கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி கடந்த ஓராண்டிற்கு மேலாக இடிந்தகரையில் திரு உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் அறவழியில் போராடிவருவது அடிப்படை சனநாயக உரிமை. ம.தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மக்கள் விடுதலை, திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்.யு.சி.ஐ, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட தமிழகத்தின் கட்சிகள் இடிந்தகரை மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதுடன், இக்கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்கின்றனர்.

மார்ச்-19, 2012 காவல் துறை இறக்கப்பட்டதைக் கண்டித்து மார்ச்-23 அன்று நெல்லை பாளை திடலில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு கைதானது குறிப்பிடத்தக்கது. போராடிய மக்கள் மீது ,ஆதரவாளர்கள் மீதுபொய் வழக்குப் போட்டு சிறை வைத்தது. "நான் உங்களில் ஒருத்தி" என தொடக்கத்தில் கூறிய தமிழக முதல்வர் இன்று "அணு உலை எதிர்ப்பாளர்களின் மாய வலையில் சிக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார். முதல்வர் எந்த மாய வலையில் எதற்காக சிக்கியுள்ளாரோ?

 ஓராண்டுக்கு மேலாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் இடிந்தகரையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வந்த ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் மீது 150 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்துள்ளது தமிழக அரசு. செப்-9, அன்று கூடங்குளம் நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையோரம் சென்றவர்கள் துணை ரானுவப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரவு முழுவதும் கடற்கரையில் படுத்திருந்த மக்களை செப்-10 அன்று கடுமையாகத் தாக்கியது தாமிரபரணியை நினைவு படுத்தியது. அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிந்தகரை, கூடங்குளம், கூட்டன்குளி உள்ளிட்ட ஊர்களில் வீடு வீடாகப் புகுந்து கடுமையாகப் பொருள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிளாஸ்டிக் படகுகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளனர். தூத்துக்குடி- மனப்பாட்டில் அந்தோணி ஜான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

மக்கள் பாதிக்கப்படுவதை சகிக்கமுடியாமல் தான் சரணடையத் தயார் என அறிவித்தார். இடிந்தகரை வந்த உதயகுமாரை கூடியிருந்த மக்கள் கைதாகக் கூடாது என மறுத்துள்ளனர். இந்திய, தமிழக அரசுகள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அணு உலையைத் திறக்க, ஆயுதப்படையை இறக்கி கொடுமைபடுத்துகின்றனர்.

உதயகுமார் அவர்களே! "நீங்கள் மக்களுக்காகப் போராடி வருகின்றீர்கள். நாடு முழுவதும் அணுஉலை எதிர்ப்பு விவாதமாகியுள்ளது. மக்களின் உணர்வுகளை மதித்து காவல்துறையில் சரணடையாதீர்கள்" என கேட்டுக்கொள்கிறேன். திரு கேஜ்ரிவால் போன்றவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள். தமிழக அரசே! முதல்வர் அவர்களே! கூடங்குளத்தில் வீடு வீடாக நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருவதுடன், அப்பாவி மக்களிக் கைது செய்து வருகின்றனர். இக்கொடுஞ்செயல் உடனே நிறுத்தப் படுவதுடன் காவல்துறை திரும்ப அழைக்கப் படவேண்டும்.

- மீ.த.பாண்டியன், தமிழ் மாநிலச் செயலாளர், இ.க.க( மா-லெ) மக்கள் விடுதலை, பேச:9443184051

Pin It