பூப்பூவா பூத்திருக்கும் பூவம்மா - உன்னை
பூமியிலே பூக்கவைச்சது யாரம்மா?
(பூப்பூவா)

மாம்பூ மகிழம் பூவும்
மனசுக்கேத்த தாழம்பூவும்
ஆம்பலும் தாமரையும் யாரம்மா? உமக்கு
ஆருவச்சார் அழகழகா பேரம்மா?
தேம்பும் மனுசனுக்கு
தெம்பளிக்க பூமியிலே
காம்பில் பூத்துவந்த பூவம்மா - உன்
கட்டழகில் சொக்கிவிட்டேன் நானம்மா.
(பூப்பூவா)

ராணிப்பூ ரோசாப்பூ
ராத்திரிப்பூ அல்லிப்பூ
மேனிக்கு ஏத்தபூவு மல்லிப்பூ - அது
ஆணுக்கு மயக்கம்தரும் ஆசைப்பூ
பூவில் புதியரகம்
பூரிப்பூ புன்னகைப்பூ
எளிய மனிதருக்கும் எட்டும் பூ - அது
இன்பம்வரும் போதெல்லாம் கிட்டும்பூ
(பூப்பூவா)

உலகில் கடைசிப்பூ
உள்ளவரை இருக்கும்பூ
அன்பூ என்னுமொரு அதிசயப்பூ - அது
ஐந்தறிவு ஜீவனிலும் மலர்ந்திடும்பூ
பூவே நான் உன்னை
பூஜிப்பேன் பூவாலே
புகழ்ந்து பேசுகிறேன் நாவாலே - உன்னை
போற்றிப் பாடுகிறேன் பாவாலே!
(பூப்பூவா)

Pin It