ஒரு நீண்ட தலைப்பை ஒரு குறுகிய நேரத்தில் உரையாற்ற வேண்டும் என்ற நெருக்கடியோடு உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன். ஒரு அரை நூற்றாண்டாக “மாநில சுயாட்சி”யைப் பேசுகின்ற ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நடத்த வேண்டும் ?

a raja 282ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய நாட்டின் பிரதமர் வந்தார். அவரை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி பேச முடியுமா? என்று கூறுகிற அளவிற்கு நம்முடைய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அன்றைக்கு பேசினார். அதன் சுருக்கம் இதுதான்.

“பிரதமர் அவர்களே தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் உங்களுக்கு மொத்த வருமானத்தில் 10ரூ தருகிறோம். வரி என்று எடுத்துக் கொண்டால் 6.5ரூ. ஆனால் நீங்கள் எங்களுக்கு தருவதோ வெறும் 1.5ரூ தான். இது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. என்று அன்றைக்கு பிரதமர் முன் பேச திராணி உள்ள ஒரே முதலமைச்சர் என்பதை நிரூபித்துவிட்டு, இன்றைக்கு மாநில சுயாட்சி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த மாநில சுயாட்சி யாருடைய சிந்தனையில் உருவான கரு?

1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பேரறிஞர் அண்ணா டெல்லிக்கு செல்கிறார். மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர், பிரதமரை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளரை சந்திக்கிற போது கூறினார், “Democracy is not merely a form of government... It is essentially an attitude of respect and reverence towards fellowmen”. ஜனநாயகம் என்பது ஓட்டு போட்டு ஒரு அரசாங்கத்தை தேர்ந் தெடுப்பது அல்ல. ஜனநாயகம் என்பது கடைசி மனிதனுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை இருக்கிற மதிப்பை கொண்டு போய் சேர்க்க வேண்டும். இது தனி மனிதர்களுக்கு மட்டும் அம்பேத்கர் கூறவில்லை. அவை மாநிலங் களுக்கும் பொருந்தும். 22க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கிறது. எங்களுக்கு மரியாதை இருப்பதாக, மதிப்பு இருப்பதாக நாங்கள் கருத வில்லை என்று கூறிவிட்டு, மேலும் அண்ணா கூறினார்,

“வரி வசூல், எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பங்கீடு, அதே போல அதிகாரப் பகிர்வு இந்த மூன்றிலும் தற்போதிருக்கிற அரசியல் சட்டத் தில் சொல்லப்பட்டிருப்பது எங்களுக்கு ஆரோக்கியமானதாக இல்லை. வேதனைக்குரியதாக இருக்கிறது” என்று அண்ணா கூறினார்.

அதன் பிறகு சென்னை வந்தார். அவர் நடத்திய பத்திரிக்கை “ஹோம் ரூல்”. அந்த பத்திரிக்கையில் அண்ணா மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கடைசி கடிதம், “தம்பி நான் பதவிக்காக அலைகிறவன் அல்ல என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் காகிதத் திலே கூட்டாட்சி, ஆனால், அதிகாரம் பொருந்திய மத்திய ஆட்சி, அதிகாரம் பொருந்திய குடியரசின் கீழே நான் முதலமைச்சராக இருக்க விருப்பமில்லை” என்று எழுதியவர் பேரறிஞர் அண்ணா.

எனவே டெல்லி தொடங்கி ஹோம் ரூல் வரை மாநில சுயாட்சிக்கு ஒரு உருவத்தைக் கொடுத்தவர் அண்ணா. இன்னும் சொல்லப் போனால், “இந்தியா ஒரு நாடா. இப்போது ஒரு நாடு, அரசியல் சட்டம் வந்த பிறகு. இத்தனை தேசங்கள் இங்கே இருந்தது. இது ஒரு துணைக் கண்டம். வெவ்வேறு கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் ஒன்றியமாக இந்தியா இருக்கிறது.” இதை முதன் முதலாக சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அவர் சொன்ன பிறகு தான் அந்த கருவை கலைஞர் கையிலே எடுத்தார். கலைஞர் சொன்ன கதை.

1974 இல் கலைஞர் எழுதினார், அதில் ஒரு கதையை சொன்னார், “நீண்ட காலம் ஒருவன் சிறையிலே இருந்து வெளியே வருகிறான். வெளியே வந்து விட்டோம், வெளிச்சம் கிடைத்து விட்டது என்று வீதிக்கு வருகிறான். மனைவி வரவேற்கிறாள், குழந்தை தாவி வருகிறது தந்தையை பார்க்க, தழுவ நினைக்கிறான் அப்போது தான் பார்க்கிறான், கையிலே விலங்கு இருக்கிறது. அதுவரை விலங்கு இருப்பது தெரியவில்லை. அப்படித்தான் இருக் கிறது சுயாட்சி. சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் மாநிலத்தை ஆட்சி செய்தால் பூட்டு போடப்பட்டிருக்கிறது. அந்த விலங்கை எப்போது உடைக்கப் போகிறோம்" என்று அன்றைக்கு கலைஞர் எழுதினார். அப்படித் தான் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக் காமல் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை 1974 இல் கலைஞர் எழுதினார்.

எழுதியது மட்டுமில்லாமல் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட இந்திரா காந்தி இதை நாம் முழுமையாக சேர்ந்து ஆராய்வோம் என்று பதில் கடிதம் எழுதினார். மாநில சுயாட்சியின் கரு பேரறிஞர் அண்ணா. அந்த கருவை உருவமாக மாற்றிய பெருமை கலைஞருக்கு உண்டு. 1974 இல் கொண்டு வந்த உருவத்திற்கு இன்று வரை உயிரில்லை.

இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ஏன் தலைவர் எனக்கு இந்த தலைப்பை கொடுத் தார். 73ஆவது முறையாக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அதில் தான் ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டம் வந்தது. அதில், ‘இந்த நாட்டில் இருக்கிற ஒவ்வொரு நகராட்சியும், ஒவ்வொரு ஊராட்சியும், ஒவ்வொரு பஞ்சாயத் தும் ‘சின்ன குடியரசு’ (Little Republic). அதனால் தான் உங்களுக்கெல்லாம் காசோலையில் கையெழுத்து போடுகிற அதிகாரம் இருக் கிறது. இங்கே இருக்கிற அமைச்சர்களுக்கு கிடையாது; சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடையாது; ஏன் முதலமைச்சருக்கே சம்பளத் துக்கோ மற்றதுக்கோ நேரடியாக காசோலை யில் பையெழுத்து போடுகிற அதிகாரம் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்குத் தான் அந்த அதிகாரம் இருக்கிறது. அதனால் தான் அதற்குப் பெயர் ‘சின்னக் குடியரசு’ (Little Republic). எனவே சின்னக் குடியரசைக் கையிலே வைத்திருக்கிற உங்களை அழைத்து, நீங்கள் எல்லாம் சுயாட்சி பெற்று விட்டீர்கள் நாடு சுயாட்சி பெற வேண்டுமென்றால், இவர்களை தயார்படுத்துவோம் என்று உங்களை அழைத்து வந்து மாநில சுயாட்சியை பேச வைத்திருக்கிறார் என்றால் அண்ணா உருவாக்கிய கரு, கலைஞர் கொடுத்த உருவத்திற்கு, உயிர் கொடுக்கப் போகும் இந்தியாவிலேயே ஒரே தலைவர் அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.

எது மாநில சுயாட்சி?

மாநில சுயாட்சி ஒரு காலத்தில் மறுக்கப் பட்டதா? இல்லை. 1946இல் கிரிப்ஸ் என்ற ஒரு வெள்ளைக்கார அமைச்சர் அன்றைக்கு இருந்த இங்கிலாந்து பிரதமர் ‘அட்லி’ அவர்களால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அவருடன் ஒரு குழு வந்தது, அது கிரிப்ஸ் குழு. ‘கேபினெட் மிசன்’ தமிழில் “அமைச்சரவைக் குழு”.

இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் தர வேண்டும், இந்து, முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி மோதல் வராமல் வாழ்வது இப்படி ஆய்வு செய்தார்கள். அந்த குழுவிற்கு முன்னால் மூன்று இயக்கங்கள் சென்றது. காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து யாராவது ஒரு பிரதிநிதி வாருங்கள், முஸ்லிம் லீகில் இருந்து யாராவது ஒருவர் வாருங்கள், princely states சமஸ்தானங்கள் இருந்தது. ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவர்கள் சார்பாக ஒருவர் வாருங்கள் என்று மூன்று பேரை அழைத்தார்கள்.

அந்த மூன்று பேரில், காங்கிரஸ் சார்பில் அபுல் கலாம் ஆசாத், முஸ்லிம் லீக் சார்பில் ஜனாப் ஜின்னா, சமஸ்தானங்கள் சார்பில் சென்றவர் ஆற்காடு நவாப். இந்தியாவிற்கான சுதந்தரம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் மூன்று இஸ்லாமியர்களே தவிர இந்துக்கள் இல்லை. தற்போது இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக்கூடாது என்று குரல் வந்துவிட்டது.

காங்கிரஸ் சார்பில் சென்ற அபுல் கலாம் ஆசாத் அந்த கிரிப்ஸ் குழுவிற்கு முன்னால் கூறிய சாட்சியம் என்ன? இன்றைக்கும் ஆதாரம் இருக்கிறது. என்ன கூறினார், ‘We have to re concil the concept of self autonomy of the states without detrimental to the national integrety. Ultimately we came to the conclusion that constitution will be federal in nature.’’ இந்த வாசகங்கள் அப்படியே இருக்கின்றது.

அபுல் கலாம் ஆசாத் அமைச்சரவையை பார்த்து விட்டு, “நாங்கள் கூறிவிட்டோம் அமைச்சரவைக் குழுவிற்கு, இந்தியாவினுடைய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சியைத் தான் வலியுறுத்தும். மாநிலங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கும்” என்று 1946இல் அவர் கூறினார். அது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

இந்த அறிக்கையை அரசியல் நிர்ணய சபையிலே வைக்க வேண்டும். அப்படி வைக்கிற போது, நேருவின் அனுமதியோடு ஒரே ஒரு செய்திக் குறிப்பு வந்தது, “இந்த கிரிப்ஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதும் கொள்ளா ததும் காங்கிரஸ் கட்சியின் உரிமை. ஏனென்றால் எங்களுக்குத் தான் பெரும்பான்மை இருக்கிறது” என்று அறிக்கை வந்தது. இந்த அறிக்கை தான் ஜின்னாவை கோபப்படுத்தியது.

அப்போது ஜின்னா, ஜூலியஸ் சீசர் நாடகத்தின் ஒரு வரியை கூறினார் “Not that I love Caesar less, but I love the country more”. ‘நான் சீசரை குறைவாக மதிக்கவில்லை. ஆனால் நான் இந்த தேசத்தை அதிகமாக நேசித்ததால் கொன்றேன்’ என்று அந்த வரியை கூறினார்.

“நேருவை நம்புகிறேன், காங்கிரசைக் கூட நம்புகிறேன். ஆனால் காங்கிரசிற்குப் பின்னால் இருக்கக் கூடிய இந்துத்துவவாதிகளை நான் நம்பவில்லை. இனிமேல் எங்களுக்கு ‘கூட்டாட்சி’ வேண்டாம், நாங்கள் கேட்பது பாகிஸ்தான் பிரிவினை” என்று அன்றைக்கு (1947) முஸ்லிம் லீக்கை கூட்டி தீர்மானம் போட்டவர் தான் ஜின்னா என்றார் ஆ. ராசா.

நான் ஏன் இதை கூறுகிறேன் என்றால், மாநில சுயாட்சி வேண்டும் என்று ஒப்புக் கொண்ட ஜின்னாவை மாநில சுயாட்சி வேண்டாம் என்ற காங்கிரசின் அறிக்கையால் பாகிஸ்தான் பிரிந்தது.                               

எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்!

தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் “மாநில சுயாட்சி” கொள்கைக்கு வந்து விட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருக்கக் கூடிய தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னால், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று ‘விடுதலை’யில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் கூறினார்:

“இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும். இந்தியா வில் இருக்கும் வரை இந்து மதம் என்னை பஞ்சமனாக வைத்திருக்கும். அது மட்டுமில்லை இந்தியாவில் இருக்கும் வரை என்னுடைய தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது, உத்தியோகத்தில் பங்கு கிடைக்காது, எந்த ஏற்றமும் இருக்காது. எனவே நான் முடிவு செய்து விட்டேன். இன்றைக்கு கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் இதை ஏற்றுக் கொள்ளாது. அவர்கள் தங்களை மாநில சுயாட்சி என்று சுருக்கிக் கொண்டார்கள்” அய்யா எழுதுகிறார்.

இறுதியாக சொல்கிறார், “திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை மாநில சுயாட்சி யோடு சுருக்கிக் கொண்டது, ஆனால் நான் சொல்கிறேன் பிரிவினை வேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும், இளைஞர்களே முன் வாருங்கள், சுதந்திரத் தமிழ்நாடு தான் வேண்டும் என்று சட்டைப் பையில் பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள்” என்று பெரியார் கூறினார்.

பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜன நாயகத்திற்காக, இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டிற்காக சற்று விலகி, தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று கூறினோம்; கூறிக் கொண்டும் இருக்கிறோம்.

நான் அமித்ஷாவிற்கும், பிரதமருக்கும் சொல்கிறேன், மெத்தப் பணிவன்போடு சொல்கிறேன், உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த மேடையிலே எங்களது தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன், அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்.

தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள்

 (தொடரும்)

- ஆ.இராசா

Pin It