போலிகளின் நரிமுகத்தைப்
பொய்மைகளின் அறிமுகத்தைத்
தோலுரித்துக் காட்டவந்தேன் மெய்யா -அத்
தொழிலில்நான் சக்கிலியே அய்யா!

ஒப்புரவு ஓங்கிடவே
உள்மலங்கள் நீங்கிடவே
துப்புரவுப் பாங்குறவே மெய்யா - நான்
தூத்துக்கூட்டுந் தோட்டிதான் அய்யா!

நடமாட்டப் பிணங்களுக்கும்
நாள்போட்டுக் கணக்குமிட்டே
சுடுகாட்டில் எரித்திடுவேன் மெய்யா - அச்
சுடலையாண்டி வெட்டியான் அய்யா!

கலப்படத்துக் கைவரிசை
இலக்கியத்துச் சந்தையிலே
புலப்படவே பிடிக்கவந்தேன் மெய்யா - நான்
புலனாயும் உளவாளி அய்யா!

கமுக்கமெலாம் வெளிச்சமிடக்
கலைவடிவிற் பளிச்சிடவே
தமுக்கடித்தே பாடவந்தேன் மெய்யா - நான்
தப்பறையும் பறையந்தான் அய்யா!

- பொதிகைச்சித்தர்

Pin It