உலக மக்கள் அறிவு விருத்திக்கும், ஒற்றுமைக்கும் சமூக பொருளாதார சமத்துவத்திற்கும், விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் பரம விரோதி களாயிருப்பவர்கள் மதத் தலைவர்களும், மத நம்பிக்கை கொண்ட ஜனத் தலைவர்களுமேயாவார்கள். இவர்களது சூட்சிகள் தான் உலக மக்கள் ஒற்றுமையைப் பிரித்து சின்னாபின்னமாக்கி, வலுத்தவன் இளைத்தவனை வதைத்து, அவனது இரத்தத்தை உருஞ்சி வாழும் முறையை நிலைநிறுத்தி வருகிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானல் ஐரோப்பாவிலுள்ள கிறிஸ்து மதத் தலைவராகிய போப்பும், அவரது சிப்பந்திகளாகிய பாதிரிக் கூட்டமும் இல்லாதிருக்குமானால் உலக இயற்கை விஷயங்களில் எவ்வளவோ முற்போக்கு பெற்றுள்ள ஐரோப்பியர்கள் இம்மாதிரி நாடு பிடிக்கும் நாட்டு வெறியும், உலக செல்வங்கள் தங்கள் தங்கள் நாடுகளுக்கே வர வேண்டும் என்கின்ற செல்வ வெறியும், அந்தப்படி பல நாடுகளை கொள்ளை கொண்டும் பல தேச மக்களை வதைத்தும் தேடிய பொருள்களை அந்நாட்டு ஏழை மக்களுக்குப் பயன்படுத்தாமல் தாங்கள் (ஒரு சிறு கூட்டம்) மாத்திரமே அனுபவிக்கும் குணமும் ஏற்பட்டிருக்க நியாயமிருக்காது.

அது போலவே ருஷியா தேசத்திலும் “மகாத்மா” டால்ஸ்டாய் என்கின்ற ஒரு மத நம்பிக்கை கொண்ட மனிதர் போன்றவர்கள் ஜனத் தலைவராயில்லாதிருந்தால் அந்நாடு வெகுகாலத்திற்கு முன்னதாகவே அதன் பழைய காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து மீண்டிருக்கும்.

periyar with his familyநம் இந்திய நாட்டின் இன்றைய நிலையைப் பற்றியும் யோசிப்போமேயானால், மேல்கண்ட முட்டுக் கட்டைகள் போலவே மதத் தலைவர்கள் என்னும் சங்கராச்சாரிகள் போன்ற கூட்டத்தாராலும் ஜனத் தலைவர் என்னும் “மகாத்மா” காந்தி போன்றாராலும் இன்றுவரை இந்திய நாடு காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து மீள வகையின்றித் தத்தளிக்கின்றது.

ருஷியாவின் முன்னேற்றத்திற்கு, அதாவது அதன் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விடபட, டால்ஸ்டாய் எப்படி கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு முட்டுக்கட்டையாய் இருந்தாரோ அதே போல் ஏன்? இன்னும் அதை விட மோசமாக தோழர் காந்தியின் நாடகத்தால் இந்தியா இன்னும் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்திய காட்டுமிராண்டித் தன்மைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. மனித சமூகத்திற்கு மௌடீகத் தன்மை அதாவது தெளிவு இல்லாமல் குழப்பமடைந்து கொண்டிருக்கும் தன்மை பெரிதும் கடவுளையும் மதத்தையும் பற்றியதேயாகும். அந்த இடத்தை நன்றாய் அறிந்து அதை உபயோகப் படுத்திக் கொள்ள வகை தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் எவ்வளவு சாதாரண - உண்மையற்ற - நிலையற்ற - பயனற்ற மனிதராய் இருந்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் வெற்றி பெற்றே தீருவார்கள்.

அந்த முறையில் தான் இன்று இந்தியாவானது தோழர் காந்தி கையிலும், சங்கராச்சாரி கையிலும் சிக்கிக் கொண்டு சித்திரவதை செய்யப் பட்டு வருகின்றது. “தொட்டது தொண்ணூரிலும்” தோல்வியடைந்த தோழர் காந்தி, இன்று மக்கள் கவனத்தை கோவிலுக்குத் திருப்பிக் கடவுள் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டு மக்களுக்கு கடவுள் வெறியை உண்டாக்கி வருகிறார். அவரது சிஷ்யகோடிகள், அதாவது அவரது நாடகத்தில் உப பாத்திரர்களாயிருந்து பிழைத்துத் தீர வேண்டியவர்கள் - புகழடைய வேண்டியவர்கள் எல்லோரும் திருப்பதி உண்டியல்காரர்கள் போல் “பகவான்” நாமத்தை ஸ்மரணை செய்வதிலும் “அவரது பெருமையை” கால nக்ஷபம் செய்வதிலும் ஒரு புறம் பெருத்த பிரசாரம் செய்கிறார்கள்.

மற்றொரு புறத்திலோ சங்கராச்சாரியாரும், அவரது கூட்டமாகிய பார்ப்பன கோஷ்டியும் கரை புரண்டோடும் காட்டு வெள்ளம் போல் மதப்பிரசாரமும், சாஸ்திரப் பிரசாரமும் செய்கின்றார்கள். “தமிழ் நாடு” “காந்தி” ஆகிய இரண்டொரு பத்திரிகைகள் தவிர ஏனைய “தேசிய” பத்திரிகைகளும், “தேசிய”வாதிகளும், “தேச”பக்தர்களும் எப்படியாவது தங்களுக்கு வயிற்றுப் பிழைப்பும், வாழ்வும், புகழும் ஓட்டும் கிடைத்தால் போதுமென்று, உப்பு கண்டம் (மாமிசம்) திருட்டுக் கொடுத்த பார்ப்பனர் போல் வாயை மூடிக் கொண்டு ஒரு பக்கம் தலையும் மற்றொரு பக்கம் வாலும் காட்டிக் கொண்டு வாளாய் கிடைக்கின்றார்கள்.

சமீபகாலமாக ஒரு இரண்டு மூன்று வார காலமாய் அதாவது காந்தி நாடகத்தில் குருவாயூர் கோவில் பிரவேச காந்தி பட்டினி பாகம் நடிக்கத் துடங்கியவுடன் “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ....” என்பது போலாகி சங்கராச்சாரியும் மற்றும் உள்ள பார்ப்பனர்களும் எழுதும் விஷயங்கள் பத்தி பத்தியாய் கலம் கலமாய் பக்கம் பக்கமாய் பத்திரிகைகளில் கொள்ளை போகின்றன. அவற்றில் இதற்கு முன் சூத்திரன் என்று சொல்வதற்கு பார்ப்பனர்களில் பெரிய பெரிய ஆள்களெல்லாம் பயந்து நடுங்கிக் கிடந்தது போய் இப்போது அக்ஷியபாத்திர பார்ப்பனர்கள் முதல் யாவரும் சூத்திரன், சூத்திரன் என்று வரிக்கொரு வார்த்தையும், சண்டாளன், சண்டாளன் என்று பத்திக்கு பல வார்த்தையுமாக அவசரமாய் அள்ளிக் கொட்டுகிறார்கள். ஏன் என்று கேட்க நாதியில்லை.

இதுதான் இன்றைய தேசிய வேலையாய் போய் விட்டது. கோவிலுக்குப் போய் எவன் ‘மோட்ச’மடைந்தாலென்ன? அடையா விட்டாலென்ன? எந்தக் கோயில் இடிந்து நாசமாய்ப் போனால் நமக்கென்ன? இந்த சாக்கை வைத்துக் கொண்டு இந்த யோக்கியர்கள் ஏன் சூத்திரன், சண்டாளன் என்பவைகளை நிர்ணையம் செய்ய பாடுபட வேண்டும்? என்பது தான் நமது கேள்வி.

ஒரு பார்ப்பான் “தீண்டப்படாதவர்கள், ஆதிதிராவிடர், ஹரிஜனங்கள் என்பவர்கள் எல்லோரும் சண்டாளர்கள் ஆனதினால் கோவிலுக்குள் போகக் கூடாது” என்று எழுதுவதும், மற்றொரு பார்ப்பான் “அது சரியல்ல சண்டாளர் என்பது பஞ்சமர்கள் அல்ல. மற்ற யார் என்றால் மேல் ஜாதி பெண்ணுக்கும் கீழ் ஜாதி ஆணுக்கும் பிறந்தவர்கள் தான் சண்டாளர்கள்” என்று எழுதுவதும், அப்படிப் பிறந்தவர்கள் யார் யார் என்று பார்க்கப் போனால் செட்டி, நாயுடு, நாடார், முதலி, கவுண்டர், கோனார், குயவர், நாவிதர் என்று ஒரு “ஸ்மிருதி” சொல்லுவதும், மற்றொரு ஸ்மிருதியில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லாம் என்று சொல்லுவதும், அதாவது “கலியுகத்தில் பிராமணர்கள் தவிர மற்ற க்ஷத்திரியர், வைசியர் கிடையாது. சூத்திரர்தான் உண்டு. அவர்களுக்குள் இருக்கும் ஜாதிகளுக்கு ஆதாரம் கலப்புப் பிரவி, விபசாரப் பிரவி” என்று காணப்படுவதும் இந்த ஆதாரங்களை தைரியமாய் வெளிப்படுத்தி ஜனங்களுக்குள் செல்வாக்கு ஏற்படுத்தி நிலைக்கச் செய்வதும் ஆன காரியங்களே இன்று கோவில் பிரவேசமாகவும், எதிர்ப்பாகவும் இருந்து வருகின்றது.

இதை ஆட்சேபிக்காமல் சகித்துக் கொண்டு இருக்கும் மக்கள் தான் இன்று முதல் நெம்பர் தேசீயப் பத்திராதிபர்களாகவும், தேச பக்தர்களாகவும் விளங்குகிறார்கள். ஓட்டுக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பத்திரிகை வியாபாரத்திற்காகவும், தீண்டாமை விலக்கு கோவில் பிரவேசம் ஆகிய நடிப்பில் பாத்திரர்களாய் (வேஷதாரிகளாய்) அமர்ந்தவர்களுக்கு மானம், வெட்கம், சொரணை இருப்பதற்கு ஞாயமில்லை. ஏனெனில் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பதும், கருமமே கண்ணாயினார் என்பதும் இவர்களை மாத்திரம் விட்டு விடாது. ஆனால் உண்மையில் சமத்துவத்தை விரும்புகிறேன். சமதர்மம் எனது கொள்கை என்கின்ற வீரர்கள் இதை ஏன் சகிக்கிறார்கள் என்கின்ற ரகசியம் மாத்திரம் நமக்கு விளங்கவில்லை.

இரண்டு ஆச்சாரியார்கள்

யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்ளுவதில் அதில் சம்பந்தமில்லாதவர்களை எதற்காகச் சூத்திரன் என்றும் சண்டாளன் என்றும், பல ஜாதிக் கலப்பு என்றும் சொல்வது என்பது தான் நமது கேள்வி, அதில் ஒரு கட்சியார் அபிப்பிராயப்படி அதாவது வைதீக சங்கராச்சாரி அபிப்பிராயப்படி பார்த்தால் தீண்டப்படாதவர்கள் சண்டாளராகிறார்கள். சீர்திருத்த ஆச்சாரியார் அபிப்பிராயப்படி பார்த்தால் பார்ப்பனரல்லாத மற்ற ஜாதியார் சண்டாளராகிறார்கள் இதற்குள் தீண்டாதவர்களும் மற்றவர்களும் சேர்ந்து விடுகிறார்கள்.

இதை யோசித்தோமானால் சங்கராச்சாரி கூட்டம் ஆழாக்கை தலை கீழாகக் குப்புறக் கவிழ்த்தி அளப்பதாய் சொன்னால், சீர்திருத்த ஆச்சாரியார் ஆழாக்கைப் படுக்கை வசத்தில் வைத்து அளந்து போடச் சொல்லுகிறார். இவர்களில் யார் யோக்கியர் என்பதே விளங்கவில்லை.

நம்மைப் பொருத்தவரை படுக்க வைத்து அளக்கும் சீர்திருத்த ஆச்சாரியை விட குப்புறக் கவிழ்ந்து அளக்கும் சங்கராச்சாரியாரையே (கூரை வீட்டில் ஏறிக் கொள்ளிக் கட்டை வைத்து விளையாடுபவரே இருவரில் யோக்கியர் என்பது போல்) யோக்கியர் என்று சொல்லுவோம்.

சங்கராச்சாரி

இது நிற்க, சங்கராச்சாரியின் அட்டகாசமும், ஆணவமும், கொள்ளையும் இன்று சென்னையில் தாண்டவமாடுகின்றது. ஏன் என்று கேட்பாரில்லை? பார்ப்பனரல்லாத மக்கள் அவர் காலில் 1000, 2000, 3000, 5000, 10000 ரூ. கணக்காய் கொண்டு போய்க் கொட்டி பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து கும்பிட்டு பாத தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு விட்டு வருகிறார்கள். சங்கராச்சாரி கால் கழுவின தண்ணீர் இன்று தங்கத்தை விட ஏன் - வைரத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. சுயராஜ்யம் கேட்கும் ஆட்களும் காந்தி சுயராஜ்யத்திற்கு அதாவது ராமராஜ்யத்திற்கு 1000, 10000 என்று காந்தி சிஷ்யர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அள்ளியள்ளிக் கொடுத்த ஆட்களும் இதில் அதிகம் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதாவது கடுகளவு அறிவாவது சுயமரியாதையாவது இருக்கின்றதா? என்பது தான் நமது சந்தேகம்.

சங்கராச்சாரி என்றால் என்ன? யாருக்கு சங்கராச்சாரி? அவரது கொள்கை என்ன? நடப்பு என்ன? வேஷம் என்ன? எண்ணம் என்ன? அனுபவம் என்ன? என்பது போன்ற ஒவ்வொன்றையும் யாராவது கவனித்தார்களா? அல்லது கவனித்தும் வேண்டுமென்றே தெரியாதவர்கள் போல் நடந்து கொள்ளுகிறார்களா? என்பது நமக்கு விளங்கவில்லை.

தோழர்களே! சற்று கவனித்துப் பாருங்கள். சங்கராச்சாரியார் என்பவர் ஒரு விதமான “ஆணவம் பிடித்த நாஸ்திகக் கொள்கைக்காரர்” அதாவது கடவுள் என்று ஒரு தனிப் பொருள் கிடையாது என்பதோடு தானே தான் கடவுள் என்ற கொள்கையுடையவர்.

ஆனால் அவர் தினமும் பூஜிக்கும் உருவமோ ஒரு தனிக் கடவுள் உருவம். அதிலும் பெண் கடவுள், அதாவது “சக்தி பூஜை” வேஷமோ, சைவவேஷம், விபூதி பட்டை பட்டையாய் பூசிக் கொள்வது.

நிலையோ சந்யாசி நிலை அதாவது தலை மொட்டை காவிவஸ்திரம்.

அனுபவமோ, ராஜபோகம் யானை - குதிரை - பல்லக்கு படை எடுபிடி ஆள்கள்.

இந்த நிலையில் உள்ள இவரால் பொது மக்களுக்கு ஏற்படும் பயனோ தெண்டவரி அதாவது சர்க்கார் தண்ட வரியை விட மோசமான வரி. பார்ப்பன உத்தியோகஸ்தர்களையும் செல்வாக்கான பார்ப்பன வக்கீல்களையும், பார்ப்பன பத்திராதிபர்களையும் விட்டு மிரட்டியும் தாட்சண்யத்திற்கு கட்டுப் படுத்தப்படக் கூடிய தந்திரத்தைச் செய்தும் மக்களின் விதரை நசுக்குவது போல் நிர்ப்பந்தப் படுத்தி பணம் வசூல் செய்வது.

இப்படி வசூல் செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு செய்யப்படும் காரியமோ பார்ப்பன சோம்பேறிகளுக்கும், கொட்டாப்புளிகளுக்கும் பானை பானையாய் பாயாசம் வடையுடன் பொங்கிப் போடுவது.

பணங்கொடுத்தவர்களுக்கு பயனோ, கொடுப்பதையும் கொடுத்து சங்கராச்சாரி காலில் பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து போராக்குறைக்கு அவர் கால் கழுவின தண்ணீரையும் குடித்து விட்டு வந்து வீடு சேருவது.

இவ்வளவோடு இந்த சீன் முடிவு பெருவதில்லை. பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார் வீடு வந்து சேருவதற்கு முன்பதாகவே பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார்களை பார்த்ததற்காகவும் அவர்களுடன் பேசினதற்காகவும் அந்த தோஷ பரிகாரத்துக்காக இவர்கள் பணத்திலேயே பார்ப்பனர்க்கு தானம் வழங்குவதும், அவரும் குளித்து முழுகி தீட்டைக் கழித்து விட்டு ஜபம் செய்து தோஷத்தை பரிகாரம் செய்து கொள்ளுவதும் ஆகும்.

இவை ஒரு புறமிருக்க இவருக்கு தனி யோக்கியதை என்ன என்பதைப் பார்ப்போம். இவர் ஒரு சாதாரண பார்ப்பனர். இவருக்கு முன் அந்தப் பட்டத்தில் இருந்தவர் இவரைப் பிடித்து வைத்து விட்டுப் போனார் என்பதைத் தவிர வேறு ஒரு யோக்கியதையோ அருகதையோ கிடையாது. இவருக்குப் பிறகு யார் அந்தப் பட்டத்துக்கு வருவார் என்பதும் இவர் பிடித்து வைக்கும் ஆளேயொழிய வேறில்லை. இவர் காலம் முடியும் வரை எந்த வழியிலாவது இவருக்கு திருப்தியாய் நடந்து கொள்ளுகின்றவர்கள் அந்த ஸ்தானத்திற்கு அருகதையாகி விடுவார்கள். ஆகவே வாக்கு சுதந்திரம், ஓட்டு சுதந்திரம், ஜனநாயகம் கேட்கின்றோம் என்று சொல்லும் பார்ப்பனர்கள் அதை விட மேலானதாகக் கருதும் தங்கள் மத விஷயத்தில் “ஆத் மாத்த பாரமார்த்திக” விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும் இந்தப்படி நடந்துக் கொள்வது அறிவில்லாமலா அல்லது மேதாவித் தனத்தாலா அல்லது இதுவும் சுயராஜ்யம் தேசியம் என்பதைப் போன்ற ஒரு சூட்சியாலா என்று யோசித்துப் பாருங்கள்.

நிற்க, “சகலத்தையும், துறந்து ஆன்ம கோடிகள் உய்வதற்காக உலகில் தோன்றிய அவதார புருஷரான” “சங்கராச்சாரிய சுவாமிகள்” யானை, குதிரை, பல்லக்கு இதைத் தூக்க 32 ஆள்கள் மற்றும் படைகொடி எதற்கு என்று கேட்பது ஒரு புறமிருக்க இவருக்கு அதாவது இந்த சன்யாசிக்கு “பிச்சைக்கு” என்று தினம் 1க்கு 500 ரூ. அழுவது எதற்காக என்று கேட்கின்றோம். இவர் பக்தாள் வீடுகளுக்குச் செல்லத் தனித்தனி ரேட்டுகள் எதற்காக என்று கேட்கின்றோம்.

இந்தப்படி வசூலித்த பணத்தைக் கொண்டு பொங்கிப் பொங்கிப் போடும் சமாராதனையில் பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்று கேட்கின்றோம்?

ஒரு சமூகத்தில் எவ்வளவுதான் அடி முட்டாள்கள் இருந்து விட்டாலும் அதை இன்ன அளவு தான் ஏமாற்றுவது என்கின்ற ஒரு பக்ஷாதாபமாவது இருக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

இவைகளையெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தோமேயானால் இது ஒரு பார்ப்பனப் பிரசாரம் என்றும் பார்ப்பன ஆதிக்கத்திற்காக செய்யப்படும் பார்ப்பன மத சூழ்ச்சிப் பிரசாரம் என்றும் சொல்லாமல் வேறு என்ன சொல்ல இருக்கின்றது.

காந்தியை மகாத்மா ஆக்கினதில் எத்தனை சோம்பேறிகளுக்கு வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகம், பதவி புகழ் வேட்டைக்கும் இடம் கிடைத்ததோ அதை விட எத்தனையோ மடங்கு அதிகமான பேருக்கு ஒரு பார்ப்பனரை சங்கராச்சாரி லோக குரு ஆக்கினதில் வயிற்றுப் பிழைப்பு மாத்திரமில்லாமல் உயர்ந்த ஜாதி நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

சங்கராச்சாரி இன்னார் என்றும் அவருடைய யோக்கியதை இன்னதென்றும் நம்மைவிட பல மடங்கு அதிகமாகவே பார்ப்பனருக்கும் தெரியுமானாலும் அதை ஒரு சாதனமாய் வைத்து அதாவது கோவில் ஒரு கல்லை நட்டு அதன் மூலமாக மக்களைக் கொள்ளை அடிப்பது போல் மத வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த மாய்கையில் பார்ப்பனரல்லாத மக்கள் சிக்கி பணத்தை அள்ளிக் கொடுப்பதென்றால் அறிவுள்ள யாருக்குத் தான் வயிறு கொதிக்காது என்று கேட்கின்றோம்.

இந்த லட்சணத்தில் அவர் குருவாயூர் கோவில் பிரவேசத்தைப் பற்றி ஜாமொரீனுக்கு “சண்டாளர்களைக் கோவிலுக்குள் விடாதே” என்று தந்தி கொடுத்திருக்கிறார். இது எவ்வளவு அயாக்கியத்னமான காரியம் என்று கேட்கின்றோம். இவருக்கும் (அதாவது சங்கராச்சாரிக்கும்) குருவாயூருக்கும் எந்த விதத்தில் சம்மந்தம் என்று கேட்கின்றோம்.

அப்துல் காதருக்கும், ஆடி அமாவாசைக்கும் உள்ள சம்மந்தம் போல் இவரோ, தானே கடவுள் என்பவர், சைவ வேஷக்காரர். சக்தி பூசைக்காரர், சன்னியாசி, துறவி ஆகிய இத்தனைக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு கல்லுருவம் உள்ள இடம் அதுவும் விஷ்ணுசாமி என்கின்ற பெயர்கொண்ட கல் உருவம் உள்ள கோவில் அதுவும் “பாமர மக்களை உஜ்ஜீவிக்கச் செய்ய அச்சாவதாரமாய் எழுந்தருளி இருக்கும்” இடம், அதுவும் ஒரு மனித உருவ ஸ்திரீயின் வயிற்றில் பிறந்து வளர்ந்து பிறகு கடவுளாகி வந்த ஐதீகத்தை ஆதாரமாய் வைத்து செய்யப்பட்ட உருவத்தினிடம் ஒரு கூட்டத்தாரை மாத்திரம் போக விடப்படக்கூடாது என்றும், அவர்கள் சண்டாளர்கள் என்றும், தந்தி கொடுப்பதென்றால் அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில் இரண்டு உயிர்கள் அதாவது ஒரு “மகாத்மா” என்னும் உயிரும் மற்றொன்று “மகாத்மாவினது” பிரீதிக்கு பாத்திரமான உயிரும் ஆக “இரண்டு உயிரும் செத்தாலும் சரி அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, கல்லுருவத்தினிடம் மாத்திரம் மனிதனை விட்டு விடாதே” என்கின்ற கருத்தின் மீது தந்தி கொடுப்பதென்றால் இதன் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் என்னவென்று சொல்வது? ஒரு சமயம் இவருக்கு ஜீவன்களிடத்தில் அன்பும், சமத்துவமும் நேரான ஞானமும் இருந்திருக்குமானால் “யார் செத்தாலும் கவலையில்லை மக்களில் ஒரு சமூகத்திற்கும் ஒருவித இழிவும் இருக்கக் கூடாது எல்லோரையும் உள்ளே விட்டு அவர்களுக்கு உள்ள இழிவை நீக்குங்கள்” என்று தந்தி கொடுத்திருந்தால் இவரை மனித சமூகத்தில் சேர்க்கலாம். அப்படிக்கில்லாமல் இந்தப்படி தந்தி கொடுப்பதை நினைத்தால் இந்த ஸ்தாபனத்தின் அட்டூழியம் எவ்வளவு என்பதுதான் முன் வந்து நிற்கின்றது.

தோழர்கள் காந்தியும், கேளப்பனும் செத்துப் போவார்களே என்று நாம் சிறிதும் கவலை கொண்டு இவ்விதம் எழுதவில்லை. அவர்கள் இருவரும் எப்படியாவது, என்றைக்காவது சாகின்றவர்கள் தாம் என்பது நமக்கு நன்றாய் தெரியும். அவர்கள் தங்களுடைய உயிரை வியாதிக்கும் மூப்புக்கும் பலியாய் கொடுப்பதை விட ஒரு புகழுக்கோ அல்லது தாங்கள் நல்லது என்று நினைக்கிற ஒரு காரியத்திற்கோ பலி கொடுப்போமே என்று எண்ணி இருக்கலாம். அல்லது பல காரணங்களால் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றி இருக்கலாம். ஆதலால் நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சங்கராச்சாரியாரின் இப்படிப்பட்ட காரியமும் அவர் ஆதரவால் நடத்தப்படும் பார்ப்பன ஆதிக்கப் பிரசாரமும் சகிக்கக் கூடியதாயில்லை. என்பதற்காகவே இதை எழுதுகின்றோம்.

சங்கராச்சாரி சென்னையில் இன்னும் ஒரு மாத காலம் தங்கப் போவதாகவும் அதற்கு பல பேர் பார்ப்பனரல்லாதார்களே இன்றும் பல ஆயிர ரூபாய்கள் கொடுக்கப் போவதாகவும் யாரோ ஒரு மார்வாடி சேட் ஒரு மாதத்திய செலவையும் அதாவது சுமார் 10, 20 ஆயிரம் ரூபாயையும் பொருத்துக் கொள்ளப் போவதாகவும் கேள்விப் பட்டோம். இது உண்மையாய் இருக்குமானால் இதை மனதார அனுமதிக்கலாமா? என்பதே தான் இப்போதைய நமது கேள்வி. நாட்டில் உள்ள பண நெருக்கடி எவ்வளவு? ஏழைகள் தொழிலாளர்கள் வேலையில்லாமல் கூலி இல்லாமல் பிள்ளை குட்டிகளுடன் பட்டினி கிடந்து தொல்லைப்படுவது எவ்வளவு? உதாரணமாக எம். எஸ். எம். ரயில்வே தொழிலாளர்கள் வேலையில்லாத காரணத்தால் சிலரால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு அவரவர்கள் வீட்டு அடுப்பில் பூனைக்குட்டிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களது பிள்ளை குட்டிகள் பட்டினியால் மடிகின்றன.

ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் சோம்பேறிப் பார்ப்பனர் களுக்கு தின்று கொழுக்க என்று சமாராதனைக்கு பதினாயிரக் கணக்கான ரூபாய் கொள்ளை போகின்றதுடன் வேகின்ற வீட்டில் பிடிங்கினது லாபம் என்பது போல் வேலை நிறுத்தத்தை ஆதரவாய் வைத்துக் கொண்டு தாங்கள் பெரிய மனிதர்களாகவும் நோகாமல் சட்டசபைக்குப் போகவும் சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதைத் தவிர வேறு என்ன நடக்கின்றது என்று கேட்கின்றோம்.

தேசீயப் பத்திரிகைகள் தொழிலாளர்களிடத்தில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து விட்டு தங்கள் பத்திரிகை யில் சங்கராச்சாரி பிரசாரத்திற்கு தினம் 5 கலமும், சீர்திருத்த ஆச்சாரிக்கு தினம் 10 கலமும் இடம் ஒதுக்குவதைத் தவிர மற்றும் இதில் பிரவேசித்தால் தங்களுக்கு ஏதாவது தலைமை ஸ்தானம் கிடைக்குமா என்றும் மீன்கொத்தி குருவிபோல் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்கின்றன என்று கேட்கின்றோம்.

ஆகவே நாம் முடிவாகச் சொல்லுவது என்னவென்றால், கள், சாராயக் கடை மறியலை விட, அன்னியத்துணி மறியலைவிட மற்றும் கோவில் பிரவேசத்திற்கு உயிர் விடுவதை விட, சங்கராச்சாரி கொள்ளையையும், அட்டூழியத்தையும், அவர் பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்திப் பிரசாரம் செய்வதையும் அடக்குவதற்குப் பாடுபடுவதே முக்கிய கடமை என்று சொல்லுகின்றோம். ஏனெனில் இது நமது சமூகத்திற்கே அவமானம்! அவமானம்!! அளவு கடந்த அவமானம்!!!

(குடி அரசு - தலையங்கம் - 18.12.1932)

Pin It