வானும் கனல்சொரியும் - தரை
மண்ணும் கனல் எழுப்பும்!
கானலில் நான் நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லை அங்கே!
ஆன திசைமுழுவதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல், செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய்எரியும்!

முளைத்த கள்ளியினைக் - கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய் - இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும்கானல்! - உயிர்
கொன்று தின்னும்கானல்!
களைத்த மேனிகண்டும் - புறங்
கழுத்த றுக்கும்வெளி!

திடுக்கென விழித்தேன் - நல்ல
சீதளப் பூஞ்சோலை!
நெடும் பகற்கனவில் - கண்ட
நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில்! - குளிர்
சோலையும் ஓடையுமே
சுடவ ரும்கனலோ - என்று
தோன்றிய துண்மையிலே.

Pin It