ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள். முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது, இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/ காரணத்தினால்தானா ?

 "திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது." இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எது கிரகணம்....?

 lunar_eclipse_1கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.

 2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள் (30 நாட்களுக்குள்) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..! ஆமாம். ஜூன் முதல் தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது, ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு விருந்து..! அடுத்து ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..!

சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.

 பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல. சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy), தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது

அனைத்து கோள்களும், சற்றே சாய்ந்த நிலையில்

 பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.
 
 lunar_eclipse_2

சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான். .
 
 பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை). 18 வருடம் , 11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும். இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் துருவங்களில், கிரகண வேகம் பொதுவாக 8,046 கி .மீ/மணி. முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி.மீ தூரம் வரை தெரியும்

முழு சந்திர கிரகணம்

 ஜூன் 15 ம் நாள் நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம் 107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின் அடுத்த எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.

 இந்த ஆண்டின்(2011) முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது. ஜூன் 15ம் நாள் வரவுள்ள சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில், மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம் 100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது. இந்த முழு கிரணத்தின்போது சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும். கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும். இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில் பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது. மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.
 
ஜூன் 15 நிகழவுள்ள இந்த கிரகண நேரம்:

lunar_eclipse_3முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்.. முடிவு வரை
பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT.
பகுதி சந்திரகிரகணம் துவக்கம்: 16 .22 .56 UT
முழு மறைப்பு துவங்குநேரம்:
அதிக பட்ச முழு கிரகணநேரம்:
பகுதி கிரகணம் முடியும் நேரம்:
பெனும்பரா கிரகணம் முடியும் நேரம் :
கிரகண நேரம்:
முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள்
பகுதி கிரகண நேரம்...: 3 மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
பெனும்பரா கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி.
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:
 பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
. கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52 நிமிடம், 24நொடி
 முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
 முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி
கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி
நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.

அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!
 
 இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000 ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130 வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது.

முழு சந்திர கருப்பு கிரகணம்

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது. நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப் பார்க்கப் போகிறோம்...! 

 முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான், அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..! 

பால்வழி மண்டலம்

 lunar_eclipse_4சாதாரணமாய் நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள். இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி, அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின் பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.

  சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப் பட்டுள்ளது.

 பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!
 
 கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள் மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா?

மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!

பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே. ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

 

முழு, பகுதி சூரிய கிரகணம் உருவாதல்

கிரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகணம் (Grahan) என்று அழைக்கப்படுகிறது. கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும். பொதுவாக கிரகணம் என்பதை சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும், இரட்டை விண்மீன்களுக்கிடையேயும் கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.

 

solal_eclipse_351இந்த சூரிய குடும்பத்தில் பூமியாகிய நாம் மட்டும் சுற்றவில்லை. நம் குடும்ப நாயகனான சூரியனும்கூட சுற்றுகிறது அதன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை. வானில் சூரியன், தட்டாமாலை சுற்றுவது போல, தன்னைத்தானே தக தகவென இருந்து சுற்றிக்கொண்டு, தான் வசிக்கும் பால்வழி மண்டலத்தையும் நொடிக்கு சுமார் 220 -250 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இது தன்னிடம் உள்ள ஹைடிரஜனை தொடர்ந்து எரித்தே நமக்கு இப்படி ஒளி வீசும் வாயுப் பந்துதான் சூரியன். இதுவும் கூட ஒரு விண்மீனே..! சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால், தான் சுற்றுவது மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினரான 8 கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், விண்கற்கள் மற்றும் தனது குடும்ப கடைசி உறுப்பினரான வால் மீன்களையும் இழுத்துக்கொண்டே சுற்றி வருகிறது.  சூரியனின் விட்டம் 1384௦௦௦000 கி.மீ. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, 149565139438 கி.மீ. ஆனால் இந்த பிரம்மாண்டமான சூரியனை, 3474.8 கி.மீ விட்டமுள்ள குட்டியூண்டு நிலா, தன் நிழலால், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைக்கும் விளையாட்டுதான் ஜூன் 1, 2011ல் நிகழ்ந்தது.

 

நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்...வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது.

சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.

பொதுவாக ஓர் ஆண்டில், 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த 2011 ம் ஆண்டில் 4 பகுதி சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் தெரியும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஜனவரி 4 ம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சூரியகிரகணம், ஜுன் முதல் நாள்தான்.

இந்த ஆண்டில் வரும் கிரகண அட்டவணை இதோ.!

  • 2011 , ஜனவரி 4 , பகுதி சூரிய கிரகணம்.
    2011, ஜனவரி 4 ம் நால், சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 15 , முழு சந்திர கிரகணம்
  • 2011 , ஜுலை 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , நவம்பர் 25 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011, டிசம்பர் 10 , முழு சந்திர கிரகணம்
சீனாவில் கிரகணம் பார்த்தல்

china_telescope_401கிரகணம் பற்றிய ஆராய்ச்சிகள் கி.பி. 19, 20ம் நூற்றாண்டுகளில்தான் நடைபெற்றன. ஆனால் நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலங்களில் இருந்து கிரகணங்களைப் பார்த்ததிற்கான பதிவுகள் காணப்படுகின்றன. சீன ஜோதிடர்களும், வானவியலாலர்களும், பாபிலோனியர்களும் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முழு சூரிய கிரகணம் பற்றி எழுதி வைத்துள்ளனர். வரலாற்றுப் பதிவுகளின் காலத்தைச் சரியாகப் பட்டியலிட இந்த கிரகணம் வந்து போன தேதிகள் உதவுகின்றன. சிரியன்கள் (Syrian ) காலத்து களிமண் பலகை ஒன்றில், கி.மு. 1223, மார்ச் 5ம் நாள் சூரிய கிரகணம் வந்து போன நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு 1036ல் ஜுலை 31ம் நாள் பகல் இரவாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளனர். 

அயர்லாந்தில் காணப்படும் கல்லில், கி.மு,3,340 , நவம்பர் 30 ம் நாள் ஒரு கிரகணம் ஏற்பட்டதாக பதிவு உள்ளது. சீனர்களின் வரலாற்றுப் பதிவுகள் சுமார் 4,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சூரிய கிரகணங்கள் வந்து போனதையும், அவைகளின் மூலம் பூமியின் சுற்று வேகத்தின் மாற்றங்கள் அறியப்பட்டதாகவும் பதிவுகள் சொல்லுகின்றன. பாபிலோனியர்கள் கணிதவியல் மூலம் கிரகணம் வருவதைக் கணித்தனராம். எகிப்திய பிரமிடுகளிலும், கோயில் கற்சித்திரங்களிலும் கிரகணம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.

கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும் வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும் மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம்.  பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5 டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும்.

ireland_eclipse_347இந்த சூரிய கிரகணம் சாரோஸ் சுழற்சி 118 எண்ணைப் பெற்றுள்ளது. இந்த சாரோஸ் சுழற்சியில் மொத்தம் 72 கிரகணங்கள் உள்ளன. பகுதி கிரகணங்கள்:8; முழு கிரகணங்கள்:40; இடைப்பட்டது/ஹைபிரிட்:2; வளைய/கணக்கான கிரகணம்:15 ; அதன் பகுதி கிரகணம்:7 என மொத்தம் 72 கிரகணங்கள்.இதற்கான மொத்த காலகட்டம், 1280 ஆண்டுகள் ஆகும். இந்த சுழற்சியின் முதல் பகுதி சூரிய கிரகணம், தென் துருவத்தில் அண்டார்டிக்காவின் மேல் அற்புதமாய் குடிகொண்டது. அந்த நிகழ்வு நாள், 0803 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் நாளாகும்.ஒவ்வொரு 18 ஆண்டுகளிலும் இந்த சாரோஸ் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும். இந்த முறை எனபது, சந்திரனின் நோடு/சாய்மானம் வருவதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நூறாண்டு காலத்தில், இந்த சாரோஸ் சுழற்சி 118, தென் துருவத்திலிருந்து இப்போதுதான் வட துருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்த சாரோஸ் சுழற்சி முடிய இன்னும் 5 கிரகணங்கள் பாக்கி உள்ளன. எப்போது முடியும் தெரியுமா..? அதனைப் பார்க்க 2083 , ஜூலை 15 வரை காத்திருக்க வேண்டும்..! அதுவும் வட தருவ ஆர்டிக் பகுதியில் தான் முடியும்..! நமது சந்ததிகள் பார்த்து/கேட்டு மகிழ்வார்கள்.

நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை.

30 .. நாட்களில்.... 3 கிரகண..கொண்டாட்டங்கள்..!

இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள் மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள், மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

 

1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார். 

ஹான்ஸ் லிப்பன்ஷி  சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.

galileo_telescope_320ப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.

தன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

லிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன. 

telescope_320ந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது. 

து வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

saptharishi_560

 

தற்போது திருமணங்களை பிரமாண்டமானதாக நடத்துவது தான் கௌரவமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பார்ப்பனர்களை அழைத்து திருமணச்சடங்குகளை செய்யாத சமுகங்கள் கூட யாககுண்டம் வளர்த்து, வேதங்கள் முழங்க திருமணம் செய்வதை பெருமையாக கருதுகிறார்கள்.பார்ப்பன‌ சடங்குகளின் படி நடைபெறும்  திருமணங்களில் முக்கியச் சடங்கு "அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது". இதில் அருந்ததி யார்? நாம் ஏன் அருந்ததியை பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தேடலாம்....

ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச்சிறந்த "பிரம்மரிசிகள்"(முனிவர்கள்) ஏழுபேரும் (சப்த-_ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக இருப்பவர் (நட்சத்திரம்) வசிஷ்டர். இவரின் மனைவிதான் அருந்ததி. வசிஷ்டர் அருந்ததிக்குமான தனிச்சிறப்பு உண்டு. என்னவென்றால் மற்ற ரிஷிகள் சபலத்தால் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற  வானதேவதைகளிடம் நிலை தடுமாறியவர்கள். இவர்களின் மனைவிமார்களும் தேவேந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். இதில் வசிஷ்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது  வாழவேண்டும் என்பது ஒரு புராணக்கதை, இனி உண்மை ....

இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம்". இந்த நட்சத்திரத் தொகுதிக்கு (தொகுதி என்பது நம் கண்களுக்கு தொகுப்பாக தெரிகிறது என்பதால் மட்டுமே. உண்மையில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளவை) ஒவ்வொரு நாட்டிலும் வேறுவேறு பெயர்கள் உண்டு. உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான வடிவங்களில் தெரிவதால் பெரும்கரண்டி, கலப்பை என மேலைநாடுகளில் அழைப்பர். இந்தியாவில் பொதுவாக இதனை சப்தரிசி (ஏழு முனிவர்கள்)என அழைக்கின்றனர். இதில் உள்ள ஏழு நட்சத்திரங்களுக்கும் இந்தியாவில் ஏழு முனிவர்களின் பெயர்கள் உண்டு. அவை கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்ரி, அங்கிரஸ், வசிஷிட, மரீசி என்பனவாகும்.

இந்த ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக உள்ள வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் சற்று கூர்ந்து கவனித்தால் மங்கலான வெளிச்சத்தில் தெரிவதுதான் அருந்ததி நட்சத்திரம். இவை இரண்டுக்குமான விஞ்ஞானப் பெயரும் உண்டு. வசிஷ்ட நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிஷ்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம்தான் வானவியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்ட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார்_ எ,மிஸார்_பி என்ற இருநட்சத்திரங்களும் ஒற்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன.

சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஒரே தன்மை உள்ளவை அல்ல. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ்,வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று ஆரஞ்சு நிறம் கொண்ட 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 டிகிரிக்கும் மேலான வெப்பம் உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறான திசைகளில் அதிவேகமாக பயணம் செய்கின்றன. அதனால் சப்தரிசி மண்டலம் தற்போதுள்ள தோற்றத்தில் ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்னிருந்ததில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் தற்போதைய தோற்றத்தில் இருக்கபோவதில்லை.(படம் 1ல் சப்தரிசிமண்டலத்தின் முன்று நிலைகளும் காட்டப்பட்டுள்ளது. முதல் நிலை 1லட்சம் ஆண்களுக்கு முந்தையது,  நடுவில் இருப்பது தற்போதைய நிலை, அடுத்ததாக இருப்பது 1லட்சம் ஆண்டுகளுக்கு பின் ஏற்படப் போகும் நிலை)

சப்தரிசி மண்டலத்தின் முதல் ,இரண்டாவது நட்சத்திரமான துபே, மெராக்கும் காட்டிகள்" என அழைக்கப்படுகின்றன. ஏன் என்றால் இந்த இரு நட்சத்திரங்களிலிருந்து அமையும் கற்பனைக்கோடு  தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டும். (இதற்கான விளக்கப் படம் 2)பூமியின் தற்சுழற்சி அச்சு தற்போது இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம்மாறினாலும் துருவநட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும்.

அருந்ததி - ஒரு குறியீடு. முற்காலங்களில் அரசர்களுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் (தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள்) இருந்தாக புராணங்கள் கதை கூறுகின்றன‌. இது தவிர போரின் வெற்றியாக பிறன்மனைவி கவர்தல்(எதிரியின் மனைவியை கவர்ந்து வருதல்) என்பதை சங்ககாலப் பாடல்களில் கூறப்படும் செய்தி. அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்பது தனியான ஆய்வுக்குரியது. ராமாயணத்தில் ராமனும், சீதையும் லட்சிய தம்பதிகளாக சொல்லப்படும் கதையும், சிலப்பதிகாரத்தில் முறைதவறிய கணவனை திருத்தி கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, கோவலன் கதைகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியை நிலைநாட்டுவதற்காக வரலாறு நெடுக தனிச்சொத்துடமை கருத்தாக்கத்தை உருவாக்க சொல்லப்பட்டு வரும் கதைகளாகும்.

திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட  தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

saptharishi_561

Pin It