்க ஆதிக்கத்தை வீழ்த்த அய்.எம்.எப், உலக வங்கி ஆகியவற்றுக்கு மாற்றாக இரு நிதி அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. உலக கடல்வழி மார்க்கம் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, எண்ணெய் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தி வருகிறது. இதிலிருந்து எண்ணெய் வர்த்தகத்தை விடுவிக்கும் வகையில் ஆசியாவையும், அய்ரோப்பாவையும் இணைக்கும் தரைவழிச் சாலை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.  

            அமெரிக்க ஏற்றுமதி வர்த்தக இழப்பை ஈடுகட்ட தென்கொரிய முதலாளிகளில் ஒரு பிரிவினர் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.

            அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை இழக்கப்போகும் ஆசிய நாடுகள் அனைத்தும் தமது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டன.

            ஆனால் இந்தியா இதற்கு நேர் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறது.

(தொடரும்)

- சூறாவளி

Pin It