2011 மார்ச் 23 திருவாரூரில் தொடங்கிய திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனின் தேர்தல் பரப்புரைப் பயணம், ஏப்ரல் 11 மாலை 5 மணிக்கு நெய்வேலியில் நிறைவடைந்தது. 20 நாள்கள் ‡ ஏராளமான அனுபவங்கள்!

அத்தனை நாள் களும் பயணத்தில் உடனி ருந்தவன் என்ற முறையில் நான் கண்ட நிகழ்வுகளில் சில... 

subavee_thiruma_360நகரங்களை விடக்  கிராமங்களில் தி.மு.க. கூட்டணிக்கு வரவேற்பு கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியில், தி.மு.க.வேட்பாளர் லோகேஸ்வரிக்கு ஆதரவாகப் பல சிற்றூர்களுக்குச் சென்று ஆதரவு திரட்டினோம். புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து, 30 ‡ 35 கிலோ மீட்டர் உட்பகுதிக்குள் சென்றபோது, தொட்டம்பாளையம் என்னும் ஒரு சிறு கிராமம். இரவு 7.30 மணி இருக்கும். ஒரு வண்டியில் நின்றபடி, சுபவீயும், கயல் தினகரனும் பேசினார்கள். அந்தக் கிராமமே கூடிநின்று ஆர்ப்பரித்தது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருள்கள், நெசவுத் தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் ஆகியன பற்றிக் குறிப்பிடும் போது, பெரும் வரவேற்பு. 

வீரபாண்டித் தொகுதியைச் சேர்ந்த ஆட்டையாம் பட்டியில், ஒரு மாலை வேளையில் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக நோயர் ஊர்தி 108 அந்த வழியாகச் சென்றது. மக்கள் கைதட்டி வரவேற்றுத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். 

பொன்னேரித் தொகுதிக்குள் ஆரணி என்று ஒரு சிறு கிராமம். பெரியவர் வெற்றிவேந்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. “ எதிர் அணியைச் சார்ந்தவர்கள், கலைஞர் மீதும், கலைஞர் குடும்பத்தினர் மீதும் ஒரு விதமான கொலை வெறியோடு பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். அதற்காக நாமும் அப்படியே பேச வேண்டும் என்பதில்லை. இந்தச் சின்ன ஊரில் வாழும் நீங்கள் அனைவரும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும், என்றைக்கும் அண்ணன் ‡ தம்பியாய் அன்பு கொண்டு வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தேர்தலோடு நம் உறவுகள் முடிந்துவிடப் போவதில்லை. எனவே யாரையும் பகையாய்க் கருதாமல், நம் அணியின் வெற்றிக்குப் பாடுபடுங்கள் ” என்று சுபவீ பேசியதை அனைவரும்  மகிழ்ந்து வரவேற்றனர். 

நெய்வேலியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் ஒரே மேடையில் சுபவீ பேசினார். கடல் போல மக்கள் கூட்டம். “ அடுத்தடுத்த கூட்டங்களுக்கு நான் செல்ல வேண்டியிருப்பதால், 10 நிமிடங்கள் பேசிவிட்டு நான் புறப்படுகிறேன். சுபவீ விரிவாகப் பேசுவார். கூட்டத்தினர் அனைவரும் கலையாமல் நின்று கேட்டுச் செல்ல வேண்டும்  ” என்று மருத்துவர் கேட்டுக் கொண்டார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கூட்டம் அப்படியே நின்றது. அதன்பின் சுபவீ, எல்லா செய்திகள் குறித்தும் விரிவாக, ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார். 

பயணத் திட்டத்தில் சில மாற்றங்களும் ஏற்படவே செய்தன. குறிப்பிட்டபடி, நன்னிலம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் கூட்டம் நடைபெறவில்லை. கீழ்வேளூர்க் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டமாக அமைக்கப்பட்டிருந்தது. திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட தஞ்சைக் கூட்டமோ, மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

ஒலி வாங்கிகள் சில இடங்களில் உயிர் வாங்கிகளாக அமைந்துவிட்டன. ஏப்ரல் 1, 2 தேதிகளில், கூட்டங்களில் பேசவே இயலாத அளவிற்குச் சுபவீக்கு ஏற்பட்ட தொண்டை வலியினால், 3ஆம் தேதி நடைபெறவிருந்த, குன்னம், பெரம்பலூர்த் தொகுதிக் கூட்டங்களில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மீண்டும், 4ஆம் தேதி திருச்சியிலிருந்து திட்டமிட்டபடி பயணம் தொடர்ந்தது. 

பண்ருட்டியில், ஒரே நாளில், மருத்துவர் ராமதாஸ், அமைச்சர் நெப்போலியன், சுபவீ மூவரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்து பேசிச் சென்றனர். ஒருவர் பேசி முடித்து விடைபெற்றுச் செல்ல, அடுத்தவர் வருவதற்கு அரை மணி, ஒரு மணி நேரம் ஆனாலும் கூட்டம் கலையாமல் அப்படியே நின்றது பெரிய வியப்புதான்! 

கடலூர், குறிஞ்சிப்பாடித் தொகுதிகளில், ஒரே நாளில் ஆறு கூட்டங்கள். 5ஆவது கூட்டம் வடலூரில். இரவு 9 மணிக்குக் களைப்பாக வந்துசேர்ந்த சுபவீயை, அங்கு நின்ற ஒரு மகிழுந்தின் மீது ஏற்றி விட்டனர்.கூட்டத்தில் பெரும் உற்சாகம். திடீரென்று காரின் மேலே இருந்து அவர் வழுக்கிக் கீழே விழ, 10, 20 கைகள் சட்டென்று குறுக்கே வந்து அவரைத் தாங்கிக் கொண்டன. ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. 

2001 ஆம் ஆண்டு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் எவற்றையும், 2001 ‡ 06 ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றவில்லை என்பதைச் சான்றுகளுடன் சுட்டிக் காட்டியபோது, மக்கள் அதனை உணர்ந்து கையயாலி எழுப்பினர். அந்த ஆட்சிக் காலம் எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கிப் பொதுவுடைமைக் கட்சியினர், 2006இல், ‘ பகை முடிக்கும் பணி முடிப்போம் ’ என்னும் சிறுநூல் ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த நூலை மக்களிடம் எடுத்துக்காட்டி, “ இன்று அதே கொடுங்கோல் ஆட்சியினைத்தான்,பொதுவுடைமைக் கட்சியினர் மீண்டும் வரவேண்டும் என்கின்றனர் ” என்று சுபவீ கூட்டங்களில் பேசிய போது, அப்பேச்சுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

ramadoss_340ஏப்ரல் 5ஆம் தேதி விராலிமலை, பரம்பூர் கிராமம், புதுக்கோட்டைக் கூட்டங்களை முடித் துவிட்டு, கந்தர்வ கோட்டை வந்தç டயும் போது, இரவு மணி 9.50 ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த சூழலில், சுபவீ பேசத் தொடங்கினார். “ ஏமாற்றுபவர் களுக்குத்தான் ஏழு மணிநேரம் தேவைப்படும். உண்மையைச் சொல்ல 10 நிமிடங்களே போதும் ” என்று உரையைத் தொடங்க, ஒரே ஆரவாரம். அங்கே நம் வேட்பாளர் கவிதைப்பித்தன். “ தி.மு.க. வேட்பாளரோ சொந்தமாகக் கவிதை எழுதக் கூடியவர். ஆனால் எதிர் அணியினரோ, தேர்தல் அறிக்கையைக் கூடக் ‘காப்பி ’ அடித்துத்தான் எழுதுகிறார்கள் ” என்றபோது, மறுபடியும் கையயாலிகள்!

இறுதி நாளான ஏப்ரல் 11 அன்று, ஆத்தூர் ‡ வேப்பூர் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சின்ன கிராமத்தில் தேநீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். அந்த ஊரின் பெயர் நயினார் பாளையம். தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்த தோழர் சுபவீயை அடையாளம் கண்டுகொண்ட, விடுதலைச் சிறுத்தைகளின் இளைஞர் பட்டாளம் அவரைச் சூழ்ந்து கொண்டது. இன்னும் சிறிது நேரத்தில் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவிருப்பதால், அவருக்காகப் பெருங்கூட்டம் அங்கு காத்திருந்தது. அந்தக் கூட்டத்திற்கு இளைஞர்கள் சுபவீயை அழைத்துச் செல்ல, எதிர்பாராத விதமாக, அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். கள்ளக்குறிச்சி தொகுதி அது. விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பாவரசுவிற்காக, மெழுகுவத்திகள் சின்னத்தில், சுபவீ வாக்குகுகளைக் கோரினார். 

விடைபெற்று வேப்பூர் நோக்கிப் புறப்பட, இரண்டு கி.மீ. தூரத்தில் தொல். திருமாவளவனும் பல வாகனங்களில் தோழர்களும் எதிரே வந்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட, ஒருவரையயாருவர் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டோம். சில நிமிடங்களுக்குப் பிறகு, எதிரெதிர்த் திசையில் பயணங்கள் தொடர்ந்தன.

( சுற்றுப்பயணத்தின் போது,  அந்தந்தப் பகுதிகளைச்  சேர்ந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொறுப்பாளர்கள் இணைந்து கொண்டனர். அவைத் தலைவர் கயல் தினகரன், அவைத் துணைத் தலைவர் முத்துமோகன், துணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், மாநில அமைப்புச் செயலாளர் மரைக்காயர், கொள்கை பரப்புச் செயலாளர் குமார், மண்டலச் செயலாளர்கள் மு.மாறன், இராசேந்திரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் மு.குமரன், சிந்தா, சூர்யா, வீர.வளவன், சேலம் கந்தசாமி, அமிர்தராஜ், முரளி, வெங்கடேசன், செயராமன், திருப்பூர் இளங்கோ, சூலூர் தேவராசன், மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மகிழன், இளஞ்சித்திரன், பல்லடம் சுவாமிநாதன், ஆகியோருடன் பேரவை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். சென்னை, இலக்குவனார் இலக்கியப் பேரவைப் பொறுப்பாளர்கள் கவிஞர் செம்பை சேவியர், புலவர் தேவதாஸ் ஆகியோரும் சில கூட்டங்களில் உரையாற்றினர்.) 

Pin It