காத்திருக்கும் நேரங்களில்

கடித்தெறியும் நகங்களில்

தோன்றும் பிறைகளில்

தெரிகிறது

காதலின் அவஸ்தை.

 

மறந்து விடலாம் தான்.

பாவம். . .

என்ன செய்யும்

நம்மால் பாதையான வழித்தடம்.

 

உன்னைப்போல்

தெரியும் முகங்களில்

தெரியவில்லை என்முகம்.

உனக்கும்

தெரியாமல் இருக்கக்கூடும்

உன்முகம்.

 

நீ விட்டு விட்டுப்போனது போல

அப்படியே

விட்டு விட்டுப்போக முடியவில்லை

காதலையும்

கவிதைகளையும்.

 

ஒவ்வொரு முறையும்

செல்லமாய் கோபிக்கும் போதும்

வெட்கப்பட்டு தலைகுனியும் போதும்

தோன்றும் நாணத்திற்குத் தான்

காதல் என்று பெயரா?

 

குறிப்புணர்த்த

தயாராகும் முன்தயாரிப்புகள்

உன்னைக் கண்டதும்

சட சடவெனச் சரிந்து போகிறது.

எப்படிச் சொல்வேன்

நிதம் நிதம் சாவதை.

- ப.கவிதா குமார்

 

 

 

 

 

Pin It