muslim 485

பக்கீர்களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண் டேனே மற்றும் நாயனே நாயனே என வரும் பாடல்களும், நிராமயக் கண்ணிப்பாடல்களும் உள்ளடங்கும்.

ஏகப்பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற

காகம் அதுவானேன் கண்ணே ரஹ்மானே...

... ...

ஊனெடுத்த நாள்முதலாய் உபயோகமற்ற நான்

கானில் நிலவானேன் கண்ணே ரஹ்மானே...

... ...

வேட்டைப் பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்

காட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே...

... ... ...

சோற்றுப் பொதியைச் சுமந்தே அலைந்து சுழற்

காற்றுத் துரும்பானேன் கண்ணே ரஹ்மானே...

குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக்கொண்டே வருகிறது. இறைத் தேடலை இதற்கான உபாயமாக்கவும் இது விரும்புகிறது.

அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக் கதறி அழுமெனக் கையணைத்து அருள்புரியக் கோரும் குரல் ரஹ்மான் கண்ணியில் இன்னொரு விதமாய் ஒலிக்கிறது.

ஏகப் பெருவெளியில் இருள் சூழ்ந்த கடலில் பறந்து தளர்ந்து போன காகம் உட்கார ஒரு கம்பமற்ற நிலையில் பரிதவிப்பதாக தன்னை குறிப்பீடு செய்கிறார். காட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டை நாய்க்குப் பதிலாக வேட்டைக்காரனையே கடித்துக் குதறும் வெறிநாயைக் கைப்பிடித்து போகலாமாவென பிறிதொரு பாடல்வரிகள் கேட்கின்றன.

கீர்த்தனைப் பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே என்றும் மாயனே மாயனே என்றும் தூயனே தூயனே என்றும் நேயனே நேயனே என்றும் கத்திக்கத்தி தொண்டை கத்திச் செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது.

இரக்கத்துணிந்து கொண்டேனே எனத் துவங்கும் குணங்குடியாரின் பாடல் வரிகள் கொடிகட்டிக் கொண்டே கோடி தனங்குவித்தந்த மகிழ்ச்சியால் கூத்துகளாடுவதையும், தேடிய பொருள் புதைத்து வைத்திருப்போரும், தேசாதி தேசங்கள், ராஜாங்கங்கள் ஆண்டிருப்போரும், தனக்கு ஈடாக எவரும் இல்லை யென ஆணவம் கொண்டிருப்போரும் கடைசியில் செத்திங்கு போவார்கள் என்ற ஞானத்தை பேசுகிறது. யானை ரதமேறும் அரசர் பெரு வாழ்வு முதற் கானல் நீரல்லவோவென நிலையற்ற இருப்பை பேசுகின்றது. செல்வ எதிர்ப்புக்கான ஒரு ஆயுதமாக மரணத்தை முன்வைக்கும் குணங்குடியார் ஓடியலைந்து இவ்வைய முற்றும் உழன்று உழன்று நீ தேடியெடுத்த திரவியம் யாவையும் செத்தபின்பு நாடி எடுப்பதுண்டோ என கேள்வி எழுவுகிறார். இப்பாடல்வரிகள் ஆடம்பர வாழ்வுக்கும் செல்வ அதிகாரத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை பேசுகின்றன. அதீத இன்பதுய்ப்புக்கு எதிர்வினையாக இதைக் கருதலாம்.

நிராமயக்கண்ணியில் இறையை சமயச் சூத்திரங் களுக்குள் போட்டு அடைத்துவிட முடியாத எங்கும் நிறைந்த சக்தியாக கருதும் போக்கின் விளைவாகவே வேதங்களாலும் வெளிப்படாச் சுந்தரமாஞ்சோதி எனக்கென்றோ துவங்கு நிராமயமே என்கிறார். ரிக்,யசூர், சாம, அதர்வண வேதங்களின் மரபாகவும், சபூர், தவ்ராத், இஞ்சில், குர்ஆன் என அரபுலக மரபு புனித நூல்களையும் வேதங்கள் என இச்சொல்லாடல் குறிப்ப தாகவே தென்படுகிறது. வேதமறைபொருளை, வேதாந்த துட்கருவை, ஓதியும் உனை அறியமுடியாத நிலையையும் மந்திரத்துக்கெட்டாத மறைபொருளாகவும் இருப்ப தையும் குணங்குடியார் பராபரக்கண்ணியில் காட்சிப் படுத்துகிறார். மாச்சரியங்களையும், பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கும் மதத்தின் பிடிகளி லிருந்து விடுபட்டு முக்தி பெற காட்சி தருவது எப்போது எனவும் வினவுகிறார். சாத்திரங்களை ஓதி தமக்குள் சண்டையிட்டு கொள்ளும் சழக்கர்களுக்கு உன்னருள் மாத்திரை போலாவது வருமாவென சந்தேகங் கொள் கிறார். மதபேதமோதி மதிகெட்டவர்க்கு எட்டாத வான்கருணை வெள்ளமென இறையை மனம் நெகிழ்ச்சி யுற்று பாடுகிறார். உள்ளத்தின் உள்ளுக்குள் உறைந் திருக்கும் இறையைத் தொழுவதற்கு பள்ளியறையேன் என நிறுவன சமய வழிபாட்டிற்கும், சடங்கியல்களுக்கும் அப்பால் இறையைத் தேடுகிறார்.

வாழ்வின் இருப்பின் மீதான அதிருப்தி, கோபம், இயலாமை, அதிகாரங்கள், ஆடம்பரங்கள், சமயத்தின் பெயரிலானப் பேதங்கள் அனைத்தின் மீதும் தனது எதிர்க்குரல்களைப் பதிவுசெய்ய குணங்குடியார் தவறியதில்லை.

Pin It