அந்தி வான்வெளி
சிந்தும் செவ்வொளி
சந்த வண் கவி
தந்த தென்னிடம்.
மஞ்சள் தூறலாய்
கொஞ்சும் இளவெயில்
செஞ்சொல் மாலையை
நெஞ்சுள் கோர்த்தது.
மாலை வேளையில்
நீல வானதன்
மேலை மூலை, செங்
கோலம் மின்னுது.
சங்கு மல்லிகை
தங்கள் இதழ்களில்
தங்கும் தேன் மணம்
எங்கும் தூவுது.
பரிதி சிதறிய
குருதி நிறவொளி
பருகி அல்லிப்பூ
விரியும் செம்மையாய்.
மந்த மாருதம்
வந்து தோய்ந்திட
அந்த வேளையில்
சிந்தை இன்புறும்.
கூடு சென்றிடக்
கூடும் பறவைகள்
பாடும் பாடலால்
சூடும் வாழ்த்தினை.
- சி.விநாயக மூர்த்தி