2021 தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக மக்களுக்குப் பகையான பாசிச பாசகவைத் தோற்கடிப்போம்!”

என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த்தேச மக்கள் முன்னணி அழைத்த கலந்தாய்வுக் கூட்டம் ஏறக்குறைய 75க்கு மேற்பட்ட தமிழ் சமூக அரசியல் அமைப்புகளின் பங்கேற்புடன் 20-01-2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடந்தேறியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

1. 2014இல் பாசக மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் திட்டக்கமிசன் கலைப்பு, ஜி.எஸ்.டி., நீட் திணிப்பு, பண மதிப்பிழப்பு, உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டுச் சட்டம், இந்தி - சமற்கிருதத் திணிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், இரயில்வே, விமானம், துறைமுகம், இராணுவ தளவாடத் தயாரிப்பு என அரசுத்துறைகள் தனியாருக்குத் தாரைவார்ப்பு, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், 567 தொழிலாளர் நீதிமன்றங்கள் கலைப்பு, வேளாண் சட்டத் திருத்தங்கள், மின்சார சட்டத் திருத்தம் என சமூகநீதி, மாநில உரிமை, தொழிலாளர் – உழவர் நலன் ஆகியவற்றின் மீது வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

2. ஒரே தேசியம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்வு, ஒரே வேளாண் கொள்கை, ஒரே தேர்தல் என ஒற்றையாட்சி சர்வாதிகார வழியில் முன்னேறி வருகிறது பாசிச பாசக. இவ்வாட்சி, நிலவும் நாடாளுமன்ற அமைப்புமுறையைச் செயலிழக்கச் செய்து சிறுகும்பல் பாசிச சர்வாதிகாரக் கொடுங்கோல் ஆட்சியாக வளர்ந்து செல்கிறது.

3. நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தல், ஆளுநர் தலையீடு, ஜி.எஸ்.டி. பங்குதொகையைத் தரமறுத்தல், வேளாண்மை, சட்ட ஒழுங்கு, கல்வி என மாநிலப் பட்டியல் விவகாரங்களில் மத்திய அரசு சட்டமியற்றுதல், தமிழகக் கட்சிகளைச் சிதறடித்தல், தமிழக அரசியலைக் குழப்பி நிலையற்ற தன்மைக்கு மாற்றுதல் (Destabilize) என சங்பரிவார பாசிச பாசக தில்லி அதிகாரத்தைக் கொண்டு தமிழகத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

4. பாசகவை ஒரு பாசிசக் கட்சியாகவும் தமிழ், தமிழர், தமிழக விரோத சக்தியாகவும், சமய சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சக்தியாகவும் தமிழ்நாட்டின் சமூக நீதி, மாநில உரிமை, மக்கள் நலன்பேண் அரசியல் ஆகிய மரபார்ந்த அரசியலுக்கு நேரெதிரான அந்நிய சக்தியாகவும் பிரகடனப்படுத்துகிறோம்.

தமிழக மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாசிச பாசகவைப் புறக்கணித்து அக்கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று பாசிச பாசக எதிர்ப்பியக்கத்தின் சார்பாக அறைகூவல் விடுக்கிறோம்.

5. 'பாசிச பாசக - எதிர் - தமிழ்நாடு’ என 2021 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் களம் அமைத்து பாசக போட்டியிடுகின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றி பாசகவைத் கட்டுப்பணம் கூடப் பெறமுடியாத வகையில் தோற்கடிக்க பாசிச எதிர்ப்பில் உறுதிபூண்ட அனைத்து சனநாயக ஆற்றல்களும் களங்காண்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

6. பாசிச பாசக தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டியது வரலாற்றுக் கடமையும். அவசரத் தேவையும் ஆகும். ஆகவே, பாசிச எதிர்ப்பில் அக்கறையுள்ள சனநாயக சக்திகள் அனைவரும் வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் பாசிச பாசகவைத் தோற்கடிக்கும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

(இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மகிழன் கலந்து கொண்டார்.)

ஒருங்கிணைப்புக் குழுவிற்காக,
பாலன்
தொடர்பு எண்கள் - 7010084440, 9047521117, 6379687413, 8056119257, 8778141813

Pin It