"பகுத்தறிவு" வாரப் பத்திரிகையின் முதல் மாலை முதல் மலர் 26.8.34  ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கைகளைப் பற்றி "குடி அரசு", "ரிவோல்ட்", "புரட்சி", "பகுத்தறிவு" (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும் வாசகர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டியதில்லை.periyar lunchசுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் "பகுத்தறிவு" தோன்றலானது, இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும் இன்றியமையாதனவாகவும் கருதப்படும்"எங்கும் நிறைந்த இறைவனை" வழுத்தவோ,

"எல்லாம் வல்ல மன்னனை" வாழ்த்தவோ,

"யாதினும் மேம்பட்ட வேதியனை" வணங்கவோ,

"ஏதும் செய்ய வல்ல செல்வவானை"

வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.

மேலும் மனித சமூகத்தில் மௌட்டீயத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும் ஒற்றுமையையும் பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் "பகுத்தறிவு" வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல் கொள்வன கொண்டு, தள்வன தள்ளி, தானே சுதந்தரமாய் தன்னையே நம்பி, தனது அறிவையும், ஆற்றலையுமே துணைக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.

முடிவாய்க் கூறுமிடத்து "பகுத்தறிவு" மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.

(பகுத்தறிவு தலையங்கம் 26.08.1934)

Pin It