இரண்டு புதினங்களில் இடம்பெற்றுள்ள பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற தாய் தலைமைச் சமூகத்தின் எச்சங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமையும். தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வாழும் இருளர் பழங்குடி களைப் பற்றி பனியில் பூத்த நெருப்பு என்ற புதினத்தை ந.நஞ்சப்பன் படைத்துள்ளார். இரண்டு புதினங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து தாய் தலைமைச் சமூகத்தின் எச்சங்களைப் பிரதிபலிக்கின்ற வாழ்வியல் கூறுகள் இடம்பெறும். இறுதியாக புதினங்களில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் கூறுகளிலிருந்து பழங்குடி மக்களின் ஆழ்மன உணர்நிலையின் அடிப்படையில் தாய் தலைமைச் சமூகத்தின் எச்சம் வெளிப்படுகின்ற முறை விளக்கப்பெறும்.

sa balamurugan book 233சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப் பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைத் தொழிலைக் கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாயப் பூமியும் இருக்கின்றது.

கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்கு முறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன் படுகிறார்கள். கடன் கொடுத்த வனாகிய மணியக்காரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக் கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல் கிறான். மணியக்காரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான்.

பேதன் இறந்த பிறகு மணிராசன் திருவிழாவின் ஆவி வழிபாட்டில் சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்கு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக் கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக் கொண்டு தாய்வீடு சென்று விடுகிறாள். ஒருநாள் காலைப் பொழுதில் போலீஸ் காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர்.

“வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச் சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப் படுத்தணும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக் கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல் துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்கலம் தருகின்றான். அதிரடிப் படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறை பிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள்.

சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப் பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட மாதி மகிழ்ச்சி அடைகிறாள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி யூனியனுக்கு உட்பட்ட பழமரத்துப்பட்டி கிராமத்தின் பண்ணையார் கோவிந்தரெட்டியின் ஒடுக்கு முறைகளை ஒழிப்பதை மையமாகக் கொண்டு பனியில் பூத்த நெருப்பு என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தேன்கனிக்கோட்டை என்பது குட்டி இந்தியாவைப் போன்ற பகுதியாகும். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். தளி என்ற பகுதி குட்டி இங்கிலாந்து என்று போற்றப்படுகின்றது.

மலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்கள் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள். மலையடிவார கிராமங்களில் ரெட்டி, கவுடா, நாயுடு, பறையர், சக்கிலி, இருளர் பழங்குடிகள் போன்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுவுடைமை இயக்கத்தினரின் முயற்சிகளால் இவர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். பழமரத்துப்பட்டி பண்ணையார் கோவிந்தரெட்டி இரண்டாயிரம் ஏக்கர் பட்டா நிலங்களுக்கும் ஆயிரம் ஏக்கர் பட்டா இல்லாத நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

இவருக்குத் தெரியாமல் ஊரில் யாரும் நிலம் வாங்கவோ விற்கவோ முயற்சி செய்யக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கின்றது. சிவண்ணா என்ற ஆசிரியர் பண்ணையாருக்குத் தெரியாமல் நிலத்தை வாங்கிவிடுகிறார். பண்ணை கோவிந்தரெட்டி ஏழு கொடிய சீமைநாய்களுடனும் அடியாட்களுடனும் சென்று சிவண்ணாவையும் அவனது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்குகின்றார். அவனது மூன்று பிள்ளைகளையும் சீமைநாய்கள் கடித்துக் குதறுகின்றன. ஊர் மக்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார்கள்.

மருத்துவ முயற்சிகள் பலனின்றி மகன் சிவா இறந்துவிடுகின்றான். மனைவி சுகுணா அவமானம் தாங்காது தற்கொலை செய்து இறக்கிறாள். ஊர்க்காரர்கள் பலிவாங்கும் உணர்விற்கு ஆளாயினர். இந்தச் சம்பவம் பற்றிய செய்திகள் வேகமாக எல்லா பகுதிகளுக்கும் பரவுகிறது. ஊரில் கம்யூனிச இயக்கம் வளர்ச்சி காணத் தொடங்கியிருந்தது. சென்னையிலிருந்து கம்யூனிச கட்சியின் தலைவர்கள் வந்து இக்கொடுமைகளுக்கு எதிரான வேலைத்திட்டத்தில் ஈடுபடவிருப்பதாக செய்திகள் பரவின.

தேன்கனிக் கோட்டை வட்டத்தில் சில ஜமீன்தார்களும், மிட்டா தாரர்களும், இனாம்தாரர்களும் பெரும் நிலஉடமை யாளர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஆளுக்கொரு கட்சியைப் பிடித்து அரசியல் போர் வையைப் போர்த்திக் கொண்டிருந்தனர். பண்ணை யார்களின் ஒத்துழைப்புடனும் வனத்துறையின் ஒத்துழைப்புடனும் காட்டுக் கொள்ளையர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் வன வளங்களையெல்லாம் கொள்ளை யடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். தந்தங்களுக்காக யானைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பண்ணையார் கோவிந்த ரெட்டியைப் பழிவாங்கும் உணர்வுடை யவர்கள் புரட்சிகர இயக்கங்களில் வளர்ந்திருக்கிறார்கள்.

புரட்சிகர இயக்கமோ பண்ணையாரின் கொடுங்கோன்மையையும், வனங்களையும், வனமக்களின் வாழ்க்கையையும், அப்பாவி மக்களையும் சித்திரவதை செய்கின்ற வனத்துறை மற்றும் காவல்துறைக்கும், பண்ணையாட்களின் நலன்களுக்கு சாதகமாகிய அரசுக்கும் எதிராக தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்துகிறது. இறுதி யாக காவல்சிறையிலிருந்து வெளிவந்த போராட்டக் காரர்களும் வனத்திலிருந்து வெளிவந்த புரட்சிக்காரர் களும் ஒன்றிணைந்து கோவிந்தரெட்டியை படுகொலை செய்து பலி தீர்க்கிறார்கள்.

சோளகர்கள் வனத்துறையினரின் ஒடுக்குமுறையால் அரிதாகவே வேட்டையாடுகிறார்கள். தொட்டியின் அருகே இருக்கின்ற பாறைக்குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த மான்களில் ஒன்றை சோளகர் தொட்டியைச் சேர்ந்த மூன்று நாய்கள் தொட்டிக்கு விரட்டிச் செல் கின்றன. தொட்டியிலுள்ள இந்த நாய்கள் வேட்டைக்கு வாய்ப்புக் கிடைத்தால் இரையைக் கவ்விக்கொண்டோ அல்லது விரட்டிக்கொண்டோ தொட்டியினரிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன. சிவண்ணாவும், புட்டனும், மூன்று நாய்களின் உதவியோடு வேட்டையாடத் தயாராகிறார்கள். சிவண்ணா ஒரு கையளவு கருங்கல்லை எடுத்து அந்த மானைக் குறிவைத்து வீழ்த்துகிறான்.

வேட்டையாடப்பட்ட மானின் கறியை கூறுபோட்டு பங்கிடுகிறார்கள். முதல் பங்கை ஊரிலுள்ள விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். இரண்டாவது பங்கை ஊரின் முக்கியமானவர்களாகிய கொத்தல்லி மற்றும் கோல்காரனுக்கு ஒதுக்குகிறார்கள். மூன்றாவது பங்கை வேட்டையாடியவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைவிட பங்கில் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ளும் உரிமையுடையவர்கள். நான்காவது பங்கை ஊரில் மான்கறியை விரும்புபவர்களுக்கு பங்கிடு கிறார்கள். இறுதியாக வேட்டைக்கு உதவுகின்ற நாய் களின் பங்கை கொடுத்துவிடுகின்றார்கள். வேட்டையின் முதல் பங்கை விதவைப் பெண்ணுக்குக் கொடுப்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.

சோளகர்கள் தங்கள் பூமியில் மழை பெய்ய வேண்டி எங்குசீர்குட்டை என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். மழைத் தெய்வமாகிய எங்கு சீர்குட்டையை நினைத்து வனத்திலுள்ள தாண்ரி மரத்தில் வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள். மழை பொய்த்துப்போகின்ற சூழ்நிலையில் பெண்கள் மட்டுமே இணைந்து நிகழ்த்துகின்ற பூஜையாக அமைந் திருக்கின்றது. பூஜைக்குரிய நாளை கொத்தல்லியும் கோல்காரனும் குறிப்பிடுகிறார்கள். அந்த நாளில் வீட்டை சாணி கொண்டு சுத்தம் செய்கிறார்கள்.

தொட்டிப் பெண்கள் அனைவரும் வீட்டிலுள்ள தானியங்களில் உணவு செய்து மூங்கில் கூடைகளிலும் முறங்களிலும் எடுத்துக்கொண்டு வனத்திற்குச் செல்கிறார்கள். தொட்டி ஆண்கள் அனைவரும் மணிராசன் கோயிலில் நின்று பெண்களை வழியனுப்புகிறார்கள்.

வனத்திலுள்ள உயரமான தாண்ரி மரத்தினைச் சுற்றிலும் உணவை வைத்துக்கொள்கிறார்கள். மரங்களடர்ந்த வனத்தில் தங்களது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்கிறார்கள். வானத்தைப் பார்த்து எங்குசீர்குட்டை என்ற மழைத் தெய்வத்தை நினைத்து “மழை பொழி தாயே மழை பொழி” என்று கூட்டமாக வேண்டு கிறார்கள். வட்டமாக கும்மியடித்து ஆடுகிறார்கள்.

ஒருவர் மாறி ஒருவர் பாடுகிறார்கள். மழை இல்லாத தால் தங்களுக்கு நேர்ந்துள்ள துயரங்களைச் சொல்லி அழுகிறார்கள். எடுத்துவந்த உணவை மதிய நேரத்தில் உண்டு முடிக்கிறார்கள். உணவிற்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். மாலை நேரம் இருட்டத் தொடங்கியதும் மூங்கில் கூடைகளையும் முறத்தையும் அங்கேயே வீசிவிட்டு உடைகளை அணிந்து கொண்டு தொட்டிக்குத் திரும்பிச் செல்கிறார்கள். ஆண் களை வனத்திற்குள் அனுமதிக்காமல் பெண்கள் மட்டும் ஒன்றிணைந்து நிர்வாண நிலையிலிருந்து மழை தெய் வத்தை அழைப்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம். சோளகர்களது பூமியில் மழை பெய்யாமல் விவசாயம் பாதித்து வீடுகளில் சேகரித்து வைத்திருந்த தானியங்களும் முடிவடையப்போகின்றன. விவசாயத்திற்கும் வழியின்றி வேட்டைக்கும் வழியின்றி துயரடைகின்ற தருணங்களில் பெண்கள் காடுகளுக்குச் சென்று கிழங்கு தேடுகிறார்கள். கொத்துக் கருவி, கடப் பாரை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கிழங்கு களைத் தோண்டி சேகரித்து வருகிறார்கள். காடுகளுக்குச் சென்று உணவு சேகரிப்பதற்கு ஆண்களல்லாமல் பெண்கள் ஏன் செல்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.

nanjappan 400தளி பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி ஆனிமாத இறுதியில் வழிபாடு முடிந்த மறுநாள் இளைஞர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட மழைதேவர் உருவத்தைத் தூக்கி வருகிறார்கள். மழை தேவரை பூக்களாலும் வேப்பந்தழைகளாலும் அலங்காரம் செய்கிறார்கள். மழைதேவரின் உருவத்தை ஒருவன் தலையில் சுமந்திருக்கிறான். ஒருவன் மணியடித்துக் கொண்டிருக்கிறான்.

ஒருவன் திருநீறு தட்டை ஏந்திக் கொண்டிருக்கிறான். மற்றனைவரும் “அரகரா அரகரா” என்று கடவுளைப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள். முன் செல்பவர்கள் பறையை அடித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள். மழைதேவருக்கு அருகிலுள்ள ஒருவர் மழைவேண்டி பஞ்சப் பாடல் பாடுகிறார். அவர் பாட மற்றவர்களும் பாடுகிறார்கள். தெருத்தெருவாக எல்லா வீடுகளுக்கும் மழைதேவரை எடுத்துச் செல்கிறார்கள்.

மொந்தையிலும் செம்பிலும் ஒரு சிலர் குடத்திலும் தண்ணீர் எடுத்து மழைதேவருக்கு ஊற்றுகிறார்கள். மழைதேவரைச் சுமக்கும் இளைஞன் வலது மற்றும் இடதுபுறமாக சுற்றிக்கொண்டு ஊற்றப் படும் நீரை எல்லாப் பக்கமும் பரவலாக சிதறச் செய் கிறான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆரியம், சோளம், கம்பு ஆகிய தானியங்களை தானம் தருகிறார்கள். இறுதியாக ஊர்ப் பொது இடத்தில் கூடுகிறார்கள். கிடைத்த தானியங்களையும் காணிக்கைப் பணத்தையும் கணக்குப் பார்க்கிறார்கள். காணிக்கைப் பணத்தில் கடை களுக்குச் சென்று தேங்காய், பழம், வெல்லம், கற்பூரம், பூ, ஊதுபத்தி, திரிசனம் ஆகியவைகளை வாங்கி வருகிறார்கள். தானியங்களை தனித்தனியாக மாவாக்குகிறார்கள்.

மறுநாள் மழைதேவருக்கு பூஜை நடத்தத் தொடங்குகிறார்கள். மதியம் இரண்டு மணியளவில் மழைதேவரை அலங்கரித்து பறையிசை முழங்க ஏரிக்குப் புறப்படுகிறார்கள். மழைதேவரைப் பின்தொடர்ந்து மக்கள் வருகிறார்கள். ஏரியில் பந்தல் அமைக்கப் பட்டிருக்கிறது. நொச்சித் தழைகளாலும் வேப்பந் தழைகளாலும் தென்னம் ஓலையால் பின்னப்பட்டுள்ள பாய் ஆகியவற்றாலும் பந்தல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பந்தலில் வெள்ளைத் துணியைப் பாவாடையாக விரித்து மழைதேவரை அமர்த்துகிறார்கள். அருகில் கற்களை அமைத்து அடுப்பு மூட்டுகிறார்கள். தயாரிக்கப்பட்ட மாவுகளைக்கொண்டு கூழ் சமைக்கிறார்கள். அரிசி மாவில் வெல்லம் சேர்த்து பச்சைமாவு தயாரிக்கிறார்கள். கூழ், பச்சைமாவு, கடலை, பொரி ஆகியவற்றை மழை தேவருக்கு படையலிட்டு வழிபடுகிறார்கள். தேங்காயுடைத்து பூஜை செய்கிறார்கள். வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள். மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள். விதவைப் பெண்களை அழைத்து மழையை வரச்சொல்லி அழச்சொல்வதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.

மனித சமூக வரலாற்றில் பொருளாதார படிமலர்ச்சி யானது உற்பத்திக் கருவிகளது வளர்ச்சியின் அடிப் படையில் கீழ்வருமாறு அமைகின்றது. 1.காடுசார்ந்த பொருட்களை சேகரித்தல், 2.வேட்டையாடுதல், 3.மந்தை பராமரிப்பு, 4.விவசாயம் செய்தல், 5.வாணிகம் செய்தல், 6.வாணிக உற்பத்தி செய்தல் என்பதாக பொருளாதார படிமலர்ச்சி நிகழ்ந்துள்ளது.

உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத காலக் கட்டத்தில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தலே முதன்மைத் தொழிலாக அமைந்திருந்தது. சிறிய அளவில் வேட்டைக் கருவியும் விவசாயக் கருவியும் வளர்ச்சி கண்டிருந்த காலத்திலும்கூட காடுசார்ந்த பொருட்களைச் சேகரிக்கின்ற தொழிலே பிரதான சக்தியுடையதாக அமைந்திருந்தது. குழந்தைகளையும் கூட்டத்தையும் குழுவின் தாயார் வழிநடத்திய தாய் தலைமைச் சமூகத்தில் காடு சார்ந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை பெண்களே தலைமையேற்று கூட்டத்திற்கு பகிர்ந்தளித்துப் பராமரித்தார்கள்.

வலிமையுடைய வேட்டைக் கருவிகளும் விவசாயக் கருவிகளும் கண்டு பிடிக்கின்ற காலம்வரையிலும் இந்த நிலையே நிலைத் திருக்கிறது. குழுவின் அத்தனை மனிதர்களுக்கும் தேவையான பொருட்களை ஈட்டித் தருவதில் காடு சார்ந்த சேகரிப்பைவிட வேட்டையாடுதலும் விவசாயமும் முக்கியத்துவம் பெறத்தொடங்கிய பிறகு தாய்தலைமையிலிருந்து படிப்படியாக தந்தை அதிகாரத்திற்கு சமூகம் மாற்றம் பெறத் தொடங்கியது.

இயற்கையின் அங்க மாகிய பெண் படிப்படியாக செயற்கையின் அங்க மாகிய சொத்ததிகார ஆண்களுக்குச் சொத்தாக மாறினாள். இன்றையத் தொன்மையானப் பழங்குடிச் சமூக வாழ்விலும் விவசாயத்திற்கும் வேட்டையாடு தலுக்கும் வழியில்லாத சூழலில் காடுகளில் சென்று கிழங்கு களைச் சேகரிப்பதற்குப் பெண்கள்தான் செல்கிறார்கள். இந்த நடவடிக்கையின் மூலமாகச் சோளகர்கள் தங்களது ஆழ்மன உணர்நிலையில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரிக்கின்ற தாய்தலைமைச் சமூகத்துப் பெண்களை நினைவுகொள்வதாகச் செயல்படுகிறார்கள். ஆழ்மன உணர்நிலை என்பது சிக்மன் ஃப்ராய்டு விளக்குகின்ற நனவிலி மனத்தைக் குறிப்பதாகும். உணர்நிலை அறிவு என்பது சிக்மன் ஃப்ராய்டு விளக்குகின்ற நனவு மனத்தைக் குறிப்பதாகும். சோளகர்களது இத்தகைய நடவடிக்கை யானது கடந்தகாலத் தாய்தலைமைச் சமூகத்தின் காடுசார்ந்த பொருள் சேகரிப்புக் கடமையின் எச்சமாகத் திகழ்கின்றது.

வேட்டையாடிய இரையைப் பங்கிடும்போது முதல் பங்கை சோளகர்கள் தங்கள் ஊரிலுள்ள விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். தாய்தலைமைச் சமூகத்தில் வேட்டையாடிய இறைச்சி முழுமையும் தாயின் தலைமைக்கு உட்பட்டு பகிர்ந்துகொள்ளப்பட்டது. தந்தை அதிகாரச் சமூகத்தில் விதவைப் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகின்றது. கணவரை இழந்த பெண்ணை விதவை என்கிறார்கள். கணவர் என்பது தந்தை அதிகாரச் சமூகத்தின் அடை யாளம் ஆகும். தாய் தலைமைச் சமூகத்தில் சொத்துடைமை உற்பத்திமுறை வலிமையடையும்வரை ஆண் பாலினத்தை முதன்மைப்படுத்துகின்ற கணவன் மற்றும் தந்தை ஆகிய உறவுமுறையோ கருத்துக்களோ தோன்றியிருக்கவில்லை.

சோளகர்கள் தங்களது வேட்டையின் முதல் பங்கை ஒரு விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகின்ற வழக்கமானது தாய்தலைமைச் சமூகத்தின் மீது ஆண்களின் ஆழ்மன உணர்நிலையிலுள்ள மரியாதையின் எச்சமாகும். கணவரை இழந்த பெண்ணை கணவர் என்ற தந்தை யதிகார உறவு தோற்றம் பெறாத தாய் தலைமைச் சமூகத்தின் பெண்ணுக்குப் பதிலீடாகக் கருதுகிறார்கள்.

தேன்கனிக்கோட்டையில் இருளர்கள் வாழ்கின்ற பகுதியில் வறட்சிக் காலங்களில் மழை வேண்டி மழை தேவருக்கு படையலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வழிபாட்டில் வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள். விதவைப் பெண்கள் மழையில்லாமல் தம் மக்கள் துயரடைகின்ற நிலைமை களைப் பாடுவதன் மூலமாக மழை தேவருக்கு இரக்கம் உருவாகி மழையைப் பொழியச் செய்வார் என்பதாக நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையின் அடிப் படையில் விதவைப் பெண்கள் மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள்.

இந்த விதவைப் பெண்களின் மழை வேண்டுகின்ற நிகழ்ச்சியானது சொத்ததிகாரத்தின் அடிப்படையிலான தந்தை அதிகாரச் சமூகம் தோன்றுவதற்கு முந்தைய தாய்தலைமைச் சமூக வடிவின் எச்சத்தை எடுத்தியம்புகின்றது. மழையைப் பற்றிய அறிவியலும் அறிவியல் தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடையாத தாய் தலைமைச் சமூகத்தில் கூட்டத்தை வழிநடத்திய தாய் இயற்கையிடம் கெஞ்சியும் போலி விஞ்ஞானமாகிய மந்திரம் மூலமாக இயற்கையைப் பணித்தும் மழை பொழிய வேண்டினார்.

 தாய் தலைமைச் சமூகத்தில் கணவர் என்ற ஆணாதிக்கச் சின்னம் தோன்றியிருக்கவில்லை. தந்தை அதிகாரச் சமூகத்திற்கு உட்பட்ட மழைதேவர் வழிபாட்டில் அழு வதற்காக அழைக்கப்படுகின்ற கணவரில்லாத விதவைப் பெண்கள் கணவர் என்ற உறவு முறை தோன்றாத தாய் தலைமைச் சமூகப் பெண்களுக்குப் பதிலீடாக அமைகிறார்கள்.

சோளகர் தொட்டியில் மழை தெய்வத்தை வழிபடு வதற்காக ஆண்கள் தொட்டியிலிருந்துகொண்டு பெண்களை காட்டிற்கு வழியனுப்புகிறார்கள். காட்டிற்குச் சென்ற பெண்கள் மழை தெய்வமாகிய எங்குசீர் குட்டையை வழிபடுவதற்காக அனைத்து உடைகளையும் களைந்து நிர்வாணமாக வழிபடுகிறார்கள். தாய் தலைமைச் சமூகத்தில் கூட்டத்தை வழிநடத்துகின்ற தாய் என்பவள் தந்தை அதிகாரச் சமூகத்தின் செயற்கைப் பண்புடைய சொத்ததிகார வடிவங்களுக்கு ஆளாகாதவள்.

தாய்தலைமைச் சமூகத்தின் பெண் இயற்கையின் அங்கமாக இருக்கின்றாள். சோளகர் பெண்கள் தங்களது கணவர், மகன், தந்தை ஆகியோரை ஒதுக்கிவிட்டு தனியாக வந்து உடைகளைக் களைந்து நிர்வாணமாக வழிபடுகிறார்கள். பொருட்களைச் சேகரித்துக் கொணர்ந்த கூடை முறங்களை உடைமையாக மீண்டும் எடுத்துச் செல்லாமல் வனத்திலேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக சோளகர்கள் தங்களது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமைச் சமூகப் பெண்களுக்கு பதிலீடாக தங்களை உருமாற்றிக்கொள்வதாகக் கருதுகிறார்கள்.

தந்தை அதிகார சமூகத்தில் வாழும் மனிதர்களது ஆழ்மன உணர்நிலையானது இத்தகைய பதிலீடுகள் மூலமாக தாய் தலைமைச் சமூகத்தை நினைவுகொள்கின்றன.

துணை செய்தவை

  • எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை: கருத்து= பட்டறை.
  • கோபட் கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
  • பரமசிவன், தொ. 2009. அறியப்படாத தமிழகம். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  • பக்தவத்சல பாரதி. 2003 (1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
  • ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கண. முத்தையா). 2003 (1949). வால்காவிலிருந்து கங்கைவரை. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
  • ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் எஸ்.வி.ராஜதுரை). 2005. மனித சாரம்.கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
  • ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் கோ. கேசவன்) 2002. மனித சமூக சாரம். விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.
  • காதல் வரலாறு - <https://puthiyavansiva.blogspot.in/2016/06/blogpost_71.html>
Pin It