பாவையர் மீதொரு பாலியல் வன்முறை!
பூவையர் வாழ்வில் புகுந்தபுயல்!  – பாவலர்
நெஞ்சில் நெருப்பிது! நேர்மையும் சீர்மையும்
பஞ்சாய்ப் பறப்பதா பண்பு?

அன்புசெய்யும் பெண்கள் அழகுமிக்கார் என்பதனால்
வன்புசெய்ய முந்தி வரலாமா? – இன்புறுதல்
இப்படியா? பெண்கொலைகள் எங்கும் நடப்பதனை
எப்படி நாம்பொறுப்பேற்போம் இங்கு?

இவள்தாய்! இவள்தங்கை! ஏற்ற மனைவி!
இவரைப் பகுத்ததனால் ஏற்றம்! – தவறினால்
காட்டு விலங்குகள் நாட்டில் நடக்கின்ற
காட்சியில் தோன்றும் களை!

ஏமாந்த பெண் இருந்தால் எட்டு வினாடியில்
பூமாலை யைக்கசக்கப் போவாரே! – தேமா
திருடுகிற கள்வன் திருந்திட வில்லை!
மருந்திதற்குக் காணலாம் வா!

யாழ்தான்! குழல்தான்! அணங்குகள்! கற்பழித்து
வீழ்த்த நினைப்பாரை வீழ்த்துவோம்! – வாழ்நாள்
முழுவதும் தீயோர் முடங்கிச் சிறையில்
அழுவதே செய்க அரசு!

பெண்குழந்தை கூடப் பெருந்தீங்கு காண்கிற
புண்ணாகும் செய்தி புறப்படுதே! – கண்ணற்றோர்
காமத்தால் பிஞ்சுகள் கண்டு நடுங்கினார்
தாமரைப்பூ வாழத் தடை!

Pin It