சட்டப்பேரவையில் பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளைக் காணலாம்.

  • இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது!
  • ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம். புத்தாக்கத் தொழில்கள் (ஸ்டார்ட் அப்) வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளோம்.
  • “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”யாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகிறார்கள். “விடியல்” பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள். “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள். நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர். கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் “புதுமைப் பெண்” திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகிறார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள். ‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிப் பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள். 62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளன. 2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர் மாதந்தோறும் பெறுகிறார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் பெறுகிறார்கள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயனடைந்தவர்கள் 42 லட்சத்து 33 ஆயிரம் பேர்.
  • முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு தொகை உயர்ந்த பிறகு பயன்பெற்றவர்கள் 20 லட்சத்து 55 ஆயிரம் பேர். மீன்பிடி கால உதவித்தொகை பெற்றவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரம் பேர். மீன்பிடி இல்லாதகால உதவித்தொகை பெற்றவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர். ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் 2 லட்சம் பேர். ‘முதல்வரின் முகவரி திட்ட’த்தினால் பயனடைந்தவர்கள் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர்.
  • ‘மக்களுடன் முதல்வர் திட்ட’த்தின் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 45 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் மற்றும் ஆயிரம் என நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளின் வாயிலாக 6 ஆயிரத்து 569 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Pin It