தஞ்சை விளாரில் நவம்பர்8 - வெள்ளியன்று மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

“இங்கு நாம் ஒரு நினைவுச் சின்னமாக எழுப்பியிருக்கும் இம்முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தகர்க்க இவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள்? இந்நிகழ்வுக்கு ஏன் தடை விதிக்கிறார்கள்? இராசபக்சே செய்வதற்கும் இவர்கள் செய்வதற்கும் என்ன வேறுபாடு? மாவீரர் துயிலும் இல்லங்களை, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது தலைமையகத்தைத் தகர்த்து மகிழ்கிறான் இராசபக்சே.
 
அய்யா நெடுமாறன் அவர்கள் சொன்னதைப் போல், பேரழிவுக்கு உள்ளான நம் மக்களுக்கு நடுகல்லாக, நெடுங்கல்லாக, நினைவாக ஒரு மன்றத்தை உருவாக்கி, அதில் சிலைகளாக அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை வடித்திருக்கிறோம். இதை இடிக்கத் துடிக்கிறார்களே இங்குள்ளவர்கள், இவர்களுக்கும் இராசபக்சேவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இந்தியா இந்த இனப்படுகொலையில் பங்கெடுத்த நாடு. அண்ணன் வைகோ அவர்கள், இலங்கைக்கு ஆயுதம் அளிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொண்ட போது, நாம் கொடுக்க வில்லையெனில் சீனா கொடுத்து விடுவான் அதனால் தான் நாங்கள் இலங்கைக்கு ஆயுதம் அளிக்கிறோம் என நேரடியாக வாக்குமூலம் அளித்தவர் பிரதமர் மன்மோகன் சிங். ஈழத் தமிழனை இந்திய ஆயுதத்தால் சுட்டுக் கொல்வதா, சீன ஆயுதத்தால் சுட்டுக் கொல்வதா என்றால், இந்திய ஆயுதத்தால் தான் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த நாடு இந்தியா.
 
எனவே, இன்றைக்கு இராசபக்சேவின் கூட்டாளியாக உள்ள இவர்கள், இறந்து போன, கொல்லப்பட்ட நம் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதைக் கூடத்தடுக்கிறார்கள். இந்தியா தடுக்கிறது. அதன் உளவுத்துறைத் தடுக்கிறது.

தமிழக அரசு, தனக்கென தனி அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இம் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு உள்ள ஞாயத்தை இந்திய அரசுடன் பேச முடியாதா? சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பேசிய ஞாயத்தை, தினந்தோறும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பேச முடியாதா? நேற்று முன் தினம் ஒற்றை நீதிபதியாய் நீதிபதி ராஜா இவ்விழாவிற்கு அனுமதி வழங்கி, தமிழக அரசு இந்நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழகக் காவல் துறைக்கு ஆணையிட்டார்களே, அதைக் காட்டி இவ் விழாவுக்கு உயர்நீதி மன்றமே அனுமதி கொடுத்து விட்டது என தமிழக முதலமைச்சர், இந்திய அரசிடம் சொல்லியிருக்க முடியாதா?

பின்னர், இந்த விளார் ஊராட்சி மன்றத் தலைவரை நிர்பந்தித்து, அவருக்கு நெருக்கடி கொடுத்து, அவசரக் கூட்டம் கூட்டி, சென்னையிலிருந்து அதிகாரிகளால் எழுதிக் கொண்டு வரப்பட்ட இரண்டுத் தீர்மானங்களை ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றினார்கள்.
 
முள்ளிவாய்க்கால் முற்றம் நெடுஞ்சாலையில், புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது, எனவே அதனை இடிக்க வேண்டு மென்ற ஒரு தீர்மானத்தை, விளார் கிராமப் பஞ்சாயத்துக் கவுன்சில் நிறை வேற்றியிருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை இயற்றியது, கவுன்சில் உறுப்பினர்கள் அல்ல, சென்னையிலிருந்து தான் இதை எழுதினார்கள். எழுதியவர்களும் டெல்லி அதிகாரிகள் அல்ல. தமிழக அரசு அதிகாரிகள்தான் இதை எழுதியிருக்கிறார்கள்.

இரண்டாவது தீர்மானம், இங்கே, நண்பர் வடுவூர் சிவா அவர்களால் மிக அழகாகப் போடப் பட்டுள்ள இந்த விழாப் பந்தலை அகற்ற வேண்டு மென்கிறது. ஒரு தமிழன் இந்தியா முழுவதும் சென்று பந்தல் போடுவது பெருமைக்குரியது. இங்கு பந்தல் போடும் பணியை ஓரிரிரு நாட்களில் முடித்து விட்டார்கள். அதன்பிறகு அலங்காரம் செய்ய விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். பந்தலைப் பிரி என்றனர். நீதிமன்ற ஆணைக் கிடைத்தவுடன் ஒரே நாளில் இவ்வளவு அலங்காரங்களையும் செய்து முடித்தனர்.
 
சிலப்பதிகாரத்தில் “மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண்ட அகத்து, நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தல்” என இளங்கோவடிகள் வர்ணித்தார். இந்தத் தமிழனுக்கு அன்றே அப்படிப்பட்ட அறிவும் ஆற்றலும் இருந்திருக்கிறது. அதன் வாரிசாக, அதன் மரபுத் தொடர்ச்சியாக இன்று சிவா இருக்கிறார்.

இந்தப் பந்தலை இடிக்க வேண்டுமென காவல்துறை வந்து நிற்கிறது. விளார் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதை யார் எழுதியது? ஜெயலலிதா தலைமையிலுள்ள தமிழக அரசு அதிகாரிகள் தான் இதை எழுதினார்கள்.
 
அந்தளவுக்கு ஏன் போக வேண்டும்? முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கு எதிரானது? என்ன ஆபத்தானது? தமிழினத்தின் மீது உங்களுக்கு (ஜெயலலிதாவுக்கு) காழ்ப் புணர்ச்சி இருக்கிறது என நான் குற்றம் சாட்டுகிறேன்.

ஏதோ ராஜதந்திரமாக, தேர்தல் நாடகமாக சட்ட மன்றத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றினீர்கள். இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென தீர்மானம் நிறை வேற்றினீர்கள். அதே கோரிக்கையை எடுத்துக் கொண்டு நமது மாணவத்தம்பிகள் சென்னையிலிருந்து, ஊட்டியிலிருந்து, இடிந்த கரையிலிருந்து, சாத்தூரிலிருந்து சுடரேந்தி, ஊர்திகளிலே மக்கள் கூடும் இடங்களில் பரப்புரை செய்யப் புறப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் ஆங்காங்கே கைது செய்தீர்கள். இந்த மாணவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? உங்களுக்கு எதிராக முழக்கம் போட்டார்களா? இந்தியாவுக்கு எதிராகக் கூட போட வில்லையே. காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாதென்று முழக்கமிட்டார்கள். புறப்பட்ட இடத்திலேயே அனைவரையும் கைது செய்தீர்கள்.
 
நம்முடைய இனம் இவ்வளவு பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. இந்தப் பேரழிவை எங்கோ இருக்கிற சேனல்-4 தொலைக்காட்சி காட்டுகிறது. இசைப்பிரியாவுக்கு நேர்ந்த அவலத்தை, சித்திரவதையை, மானக்கேடாக நடத்தியக் கொடுமையை, உலகம் கண்டிக்கிறது. இதுவரை சேனல்-4 காட்டியது. நேற்றிலிருந்து, பி.பி.சி. செய்தி நிறுவனம் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறலை, படுகொலைகளை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நாங்கள் அப்பட்டமாக தொடர்ந்து காட்டுவோம் என பி.பி.சி. அறிவித்து விட்டது.
 
சேனல்-4 காட்டுகிறது. பி.பி.சி. காட்டுகிறது. அவனுக்கெல்லாம் கூட மனம் பதைக்கிறது. நடுங்குகிறது. டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு உள்ளம் நடுங்காது. ஏனென்றால், இவர்கள் குற்றவாளிகள். இனப்படுகொலையில் பங்கெடுத்த கயவர்கள். ஆனால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் நீங்கள், அந்த டெல்லி ஏகாதி பத்தியத்திற்கு கங்காணி வேலை பார்க்கிறீர்களா? இதுதான் இங்கு கேள்வி! எந்த மாநிலத்திலாவது, அந்த இனத்திற்கு இப்படிப்பட்ட கேடு நடந்திருந்தால் அந்த மாநில முதலமைச்சர் இப்படி நடந்து கொள்வாரா?

2008-, 2009 இல் அன்றைய முதலமைச்சர் இப்படித்தான் நடந்து கொண்டார். மேடையில் பேசிய எங்களுக்கெல்லாம் சிறைத் தண்டனை. அண்ணன் வைகோ, நெடுமாறன் அவர்களையெல்லாம் ஏற்கெனவே அம்மையார் பொடாவிலே சிறை வைத்தார். அதன்பின் வந்த கருணாநிதி, ஈரோட்டிலே ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக, நான், தோழர் கொளத்தூர் மணி, சீமான் ஆகிய எங்களைக் கைது செய்து கோவையில் சிறை வைத்தார். தோழர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம். கொளத்தூர் மணி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம். அன்றைக்கு கருணாநிதி போட்டார், இன்றைக்கு நீங்கள் கொளத்தூர் மணி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போட்டிருக்கிறீர்கள்.
 
இந்த மேடையில் வந்து பேச வேண்டிய தலைவர் தோழர் கொளத்தூர் மணி. அவர் என்ன குற்றம் செய்தார்? எதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டம்? ஈழத்திலே இராசபக்சே செய்யும் கெடுபிடிக்கும் இங்கே நீங்கள் செய்யும் கெடு பிடிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? கருணாநிதி அன்று செய்த இனத்துரோகத்திற்கும், இன்று செயலலிதா செய்யும் இனத் துரோகத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? வேட்டியிலும் புடவையிலும் தான் வேறுபாடு இருக்கிறது. வேறு எந்த வேறுபாடும் இல்லை.

இனி பழையத் தமிழர்கள் இல்லை. மந்தைத் தமிழர்கள் இல்லை. ஆட்டு மந்தை, மாட்டு மந்தை போல நாங்கள் ஓட்டு மந்தை வைத்திருக்கிறோம். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இனியும் இறுமாப்பு கொள்ள முடியாது. நீங்கள் நீட்டிய விரலைப் பார்த்து ஓட்டுப் போடுவான் என எண்ணுகிற பழையத் தமிழனல்ல. அவ்வாறு கருதிக் கொண்டிருந்த இனமானத் தலைவர் ஒருவர் கவிழ்ந்து விட்டார். அம்மையாருக்கு இது பாடம். யாருக்கும் மந்தையாக இருக்காமல், சுயமாக சிந்திக்கும் புதியத் தமிழின இளைஞர்கள், மாணவர்கள் இன்று கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். இது புதிய காலம், புதிய சகாப்தம்! எனவே, அப்படியெல்லாம் இந்த மந்தையை மடக்கிவிடலாம் என நினைக்காதீர்கள்.உங்களுக்கு பாடம் கிடைக்கும்.
 
எதற்காக இவ்வளவு பெரிய கெடுபிடிகள்? நான்கு நாட்களாக அய்யா நெடுமாறன் அவர்களோடு இருக்கிறோம். அவரது உள்ளத்திலே என்ன இருக்கிறது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அந்த மனிதன் துன்பப் படலாமா? இது தான் எங்களுடையக் கேள்வி! அந்த மனிதன் செய்த குற்றமென்ன? எதற்காக நொந்து சாக வேண்டும்? எதற்காக அவரை சித்திர வதைப்படுத்தினீர்கள்? நான்கு நாட்களாக, நெடுமாறன் என்ற அம்மனிதரை, அந்த ஆத் மாவை, தமிழர்களின் பொதுச் சொத்தை சித்திரவதைப் படுத்தினீர்கள். எதற்காக? அவர் என்ன குற்றம் செய்தார்? இந்தக் கொடுமைகளையெல்லாம் நமது இளைஞர்கள், தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

யாருக்கும் நாம் காவடி தூக்க வேண்டியதில்லை. தமிழினத்துக் குத்தான் நாம் அணி வகுக்க வேண்டும். யாருக்கும் காவடி எடுக்க வேண்டிய அவசியம் தமிழினத்திற்கு இல்லை. இந்த இனத்திற்கு எது சரி, எது தவறு என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். கடந்த காலம் நம்முடைய மூத்த தலைமுறை, தலைவர்களின் தவற்றைக் கண்டிக்க, திருத்தத் தவறி விட்டது. அந்தத் தலைவர்கள் என்ன சொன்னாலும், பனம் பழத்தைக் காட்டி இதுதான் கரடி முட்டை என்று சொன்னாலும் ஏற்றுக் கொண்டு தலையாட்டிய நம் மூத்த தலைமுறை கொடுத்த தைரியத்தில், இந்தத் தலைவியும் அந்தத் தலைவரும் இப்படியெல்லாம் இனத்து ரோக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்தத் தலைமுறை இப்படியே இருக்க முடியாது. அவரவர்களுக்கு கட்சி இருக்கட்டும். அது அவர்களது விருப்பம். ஆனால், ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கு ஒரு ஆபத்து என்றால், உரிமைப் பறிப்பு என்றால் எல்லோரும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும். கேரளத்தில் அப்படி நடக்கிறது, கர்நாடகாவில் அப்படி நடக்கிறது.

பாழ்பட்ட தமிழகத்தில் மட்டும் ஏன் அப்படி நடப்ப தில்லை? என்ன உங்களுக்கு கட்சி விசுவாசம்? உங்கள் கட்சிக்கு விசுவாசமாய் இருக்கிறேன் என்ற பெயரில், இனத்திற்கு துரோகம் செய்யக் கூடாது. துரோகம் செய்தால் அதை தடுத்து நிறுத்தும் கடமை நம் மக்களுக்கு இருக்கிறது.
 
இந்தியா காமன் வெல்த்திறகுப் போகக் கூடாதென அய்யா நெடுமாறன் அவர்கள் சற்றுமுன் விளக்கினார்கள். இந்தியப் பிரதமர் போகக் கூடாது என்பதல்ல நமது முக்கியக் கோரிக்கை. காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். அதிலே ஒன்றுதான், அதன் மாநாட்டை கொழும்பில் நடத்தக் கூடாதென்பது. நடந்தாலும் அதற்கு இந்தியா போகக் கூடாதென்பது.
 
தில்லிக்காரர்கள் சொல்கிறார்கள், இலங்கையோடு உள்ள உறவையும் கவனத்தில் கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் உணர்வையும் கவனத்தில் கொண்டு ஒரு முடிவெடுப்பார்களாம். இரண்டும் சமமா? ஒன்றரை இலட்சம் மக்களை இழந்திருக்கிறோம். இனப்படுகொலை நடந்திருக்கிறது. எங்கோ இருக்கும் கனடா சொல்கிறது, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது, போருக்குப் பின்னர் அங்கு மனித உரிமைகளில் முன்னேற்றமில்லை, எனவே அதில் எங்கள் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என சொல்கிறது.

இங்கோ, தராசுத் தட்டு வைத்துப் பார்க்கிறான் கொலைகாரன். தமிழர்களின் உணர்வுகளைக் கணக்கில் எடுப்பானாம். இலங்கையுடன் உள்ள உறவைக் கணக்கிலெடுப்பானாம். சர்வதேச நிலைமைகளை கணக்கிலெடுப்பானாம். உன் இனம் இப்படி எங்காவது அழிந்திருந்தால், நீ இந்த கணக்கையெல்லாம் எடுப்பாயா? கொலைகாரனையும், கொல்லப்பட்டவன் குடும்பத்தையும் இருவரது உணர்வையும் சமத்தட்டில் வைத்துக் கணிக்கிறேன் என்கிறாயே, தமிழர்களை முட்டாள்கள் எனக் கருதுகிறாயா?

இலங்கையுடனான உறவும், தமிழர்களுடைய உணர்வும் இரண்டும் சமத்தட்டில் வைத்துப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால் நீ எங்கள் இனத்தை வஞ்சிக்கிறாய். எங்களை ஏமாற்றுகிறாய். நாசூக்காகப் பேசி நடிக்கிறாய் என்று பொருள். நாங்கள் ஏமாந்து போவோமென்று கருதுகிறாயா? மாட்டோம்.
 
இராசபக்சே ஒரு கொலைகாரன். அவனோடு உள்ள உறவும், எங்களுடைய உணர்வும் சம மென்று கருதுகிறார், ஆட்சியிலிருக்கும் மன்மோகன் சிங்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன், இலங்கையோடு உறவை அறுத்துவிட்டால் ஈழத்தமிழர்களுக்காக யாரோடு பேசுவது என்கிறார். பாவிகளே! நீங்களா ஈழத்தமிழர்களுக்காகப் பேசினீர்கள்? ஈழத்தமிழரை எப்படி அழிக்க வேண்டும் என்பதற்காக மாதாமாதம் இராசபக்சேவுடன் அல்லவா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தூதர்களும் பேசினார்கள்! ஈழத்தமிழர்களை அழிப்பதற்கல்லவா இராசபக்சேயுடன் பேசினீர்கள்? இதுவரை என்ன சாதித்துக் கிழித்தீர்கள்?

இன்றுவரை வடக்கு மாகாணத்தில், கிழக்கு மாகாணத்தில் சிங்கள இராணுவத்தை வெளியேற்ற முடியவில்லை. இந்தியா என்ன சாதித்தது? ஏதோ பேசி சாதித்ததைப் போல நாடகமாடுகிறார்கள். அறிக்கைகள் கொடுக்கிறார்கள்.
 
இலங்கையைத் தண்டிக்க வேண்டுமே தவிர, அதனோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை. மனித உரிமைகளில் அக்கறையுள்ள ஒரு நாடு இலங்கையோடு பேச முடியாது. இலங்கையை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அது தான் இன்றையத் தேவையே தவிர, வேறெதுவுமில்லை.

இலங்கையை காமன் வெல்த்திலிருந்து நீக்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை. அது பெரிய கோரிக்கையும் அல்ல. பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் இராசபக்சேக் கும்பலை நிறுத்த வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை அங்கு ஐ.நா. மேற்பார்வையில் துயர்துடைப்புப் பணிகள் அங்கு நடைபெற வேண்டும். இவை தான் நமது கோரிக்கைகளே தவிர, காமன்வெல்த் அல்ல.
 
ஆனால், இதையும் காமன் வெல்த்திற்கு போகக் கூடாது என்பதையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அரங்கில் அந்தக் கொடியவனைத் தனிமைப்படுத்த, அம்பலப்படுத்த காமன் வெல்த் மாநாடு அங்கு நடைபெறக் கூடாது என்ற போராட்டத்தையும் நாம் விரிவுபடுத்த வேண்டும். ஒரு வேளை அங்கு நடை பெறும் மாநாட்டிற்கு இந்தியா போனால், ஒரு முடிவுக்கு வாருங்கள் தமிழர்களே! இந்தியா நமக்கான நாடு இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள்! நாம் அவர்களிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது! இந்தத் திசையில் தான் இனி நாம் சிந்திக்க வேண்டும் என்று முள்ளி வாய்க்கால் ஈகியர் பெயரால் உறுதி யேற்போம்!

அய்யா நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, இந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தைப் பாது காப்போம், பராமரிப் போம்! தொடர்ந்து நமக்கு வழி காட்டும் நிலையமாக, மக்களுக்கு வீரவணக்க அரங்கமாக இது நிலவும். உலகின் மிகச்சிறந்த நினைவகமாக இது விளங்கும். தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாயிரம் ஆண்டு காலமாய் நிற்பது போல, முள்ளி வாய்க்கால் முற்றம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழும். இது தமிழினத்தின் சொத்து, இது போற்றப்படும். தமிழ் மக்களால் ஏற்கப்படும் என அய்யா அவர்களுக்கு உறுதிகூறி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்! வணக்கம்!’’

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

Pin It

இடிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டுமன்று, தமிழகத் தமிழர்களின் மானம், மதிப்பு, குடியுரிமை அனைத்தும்தான்!

தகர்க்கப்பட்டது தஞ்சை முள்ளிவாய்க்கால் பூங்கா மட்டுமன்று, தமிழகத்தில் தமிழர்கள் உரிமையோடு வாழ்கிறோம், தமிழீழத் தமிழர்கள் மட்டுமே இன ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற தவறான புரிதலும் தான்!

தமிழகத் தமிழர்களின் இன்றைய முதற்பெரும் கடமை ஈழவிடுதலைக்குப் போராடுவது தான்; தமிழ்நாட்டுச் சிக்கல்கள், உரிமைகள் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியமும் போலி மனநிறைவும் இப்பொழுது இடிக்கப் பட்டுள்ளன.

கருணாநிதியின் இனத்துரோகத்தை செயலலிதாவைக் கொண்டு முறியடிக்கலாம் என்ற கற்பனைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; கருணாநிதியின் இனத்துரோகத்தை செயலலிதாவின் தமிழினக் காழ்ப்புணர்ச்சியால் தகர்க்க முடியாது.

தமிழீழத்தில் இனப்படுகொலையில் பலியான தமிழர்களுக்கும் விடுதலைப்போர் வீரர்களுக்கும் இருந்த நினைவுச் சின்னங்களை இராசபட்சே அழித்தான். இந்திய அரசின் தூண்டுதலோடும் தமக்கே உரிய தமிழினக் காழ்ப்புணர்ச்சியோடும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒரு பகுதியை இடித்துத் தகர்த்துள்ளார் செயலலிதா! முள்ளிவாய்க்கால் முற்றம் முழுவதையும் மூடிமுத்திரை (சீல்) வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தை நாடினார் செயலலிதா! அங்கு அவர்க்கு உடனடிப்பலன் கிடைக்கவில்லை.

எனவே, 13.11.2013 அன்று விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காவல்துறையினரை ஏவி, முள்ளிவாய்க் கால் சுற்றுச்சுவர்களையும், 25 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் இருந்த பூங்காவையும், அழகாகக் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றையும், மின் விளக்குக் கோபுரத்தையும் மிகப்பெரிய பெயர்ப்பலகையையும் இடித்துத் தகர்த்து, நாசப்படுத்திவிட்டது செயலலிதா அரசு.

இந்த அழிவு வேலைக்கு அரசு அதிகாரிகள் சொன்ன காரணம், மேற்கண்ட கட்டு மானங்கள் அனைத்தும் தமிழக அரசின் நெடுஞ்சாலைப் புறம்போக்கில் உள்ளது; அதனால் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்பதாகும்.

சாலையோர புறம்போக்கு நிலத்தை பூங்கா வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்து வதற்காக தனியாரிடம் ஒப்படைக்கும் விதிமுறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ளது. அதன்படி திரு பழ.நெடுமாறன் அவர்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அனுமதி பின்னர் இரத்து செய்யப்பட்டதாக இப்பொழுது அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனால் மூன்றாண்டுகளாக அந்தவட்டாரத்தில் உளியின் ஓசை கேட்டுக் கொண்டுள்ளது, கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளன. பூங்கா அமைத்து வளர்க்கிறார்கள். சுற்றுச்சுவர் எழுப்புகிறார்கள். இவையனைத்தும் கமுக்கமாக - நள்ளிரவில் நடந்த வேலைகள் அல்ல.

அந்த 25 ஆயிரம் சதுர அடியில் நடந்த இந்த வேலைகளை நேரடியாக வந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்திருக்கலாம். வெளியேறும் படி அறிவித்திருக்கலாம். அந்த அதிகாரிகளின் அறிவுறுத்தலைக் கேட்கவில்லை என்றால் காவல்துறையின் உதவியை நாடியிருக்கலாம். இந்த நடைமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளது செயலலிதா அரசு.
 
திறப்பு விழாவிற்கான அனுமதிகோரி அக்டோபர் மாதம் 19ஆம் நாள் தஞ்சை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரிடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, அனுமதி கோரி தஞ்சை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பம் கொடுக்கப் பட்டது.
 
ஆனால், தஞ்சை மாவட்டக் காவல்துறை - முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கவுமில்லை; அனுமதி மறுப்புக் கடிதம் வழங்கவுமில்லை. நீதிமன்ற நிவாரணம் தேட வழியில்லாதபடி, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துக் கழுத்தறுக்கக் காவல்துறை காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர் உ.த.பே. நிர்வாகிகள். அதனால், அனுமதி வழங்கும் ஆணை கோரி 04.11.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வழக்குத் தொடுத்தார். 05.11.2013 அன்று அரசு வழக்குரைஞர் எதிர்ப்பைப் புறந்தள்ளி, திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கி உரிய பாதுகாப்பு தருமாறு காவல்துறைக்கு நீதிபதி திரு. ராஜா கட்டளையிட்டார்.
 
அத்தீர்ப்பை எதிர்த்து, 05.11.2013 அன்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுப் போட்டது. அன்று மாலையே, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விழா நடத்தத் தடை ஆணை தர முடியாது என்று மறுத்து, விழாவிற்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பளிக்குமாறு காவல்துறைக்கு ஆணையிட்டது.
 
உச்சநீதிமன்றத்திற்குப் போய் அல்லது வேறு வழிகளில் திறப்பு விழாவிற்குத் தமிழக அரசு தடை போடலாம் என்று ஊகித்தறிந்த உ.த.பே. நிர்வாகிகள், 06.11.2013 அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை திரு. ம.நடராசன் தலைமையில், திரு.பழ.நெடுமாறன் அவர்கள் முறைப்படி திறந்து வைத்தனர்.

முற்றம் திறக்கப்பட்டபின் ஏற்கெனவே திட்டமிட்டபடி மூன்று நாள் விழா 08.11.2013 அன்று தொடங்கி, 10.11.2013 அன்று வரை எழுச்சியுடன் நடந்து நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து கலந்து கொண்டனர். ஆட்சியாளர்களோ அல்லது பெரிய அரசியல் கட்சியினரோ இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தமிழகம் - தனது இலட்சிய அரசியல் நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது என்பதை அங்கு குவிந்திருந்த மக்கள் கூட்டம் உணர்த்தியது. தமிழ் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் கணிசமாக வந்திருந்தனர்.
 
இவ்வாறு தமிழர்களின் உவகையும் உணர்வும் கலந்த எழுச்சியோடு மூன்று நாள் விழா நடந்து முடிந்த மூன்றாம் நாள் விடியற்காலை, ஆட்சியாளர்கள் பொக்லைன் கொண்டு முற்றத்தின் ஒரு பகுதியை இடித்தனர்.

‘ஆக்கிரமிப்பை’ அகற்றுகிறோம் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறியது போலிக் காரணம். இரண்டு ஆண்டுகளாக ஏன் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவில்லை? எந்த உடனடிப் பயன்பாட்டுக்காக ‘அந்த ஆக்கிரமிப்புப்‘ பூங்கா அகற்றப்பட்டது? அந்த உடனடித் தேவை குறித்து அதிகாரிகள் கூறாதது ஏன்? செயலலிதாவை ஆக்கிரமித்துள்ள தமிழின வெறுப்புதான் உண்மையான காரணம்!

ம.நடராசன் பங்களிப்போடு எழுப்பப்பட்டதாலும், அதில் அவர்க்கு முகாமைப்பாத்திரம் இருப்பதாலும் முதலமைச்சர் எரிச்சலுற்று முற்றத்தை இடிக்கத் துணிந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.

செல்வி செயலலிதாவுக்கும் திரு. ம.நடராசனுக்கும் இடையே உறவு இருக்கிறதா, பகை இருக்கிறதா என்பது யாரும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்! அது ஒருபக்கம் இருக்க, நாம் இன்னொரு வினாவை எழுப்புகிறோம். ம.நடராசன் குடியுரிமை பறிக்கப் பட்டவரா? அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் அவருக்குக் கிடையாதா? ஒரு குடிமகனின் குடிஉரிமையைப் பறிக்கும் அதிகாரம் ஒரு மாநில முதலமைச்சர்க்கு இருக்கிறதா?

நடராசன் முன்னின்று செய்கிறார் என்பதற்காக, சட்டப்படியான ஒரு செயலைத் தடுத்துவிடும் அதிகாரம் செயலலிதாவுக்கு இருக்கிறதா? இவ்வினாக்கள் அனைத்திற்கும் “இல்லை, இல்லை” என்பது மட்டுமே விடை!

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்புவதை செயலலிதா எதிர்க்கிறார் என்பதுதான் உண்மையான காரணம்.
இந்திய அரசு நெருக்குதல் செய்ததால்தான், முற்றத்தின் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் அனுமதி மறுத்தார்; திறந்தபின் அதை இடிக்க முனைந்தார் என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள்.
 
இந்திய அரசு தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்திருந்தால், அதை எழுத்து வடிவில் தருமாறு முதலமைச்சர் கோரியிருக்க வேண்டும். இந்திய அரசின் நெருக்குதலை தமிழக மக்களிடம் தெரிவித்திருக்க வேண்டும்; அவ்வாறு தெரிவிப்பதில் அவர்க்கென்ன தடை? அது ஒன்றும் இராணுவக் கமுக்கம் இல்லையே! ஒரு கொள்கை முடிவுதானே! “இச்சிக்கலில் இந்திய அரசின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அறிவித்திருக்கலாமே!
 
இந்திய அரசின் நெருக்குதலால் தான் முதலமைச்சர் செயலலிதா முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிராகச் செயல்பட்டார் எனில் அவர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்போடு தமது எதிர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டிருக்கலாம். பொறுப்பை நீதித்துறையின் மீது போட்டுவிட்டு ஒதுங்கியிருக்கலாம்.

அவ்வாறு ஒதுங்கிக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தை அணுகி நிரந்தரத் தடை கோருகிறார்; திறந்த முற்றத்தை மூடி முத்திரை வைக்க உச்சநீதி மன்றத்தின் அனுமதி கோருகிறார்; இம்முயற்சிகளில் தோற்றபின், முரட்டுத்தனமாக இடிக்கச் செய்கிறார்.
 
இவ்வாறு இடிப்பது சட்டவிரோதச் செயல் மட்டுமன்று, நீதிமன்ற அவமதிப்புக் குற்றமும் ஆகும். அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டிய முதலமைச்சர் தமது விருப்பு வெறுப்புப்படி ஆட்சி நடத்துகிறார்.
 
“விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, காய்தல் உவத்தல் அகற்றி சட்டப்படி ஆட்சி நடத்துவேன்” என்று கடவுள் பெயரால் பதவி உறுதிமொழி ஏற்றுவிட்டு அதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறார் செயலலிதா. இவருடைய வெறுப்பிற்கு அதிகமாகப் பலியாவது தமிழர் அடையாளச் சின்னங்கள் - தமிழ்மொழி, தமிழ் இனம் ஆகியவையே!

2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றபின் கடற்கரையில் நின்ற கண்ணகி சிலையை இரவோடு இரவாக பெயர்த்து அப்புறப்படுத்தினார் செயலலிதா. (பின்னர் வந்த தி.மு.க. ஆட்சியில் அச்சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது).

உலகின் சிறப்புமிக்க நூலகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூட ஆணையிட்டார். உயர்நீதிமன்றத் தடையால்தான் இன்றும் அந்நூலகம் உயிர் வாழ்கிறது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூலகத்தைக் காலி செய்தார். அந் நூல்களுக்கு மாற்று நூலகம் உருவாக்கப்பட வில்லை.

மக்கள் வரிப்பணத்தில் 840 கோடி ரூபாய் செலவு செய்து சேப்பாக்கத்தில் கட்டப்பட்ட புத்தம் புதிய தலைமைச் செய லகம், சட்டப்பேரவை ஆகியவற்றிற்கான கட்டடங்களை, அப்படியே கைவிட்டு, பாழடைந்த மண்டபங்களாக்கி விட்டார் செயலலிதா.

கருணாநிதி கட்டியவற்றை அனுமதிக்கமாட்டேன் என்று தடை போட என்ன ஞாயம் இருக்கிறது? செயலலிதாவுக்கு அவர் குடும்பத்தார் கொடுத்த சீதனமா தமிழக அரசு? இல்லை! தமிழக மக்கள் ஒப்படைத்த பொறுப்பு!

கருணாநிதி மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டுமன்று, தமிழினத்தின் மீது, தமிழர் வரலாற்றுப் பெருமிதங்கள் மீது, தமிழ்மொழி மீது அவர்க்கு இருந்து வரும் காழ்ப்புணர்ச்சிகளே அவரது மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படைக் காரணங்கள்!

தமிழன்னைக்கு நூறுகோடி ரூபாய்ச் செலவில் மதுரையில் சிலை எழுப்புகிறேன் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில், அதே சட்டப்பேரவையில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை, தமிழ்ப் பயிற்று மொழியாக இல்லாத - ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட வகுப்புப் பிரிவுகள் தமிழகமெங்கும் தொடங்கப் படும் என்று அவரின் கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பதற்கு முதல் நாள் (12.11.2013) மாலை சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தி, நடுவண் அரசுக்கு எதிராகக் காரசாரமான வசனம் பேசி, “இந்திய அரசு சார்பில் யாரும் இலங்கையில் நடை பெறும் பொது நல மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றினார். அந்த இரவு முழுவதுமாக விடிவதற்குள் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்தார். மறுநாள் முற்றம் இடிக்கப்படும்போது, அது தமிழின விரோதச் செயல் என்று தமிழ்மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கான தந்திரமே முதல் நாள் மாலை நிகழ்ந்த சட்டப் பேரவை சவுடால்கள். இதற்குப் பெயர்தான் இட்லர் உத்தி!

1933 ஆம் ஆண்டு மே முதல் நாள் மேநாள் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்தினார் இட்லர். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். இன்றிலிருந்து செர்மனியின் முழக்கம் “உழைப்பை மதிப்போம்; உழைப்பாளியைப் போற்றுவோம்” என்பதுதான் என்று ஆவேசமாகப் பேசினார். விடிந்தவுடன் வந்த நாளேடுகளில் “தொழிற்சங்கங்களுக் குத் தடை; தொழிற்சங்கத் தலைவர்கள் கைது” என்ற செய்தி இருந்தது.

தமிழர்கள் உலக வரலாற்றிலிருந்தும் தமிழக நடப்புகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சட்டி ஓட்டை யாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் போதும்” என்ற பழமொழியைப் புறந்தள்ள வேண்டும். சட்டி ஓட்டை யில்லாமல் இருந்தால்தான் கொழுக்கட்டை வேகும்; ஓட்டையாய் இருந்தால் கொழுக்கட்டை அரை வேக்காடு ஆகி விடும்; அரை வேக்காடு எதற்கும் பயன்படாது.

செல்வி செயலலிதா 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் முறையாக முதல்வர் பதவிக்கு வந்த போது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2011 மே 16-31 இதழில் “தமிழகத் தேர்தல்: ஏமாற்றியவர் ஏமாந்தார்” என்ற கட்டுரையில் பின் வருமாறு எழுதினோம்; அதையே மீண்டும் கூறுகிறோம்.

“. உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி, தமிழினத்திற்கெதிரான காழ்ப் புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், அடக்குமுறை, தொழிற்சங்கஉரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வருமென்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது. தி.மு.க.வையும், அ.இ.அ.தி.மு.கவையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டிக் கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவைக் கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வளவே!”

Pin It

மிகை எண்ணிக்கையிலான வெளி இனத்தார் ஒரு தேசிய இனத் தாயகத்தில், நுழைவதென்பது அத்தேசிய இனத்தை ஆக்கிரமிப்புச் செய்வதில்தான் முடியும் என்பதை வரலாறு பலமுறை கண்டிருக்கிறது. பாலத்தீனத்திலும், தமிழர் தீவான இலங்கையிலும் இதுதான் நடைபெற்றது. எனவே தான், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் எவ்வளவு வெளியார் இருக்கலாம், இருக்கக்கூடாது என்பதை தீர்மானிக்கும் உரிமை, அவ்வினத்திற்கென அமைக்கப்பட்டுள்ள நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டதாக உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது. தமக்கென தனித்த அரசுகளைக் கொண்ட நாடுகள், தமது தாயகங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தமக்கென குடியேற்ற சட்டங்களை இயற்றி இதனை கட்டுப்படுத்தி வருகின்றன.

இவ்வகையான அரசுரிமை இல்லாததாலேயே, தமிழ்நாட்டுத் தாயகத்தை அயல் இனத்தாரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாம் திணறி வருகிறோம். தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற இந்திய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்கு வித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது.

தமிழகத்தில் ஏற்கெனவே அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் குடியேறியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் மேலும் உயர்ந்து வருவதை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்.
 
வேறோரு இனத்திலிருந்து, வேறுபட்ட சமூகத்திலிருந்து தமிழகத்தில் நுழைகின்ற வெளிஇனத்தார், தங்களுடைய பண்பாட்டையும், தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தின் சீர்கேடுகளையும் தமிழகச் சூழலில் வளர்த்து விடுகின்றனர்.

தமிழ்ச் சமூகம் உள்ளிட்டு எல்லா சமூகங்களிலும் வாய்ப்புகள் அனுமதிக்கும் அளவுக்கு குற்றச்செயல்கள் நடக்கவே செய்கின்றன. எல்லா சமூகங்களிலும் குற்றம் செய்வோர் உண்டு.

தமது குடும்பத்தினர், நட்பு வட்டாராம், சுற்றத்தினர் என தம்மை கண்காணிப்பதற்கு பலரும் இருக்கின்ற மொழிவழிச் சமூகத்தின் அங்கமாக வாழ்கின்ற மனிதர்களில் பெரும்பாலானவர்கள், தாம் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வருகின்ற போதும், தம்மை சூழ்ந்துள்ள சமூகத்தின் மீது ஏற்படும் அறத் தின்பாற்பட்ட அச்சவுணர்வு, அவமானம் போன்றவற்றின் காரணமாகவே குற்றங்களைச் செய்யத் தயங்குகின்றனர். இதனையும் மீறுபவர்களே குற்றவாளிகளாக சமூகத்தின் முன் நிற்கின்றனர்.

தாம் பேசுகின்ற மொழி என்ன வென்றே புரியாத மக்கள் வாழுகின்ற சமூகத்தில் குடியேறி வாழத் தொடங்குகின்ற அயல் இனத்தார் பலருக்கும், அறத்தின் பாற்பட்ட இவ்வகை அச்சவுணர்வு குறைவாகவே எழும்புகிறது. எனினும், பிழைப்புக்காகவேறோரு சமூகத்தில் வந்து தங்குகின்ற அயல் இனத்தாரில் பலரும், தங்களுடைய சொந்த தேசத்திற்கு திரும்ப வேண்டுமென்ற ஆர்வமும், ஆசையும் கொண்டவர்களாக இருப்பதால் குற்றச் செயல்களில் ஈடுபடு வதைத் தவிர்க்கின்றனர்.

ஆனாலும், தாம் யாரென அறிந்து கொள்ளப்படாத, கண்காணிப்புகள் ஏதுமற்ற வேறொரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்ற மனநிலை, அவர்களுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடு வதற்கான ‘சுதந்திர’த்தை கூடுதலாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அயலார் பலர், தாம் குடியேறிய சமூகத்தில் குற்றங்களை இழைத்து அச்சமூகத்திற்கு அச்சத்தையே பரிசாக வழங்குகின்றனர்.

பணி நிமித்தமாக ஒரு நாட்டிற்குள் நுழையும் ஒருவர் தாம் எதற்காக வருகிறோம், எங்கிருந்து வருகிறோம், எவ்வளவு காலம் அங்கு பணி செய்யப் போகிறோம் என்பன உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்து கொள்கின்ற கடவுச்சீட்டு - விசா நடை முறைகள் முறையாகப் பின்பற்றப்படும் பல முன்னேறிய நாடுகளில் கூட, வெளி இனத்தார் குற்றச் செயல்களில் ஈடுபடுவது காணப்படுகின்றது.

அதே நேரத்தில், அரசின் விசா நடைமுறைகளில் மோசடித்தனம் செய்து சட்ட விரோதமாக ஒரு நாட்டில் குடியேறுகின்ற வெளி நாட்டவர்களில் கணிசமானவர்கள், தாம் யாரென அறிந்து கொள்ள முடியாத ஒரு புதிய சமூகத்தில் வாழத் தொடங்கும் போது, குற்றச் செயல்களில் ஈடுபடுவற்கான ‘சுதந்திர’மான மன நிலையை கூடுதல் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில், சொந்த நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக பிற நாடுகளுக்கு குடிபெயரும் குற்றவாளிகளும் உண்டு.

கடந்த 2000ஆம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது. இதுவே, பின்னர் 2011ஆம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 இலட்சத்து 96,906 வெளி நாட் டவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் அளவிற்கு உயர்ந்ததாக வட அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவிக்கிறது.

இவ்வாறு, குற்றம் புரிவதற்கான ‘சுதந்திர’ மனநிலையைப் பெறுகின்ற வெளி இனத்தார், தாம் புதிதாக குடியேறியுள்ள சமூகத்திலும் குற்றச் செயல்களில் சரளமாக ஈடுபடுவது உலகளாவியப் போக்காக வளர்ந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வேலைக்காக சென்று குடியமர்ந்து வருகின்றனர். கடவுச் சீட்டு -விசா நடைமுறைகள் கொண்ட இந்நாடுகளில், அளவுக்கு அதிகமாக வெளியார் குடிபெயர்வதற்கு அவ்வப்போது கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

தங்களுக்குரிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளை வெளியார் பறித்துக் கொள்கிறார்கள் என்பதும், அதிகளவில் குடியேறுகின்ற வெளியாரால் தம் இன, பண்பாட்டு அடையாளங்களுக்கு சிதைவு ஏற்படும் எனக் கருதுவதுமே இவ் எதிர்ப்பிற்கான முக்கியக் காரணிகளாகும். மேலும், வெளியாரால் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள் தம் மண்ணில் ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் குற்றங்களை மேலும் அதிகரித்துவிடும் என அந்தந்த நாடுகளின் அரசுகள் அச்சப்படுவதும் முக்கியமானது.

இவ்வாறான போக்கில், உலகளவில், மிகை எண்ணிக்கையிலான வெளியார் நுழைந்துள்ள நாடுகளில் அதிகளவிலான குற்றங்கள் நிகழ்வதும், அதனை எதிர்த்து மக்கள் போராடுவதும் உலகின் பல பகுதிகளிலும் இன்றைக்கும் நடை பெற்றுக் கொண்டுள்ளது.

வட அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன், ஆஸ்த்திரேலியா, நியூஸ்லாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வெளியார் மிகை குடியேற்றத்திற்கும், குற்றங்கள் அதிகரித் திருப்பதற்கும் தொடர்புள்ளதை அந்நாடுகளின் உளவுத் துறைகள் கண்டறிந் துள்ளனர்.

இரசியாவில் வெளி இனத்தவரால் குற்றசெயல் அதிகரித்து அதன் காரணமாக வெளியாரை வெளியேற்றும் கிளர்ச்சி நடந்ததை தமிழ்த் தேசியத் தமிழர் கண் ணோட்டம் 2013 நவம்பர் 1-15 இதழில் குறிப்பிட்டு இருந்தோம்.

கடவுச்சீட்டு - விசா நடைமுறைகள் கொண்ட பல்வேறு உலக நாடுகளிலே கூட வெளியார் குடியேற்றங்கள் சிக்கலாக விளங்கும் நிலையில், இவை ஏதுமின்றி திறந்துவிடப் பட்ட பல தேசிய இனத் தாயகங்கள் நிறைந்த இந்தியாவில், குடியேற்ற சிக்கல் பூதாகரமாக வளர்ந்துள்ளது. இந்தியத் தலைநகரான புதுதில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கூட, இந்தி பேசும் வட நாட்டவர்கள் அதிகளவில் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்வதும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் கடும் எதிர்ப்பலைகளை எழுப் பியுள்ளது.

புதுதில்லி

இந்தியத் தலைநகர் புது தில்லியில் கடந்த 2010ஆம் ஆண்டு திசம்பர் மாதம், 18 அகவை பெண் ஒருவர் வெளி மாநிலத்தவர்களால் கடத்தப் பட்டு, கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டார். இந் நிகழ்வைக் கண்டித்த, இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கற்பழிப்பு உள்ளிட்ட கடும்குற்றங்கள் புதுதில்லியில் அதிகளவில் நடப்பதற்கு, அதிகளவில் இங்கும் நுழையும் வெளியாரே காரணம் எனவும், அவர்களை எளிதில் பிடிக்க முடியவில்லை எனவும் பேசினார். அதற்கு, பா.ச.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவே, அக்கருத்தை அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நடுவண் அமைச்சர் ஒருவரின் கருத்தாக இது இருந்தாலும், புது தில்லியின் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தும் இக்கருத்தை ஆதரித்து அவ்வப்போது பேசினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு திசம்பர் 9 அன்று, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், பீகார், உத்திரப்பிர தேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அதிகளவிலான வெளிமாநிலத்தவர்கள் புதுதில்லிக்குள் நுழைவதால், தில்லியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.

2009 - திசம்பர் 25 அன்று தில்லியில் தேசியத் தலைநகர் பகுதி (Nati onal Capital Region - NCR) திட்ட வாரியக் கூட்டத்தில் பேசிய, ஷீலா தீட்சித், தில்லியில் அதிகளவில் வெளியார் நுழைவதைத் தடுப்பதற்காக தில்லிக்கு வெளியே புதிய துணை நகரங்களை அமைக்க இந்திய அரசு உதவ வேண்டுமென வெளிப்படையாகக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை, 23.05.2011 அன்று தில்லியில் இந்தியத் திட்டக் குழுவால் நடத்தப்பட்ட 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் (2012--1017) கூட்டத்திலும் பங்கேற்று அவர் முன் வைத்தார்.

2012 சனவரி மாதம், இந்தியத் தலைநகர் புதுதில்லியில், 20 அகவை மணிப்பூர் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டபோது, புதுதில்லியில் அதிகளவில் நுழைந்துள்ள வெளியாரே இதற்குக் காரணம் என்றும், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து பிற மாநிலங்களுக்கு ஓடி விடுவதாகவும் அம்மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

பஞ்சாப்

புதுதில்லியில் மட்டுமின்றி, பஞ்சாபிலும் இந்திக்காரர்கள் குடியேற்றங்களுக்கும், குற்றச்செயல்களுக்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த இந்திக்காரர்கள் பஞ்சாபின் பல பகுதிகளிலும் பணி நிமித்தமாகக் குடியேறியுள்ளனர். குடியேறியதோடு, அங்கு குற்றச் செயல்களிலும் அவ்வப்போது அவர்கள் ஈடுபடுவது பஞ்சாபில் எதிர்ப்பலைகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ராயாநகரின் அருகிலுள்ள பெருமன் (Pheru man) என்ற கிராமத்தில், அனோக் சிங் என்ற கல்லூரிப் பேராசிரியரின் வீட்டில் நடைபெற்றக் கொள்ளைச் சம்பவத்தில், பேராசிரியரும் அவரது மகளும், அதே வீட்டில் கட்டு மானத் தொழில் புரிந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். அவரது மனைவி தாக்கப்பட்டு சுய நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

இந்நிகழ்வில் கொலையுண்டவர் பேராசிரியர் என்பதால் ஆசிரியர் சங்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தின. சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி சனநாயக வழியில் செயல்படும் ‘தல் கல்சா’ என்ற சீக்கியர் அமைப்பு, பீகார் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பஞ்சாபில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டமைக்கு இந் நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டு, 12.04.2012 அன்று பீகாரிகளை பஞ்சாபை விட்டு வெளியேற்ற வேண்டுமென அம் மாநில அரசு இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது.

கடந்த செப்டம்பர் 14 அன்று, சண்டிகரில் வசிக்கும் இந்தித் தொழிலாளர்களுக்காக புதிதாகக் கட்டப்பட்ட 8,400 குடியிருப்புகளை இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் திறந்து வைத்ததற்கு, தல் கல்சா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. சீக்கியர்கள் வாழும் சண்டிகர் நகரை, இந்திக் காரர்களின் நகரமாக மாற்றுவதற்கான முயற்சியையே இந்திய அரசு மேற்கொள்கிறது என அவர்கள் குறிப்பிட்டனர்.

புதுதில்லி, பஞ்சாப் மட்டு மின்றி காசுமீர், அசாம், மகாராட்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வட இந்தியர்களின் குடியேற்றத்திற்கும், குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக அவ்வப் போது மக்கள் போராட்டங்கள் நடை பெற்றுக்கொண்டுள்ளன.

தமிழ்நாடு

ஆனால், இவ்வகையில் தமிழகத்தில், அயல் இனத்தார் நடத்தும் ஆக்கிரமிப்புகளும், குற்றச்செயல்களும் எவ்விதக் கேள்விமுறையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சென்னையைச் சுற்றியமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடஇந்திய மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நகைக் கொள்ளை நிகழ்வுகளிலும், பல இடங்களில் ஏ.டி.எம். மற்றும் வங்கிக் கொள்ளை நிகழ்வுகளிலும் வடஇந்தியர்கள் ஈடுபட்டது, கூலிப்படையாக தமிழகம் வந்து கொலைகளை நிகழ்த்திய வட இந்தியர்கள் விமானம் ஏறி தங்கள் மாநிலங்களுக்குச் சென்றது, கோவை உள்ளிட்ட பல இடங்களில் குடி போதையில் பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் வட இந்தியர்கள் நடந்து கொண்டது என தொடர்ந்து இதுவரை பல் வேறு குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழகத்தில் நிகழ்த்தப் பட்டுள்ளன.

இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழகக் காவல் துறையினர், இவர்களை முறையாகக் கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதனையும் இதுவரை ஏற்படுத்த வில்லை.

தேசிய இன அடையாளங்களை சிதைத்தழிக்க வேண்டுமென செயல்படும் உலகமயம் நகரமயமாக் கலை ஊக்குவிக்கிறது. நகரமய மாக்கல் வெளியார் மயத்தை ஊக்கு விக்கிறது. அவ்வகையில், நகரமய மாக்கலும், வெளியார்மய மாக்கலும் இணைந்து நடைபெறுகின்றன. அதைப் போலவே, வெளியார் மயமாக்கலும் குற்ற மயமாக்கலும் இணைந்து நடைபெறுகின்றது.

எனவே, வெளியாரை வெளி யேற்றுவதென்பது வெறும், தமிழர்களின் வேலை - வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை, உலகமயமா தலையும் - நகர்மயமாதலையும் சமூகம் குற்றமயமாதலையும் ஒருங்கே எதிர்க்கும் நடவடிக்கை என்பதை நம் நெஞ்சங்களில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்! அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்!

Pin It

தி இந்து நாளிதழில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாற்றுக் கருத்தின்றி அனைத்துத் தரப்பினரும் ஜெயமோகனின் கருத்தை எதிர்த் துள்ளனர்.

அந்தக் கட்டுரையில், ‘சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை! ஏனெனில், நம் இளைய தலைமுறை வாசிக்கிறார்கள். ஆனால் தமிழில் வாசிப்பதில்லை. இந்தியா எங்கும் ஆங்கிலவழிக் கல்வி பரவலாகி வருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக்குரிய மொழி. நம் குழந்தைகள் தேர்வுக்காக மட்டுமே தாய்மொழியைக்கற்கின்றனர். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? அது காதில் தமிழ் கேட்கும் சூழல் கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லையேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும்.’ என்று கூறியிருக்கிறார்.

மேலே, ஒட்டு மொத்த அவரது கட்டுரையின் கருத்தை அவரது வார்த்தைகளில் சுருக்கி தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகளவில் விற்பனை ஆகிறது என்கிறார். அதுவும் தமிழ்ப் புத்தகங்களை ஒப்பிடும் போது அதன் விற்பனை மிக அதிகம் என்கிறார்.
 
ஐயா ஜெயமோகன் அவர்களே, ஆங்கிலப் புத்தகத்தை (ஆங்கில வாசிப்பு பழக்கமுள்ள) அனைத்து மொழியினரும் படிக்கின்றனர். ஆக இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் புத்தகங்களை விட ஆங்கிலப் புத்தகங்கள் அதிகமாகவே விற்பனை ஆகலாம்.
 
ஒருவேளை உங்கள் புத்தகங்கள் பரவலாக வரவேற்பு இல்லாமல் குறைவாக விற்பனை ஆகிறது என்று நீங்கள் கருதினால் அதை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுப் பாருங்கள். சும்மா பிச்சுக் கொண்டு போகும்!! அதை விடுத்து, தமிழ் மொழியில் புத்தகமே எழுத வேண்டாம். ஆங்கில எழுத்துருவில் எழுதுங்கள் என்று சொல்வது நியாயமா?

அடுத்ததாக, இந்தியா முழுவதும் ஆங்கில வழிக்கல்வி பரவலாகி வருகிறது என்பதை காரணமாக சொல்லி தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினால் என்ன என்று கேட்கிறீர்கள்.
 
அப்படியென்றால் இந்தியாவுக்குள் உள்ள பிற மொழிகளையும் ஆங்கில எழுத்துருவில் எழுதுங்கள் என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை?. அதுவும் அந்தக் கட்டுரையில் அது பற்றி ஒரு வரி கூட இல்லை.
 
கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியன இந்தியாவுக்குள் தான் இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று “உங்கள் தாய் மொழியில் எழுதுவதை கைவிட்டு விட்டு ஆங்கில எழுத்துருவில் எழுதுங்கள்’’ என்று சொல்லிப் பாருங்களேன்!
 
உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக்குரிய மொழி என்று சொல்லி இருக்கிறீர்கள். இதற்கான புள்ளி விபரங்கள் உங்களிடம் உண்டா? வேலை வாய்ப்புக்காக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் மக்கள் தமிழைக் கற்றுக் கொண்டுதான் வருகிறார்களா?

அவ்வளவு ஏன்? உலகம் முழுவதும் பரவி இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்ற பின்னர்தான் அந்நாடுகளுக்குச் சென்றார்களா?

நான் தமிழ் வழியில் படித்தவன். என்னுடன் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படித்த நண்பர்களில் பலர் இன்று வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் பலர் பள்ளிக் காலங்களிலும், கல்லூரிக் காலங்களிலும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசும் முடியாதவர்களாக இருந்தார்கள்.

தேவையின் பொருட்டு, மிகக் குறுகிய காலத்திலேயே ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டு விட்டார்கள். இன்னொன்றையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் என்னதான் ஆங்கிலத்தில் புலமை பெற்றாலும், ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு அடுத்த நிலையிலேயே இருக்க முடியும். இந்தியாவில் பிறந்து ஆங்கில வழியில் கற்பதால் யாரும் ஆங்கிலேயர்கள் ஆகிவிட முடியாது.

அடுத்து நம் குழந்தைகள் தேர்வுக்காக மட்டுமே தாய் மொழியைக் கற்கின்றனர் என்கிறீர்கள். அதில் என்ன உங்களுக்குப் பிரச்சனை? நம் கல்விக் கூடங்களில் கற்கும் பாடங்கள் அனைத்துமே தேர்வுக்காகவே கற்பிக்கப்படுகின்றன. கற்கப்படுகின்றன. அது நம் பாடத்திட்டத்தில் உள்ள சிக்கல். அது மாற்றப்பட வேண்டும் என் பதில் மாற்றுக் கருத்து இல்லை.
 
ஆனால் அதையே காரணமாக வைத்து தமிழை ஒழித்துக் கட்டும் வழியை முன்மொழியலாமா?

நம்முடைய குழந்தைகள் ஆங்கிலத்திலேயே வாசிக்கின்றன. எழுதுகின்றன. எனவே தாய்மொழி அவர்களுக்கு கைகளுக்கும் கருத்துகளுக்கும் பழக்க மற்றதாகி விடுகின்றன என்று சொல்கிறீர்கள். ஐயா..நான் கேட்கிறேன். ஆங்கில வழியில் படிப்பவர்கள் அனைவரும் ஆங்கில புத்தகங்களை வாங்கிக் குவித்து படித்து அறிவாளி ஆகிவிடுகிறார்களா?

“சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’’ என்கிற நடிகர் வடிவேலு காமெடியை விட இது பெரிய காமெடியாக இல்லை. ஆங்கிலத்தில் வாசிப்பவருக்கு தாய் மொழி சரளமாக வரவில்லை என்றால் அது நிச்சயம் தவறானது. அதை அவர் சரிசெய்து கொள்ள வேண்டும்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? இந்தக் காலத்தில் பிள்ளைகள் யாரும் பெற்றோரை மதிப்ப தில்லை என்பதால், குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோர்களை சாகடித்து விடலாம் என்று சொல்வது போல் உள்ளது.

கணினியில் தட்டச்சு செய்பவர்கள் ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சு செய்கிறார்கள் என்கிறீர்கள். இருக்கட்டுமே. இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் நான் பழைய தட்டச்சு முறையிலேயே தமிழை கணினியில் தட்டச்சு செய்கிறேன். எனக்குக் கற்றுக் கொடுத்தவருக்கு அது தெரிந்திருந்தது. அதனால் அதைக் கற்றுக் கொண்டேன். நான் பலருக்கும் இந்த முறையைக் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கணினியில் தமிழில் தட்டுச்சு செய்யவே முடியாத நிலை பரவலாக இருந்தது. இன்று சூழல் மாறி விட்டது. இப்போது கைபேசியிலும் தமிழில் குறுந்தகவல் அனுப்ப முடியும். தமிழை நேசிப்பவர்கள், தாய்மொழிப்பற்று கொண்டவர்கள் மாற்றுவழியை யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் மேன்மேலும் வளரும். நீங்கள் பாவம்!! அலட்டிக் கொள்ள வேண்டாம்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் தமிழை புரிந்து கொள்ளக் கூடிய யாரும் தமிழை வாசிக்கும் வசதி கிடைக்கும் என்கிறீர்கள்.

ஒரு மொழியின் எழுத்துகளை அழித்துவிட்டு வேறொரு எழுத்துருவில் அந்த மொழியின் படைப்புகளை கொண்டு செல்வது உயிரில்லாத பிணத்துடன் புணர்வதற்குசமம். அதுவும் நாமே கொலை செய்து விட்டு, அதன்பின்பு புணரும் கொடுமைக்குச் சமம். அதை நாங்கள் செய்ய மாட்டோம். செய்யவும் விடமாட்டோம்.
உங்கள் புத்தகங்களின் விற்பனை உங்களுக்குத் திருப்தியாக இல்லை என்றால் அதற்கு மாற்று வழி ஏதாவது யோசியுங்கள். அதை விடுத்து இந்த விபரீதங்களை எங்கள் முன் வைக்காதீர்கள்.

உங்கள் திரைக்கதை, உரையாடலில் எழுதிய கடல், நீர்ப்பறவை போன்ற படங்கள் மோசமான தோல்வியை தழுவின. அதற்காகத் தமிழ்த் திரையுலகினரிடம் சென்று, “தமிழ்ப்படங்களை எடுப்பதை நிறுத்தி விடுங்கள்; ஆங்கிலப் படங்களை டப்பிங் செய்து வெளியிட்டால் போதும்’’ என்று சொன்னாலும் சொல்வீர்கள், ஆச்சர்யப் படுவதற்கு இல்லை.

Pin It

கல்வியை இந்தி மயமாக்கும் திட்டத்தின் இன்னொரு பாய்ச்சலாக இப்பொழுது ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா பள்ளிகள் தொடங்கும் திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளது.

உயர்தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நல்ல நோக்கத்துடன், மாதிரிப்பள்ளிகளாக ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா பள்ளிகளைத் தொடங்குவதாக இந்திய அரசு கூறிக் கொள்கிறது.

இப்பள்ளிகளில் மொழிப்பாடமாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும். பயிற்று மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயமொழிப் பாடமாக இருக்காது தமிழை மொழிப் பாடமாகக் கற்பது மாணவர் விருப்பத்தைப் பொறுதத்தாக இருக்கும். பயிற்றுமொழியாக தமிழ் அறவே இருக்காது.

நடுவண் அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்தான் இப்பள்ளியில் இருக்கும். தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டம் இருக்காது. இப்பள்ளிகள் நடுவண் அரசின் நிதிஉதவியுடன் நடக்கும் தனியார் பள்ளிகளாக இருக்கும். இதற்காக தனியார் புதிதாகப் பள்ளிகள் தொடங்கலாம் அல்லது இப்போதுள்ள தனியார் பள்ளிகளை இத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டுமான வசதிகளுக்காக ஆண்டு தோறும் செய்யப்படும் செலவில் 25 விழுக்காட்டுத் தொகையை நடுவண் அரசு அளித்திடும், பத்தாண்டுகளுக்கு இவ்வாறு நடுவண் அரசு நிதி உதவி வழங்கும். அதன் பிறகு தமிழ்நாடு அரசு அந்தத் தொகையை அளிக்க வேண்டும். நாற்பது விழுக்காட்டு இடங்களில் மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். அறுபது விழுக்காட்டு இடங்களில் தனியார் நிறுவனம் தனது முடிவின்படி சேர்த்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இடஒதுக்கீடுள்ள நாற்பது விழுக்காட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை இந்திய அரசு அந்தத் தனியார்க்கு அளித்துவிடும். எஞ்சிய அறுபது விழுக்காட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் நிறுவனம் தன் விருப்பப்படி முடிவு செய்து வசூலித்துக் கொள்ளலாம்.

மேல்நிலைப் பள்ளி வரை உள்ள கல்வியை இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தனியார் துறை வசம் ஒப்படைக்க இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாகப் பள்ளிக் கல்வியின் மீதுள்ள மாநில அரசு அதிகாரத்தை இந்திய அரசு நீக்கிவிடும்.

அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழி – அது சார்ந்த தேசிய இனம் – அத் தேசிய இனத்தின் மரபுகள், பண்புகள், அடையாளங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்குடன்தான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. இந்த நோக்குடன் கல்வியானது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வைக்கப்பட்டது. ஆனால் நெருக்கடி நிலை காலத்தைப் பயன்படுத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1976இல் கல்வியை நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் பொதுவான பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறையில் நடுவண் அரசு அதிகாரமே மேலோங்கியதாக இருக்கும். அதில் நடுவண் அரசின் ஆணைக்கு மாநில அரசு கட்டுப்பட்டாக வேண்டும்.

இப்பொழுது நடை முறையில் பெரிதும் பள்ளிக் கல்வி மாநில அரசின் கீழ் செய்படுகிறது. இதைத் தன் வசப்படுத்திக் கொள்ள இந்திய அரசு தீவிரமாக முயல்கிறது. இதன் மூலம் மாநில தேசிய இனங்களின் தாய்மொழி – மரபு – பண்பாடு ஆகியவற்றைப் புறந்தள்ளி, இந்தி மொழி மயம் – ஒற்றைமுகங்கொண்ட வடநாட்டு இந்தியமயம் ஆகிய உள்ளடக்கம் கொண்ட கல்வியைப் புகுத்தி, இளம் பருவத்திலேயே இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மாணவர்களைத் தங்கள் தாய் மொழியையும், அடையாளங்களையும் கைவிடச் செய்யும் தந்திரம் இத்திட்டத்தில் உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் படித்தால் வெளிநாடுகளில், பன்னாட்டு நிறுவனங்களில், இந்தியாவின் பிறமாநிலங்களில் வேலை கிடைக்கும் என்ற ஆசை ஏற்கெனவே, பெற்றோர்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது. இந்த ஆசைக்குத் தூண்டில் போட்டு, மாணவர்களை ஈர்க்க இந்திய அரசு முயல்கிறது.

முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 2500 ராஷ்ட்டிரிய ஆதர்சப் பள்ளிகளைத் தொடங்க உள்ளதில், தமிழ்நாட்டில் மட்டும் 356 பள்ளிகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. முதலில் வீழ்த்த வேண்டியது தமிழகம்தான் என்பது இந்திய அரசின்த் தொலைநோக்குத் திட்டம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இதே போல் கல்வித் திட்டமுள்ள – முழுக்க நடுவண் அரசின் நிதியில் இயங்கக் கூடிய நவோதயா பள்ளிகளை இந்திய அரசு திணித்தது. அப்போது அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆ.ரும், அவர்க்குப் பின்னர் வந்த முதலமைச்சர்களும் ஏற்க மறுத்தார்கள். எனவே அத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படவில்லை. இப்போது, ராஷ்டிரிய ஆதர்ஸ் வித்யாலயாப் பள்ளித் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத் தலைமையகம், மாநிலங்களில் தொடங்கப்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசுகளிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று இருந்த நிபந்தனையை நீக்கியது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே இப்பள்ளிகளைத் தொடங்கலாம் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பையும் தமிழக அரசு எதிர்த்ததாகத் தெரிய வில்லை.

தமிழக முதலமைச்சர் அவர்கள் இச்சிக்கலில் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் ராஷ்டிரிய ஆதர்ச வித்தியா பள்ளிகள் தொடங்கும் நடுவண் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன். சி.பி.எஸ்.இ பள்ளிகள் தொடங்கிடவும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்வழிக் கல்விக் கூட்டியிக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழறிஞர்களும், தமிழ் மக்களும் இந்திய அரசின் இந்திமய – இந்தியமயப் பள்ளிகள் தொடங்கும் ராஷ்டிரிய ஆதர்ஸ் வித்தியாலயா திட்டத்தை முறியடிக்கப் போராட்டங்கள் நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Pin It