பேருந்து நிறுத்தமொன்றில் தான்
அவளைப் பார்த்தேன்..
எனைக் கண்டதும்
விழிவிரிய
எட்டிப் பாய்ந்து
அரவணைத்துக் கொண்டாள்...
நலம் விசாரித்து,
வீட்டிலுள்ளவர்களுக்கு
அன்பைச் சொல்லி
அளாவளாவும் இவள் யார்...
ஞாபகம் கிட்டா
நெருடலில் நான்...
யாரென கேட்டு
ப்ரியம் வழிய நிற்பவளின்
புன்னகை முகத்தை
முறிக்கவும் மணமில்லா தடுமாற்றம்...
நட்பின் இழை
பின்னப் பின்ன
நெய்து சென்ற
சிநேக நெசவில்
எந்த இழையாயிருக்கக் கூடும் இவள்...
என் சமவெளி முழுக்க
பூத்திருக்கும் பூக்களில்
எப்பூ இவள்...
நினைவிலிருந்து நழுவியவளை
கண்டெடுக்கத் தவிக்கிறேன்...
வந்த பேருந்தில்
ஏறியமர்ந்து அவள்
கையசைத்த விநாடி
ஆறுவிரல்கள் பார்த்து
புதிர் முடிச்சு அவிழ்க்கையில்,
அலங்காரமாய் ஜொலிக்கும்
என் சிநேக மகுடத்தில்
அடர்ந்திருக்கிறது
ஒட்டடை...