நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக்கச் செய்ய விரும்பவில்லை. எனினும், நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துக்காட்டிப் பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்களென்று நம்புகின்றேன்.

periyar 314உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியை யொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். 

அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவதில்லை.

இந்து வென்று சொல்லப்படும் திரு. முனிசாமி என்னும் ஆதி திராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத்தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டு விடும்போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும் விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக் கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய்ப் பிறந்து விட்டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது, வேதத்தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின் மீது பழியைப் போடுவதோடு, மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங்களின் பேராலும், செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை. மற்றும் “பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்: கடவுளால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப்பட்டு விட்டது. அதைப் பற்றி அதிகமாய்க் கேட்காதீர்கள்” என்று கொடுமைகளுக்குச் சாக்கு சொல்லிக் கொண்டும், ஆயிரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக் குள்ளாக்கப்பட்டும் வருகின்றது. ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆதிதிராவிடர்களாகிய உங்களைவிட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப்படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களைவிட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போகவில்லை.

உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டு மென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்களென்ற இழி பெயர்களுமிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவுளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென்கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும், வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்ட போதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்ற இழிவுக்கிடங்க் கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கமேற்படாது என்பது திண்ணம். கேளுங்கள்! (கரகோஷம்) ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. (கரகோஷம்) சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து நமது விரோதிகள் என்ன சொல்லுகின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பால குருசிவம் சிறிது நேரத்திற்கு முன் தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அவர் இவ்வியக்கத்தில் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கியமாய்க் குறிப்பிடத் தக்கது. சுய மரியாதைக்காரர்கள் கோயில், குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கிறார்கள்; இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய் விடும் போலிருக்கிறது, சுவாமி போய் விடும் போலிருக்கின்றது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடுகின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலிகளுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டுமிருக்கிறார்கள்.

அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரசார மோசத்தையுமுணராது அவர்கள் பிதற்றல்களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லுகிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்திக நாஸ்திகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

உலகத்தில் அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமை களை நிலை நாட்டி சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர, புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் தயாராயிருக்கிறோம், (கரகோஷம்) மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத் தானாகவேண்டும். (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத் தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனை பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயுமிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம்.

சும்மா கிடக்கும் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத் தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. (பெருத்த கரகோஷம்) கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவுளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளும் மதமும் போக வேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை. (கரகோஷம்) சமீபத்தில் நேப்பியர் பார்க்கில் கூடிய ஆதிதிராவிடர் சுய மரியாதை மகாநாட்டில் இந்துக்கள் எனச் சொல்லிக் கொள்ளப்படும் 6 கோடி மக்களாகிய ஆதிதிராவிடர்களை ஜாதிக் கொடுமையால் ஆலய உரிமை யின்றி கொடுமைப்படுத்தப்படுவதால் இந்து மதத்தில் அவர்களுக்குச் சம உரிமையில்லாவிட்டால் வேறு மதத்தில் சேருவதுதான் உசிதமென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

சம உரிமையில்லாதிருப்பதை விட சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாயிருக்க முடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை. ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதியில்லை. ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை. ராமானுஜர் ஜாதியில்லை என்றும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார்.

தேவாரம் பாடியவர்களும் ஜாதியில்லை என்பதை விளக்கினார்கள் என்று சொல்மாத்திரத்தில் நிற்கின்றதேயன்றி உண்மையில் அக்கொடுமைகள் ஒழிவதற்கு மார்க்கமில்லாமல் தானிருக்கின்றது. நமது பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக்காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனு மேற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால், இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப்பட்டுவிடும்; அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலை விரித்தாடுகின்றன.

இதற்குச் சாஸ்திரம் இப்படிச் சொல்லுகின்றது; மதம் அப்படி மறுக் கின்றதென்று சாக்குச் சொல்லிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலத்திற்குத் தான் விட்டுக் கொண்டிருக்க முடியும்? ஒருவர், ஆதி திராவிடர்களை இழிவு படுத்தப்படுகிறதா? இல்லை, இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் பூசித்தும் வரவில்லையா? என்று வாய் வேதாந்தம் பேசுகின்றார். பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவாராகி விடவில்லையா? அப்படியிருக்க புராணத்தை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்கிறார் அந்த அறிவாளி.

அந்த நந்தனுடைய பின் சந்ததி யாராகிய பேரப் பிள்ளைகளை அந்த திருநாளைப் போவாராகிய நந்தனிருக் குமிடத்தைக் கூடப்போய் ஏன் பார்க்க விடுவதில்லை? என்றுதான் கேட்கின்றோம். (கரகோஷம்) அப்படிக் கேட்டால் அந்த நந்தன் வேறு ஜென்மம், இவர்கள் வேறு என்று பல புராணப்புரட்டுகள் பேசுகின்றார்கள். (நகைப்பு) இதுபோலவே தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் ஆழ்வாராக வில்லையாவென்று வைணவர்கள் சாக்குச் சொல்லுகின்றனர்.

அவர்களையும் அந்த ஆழ்வாரின் பின் சந்ததியாரை அவர் இருக்குமிடத்தையாவது போய் பார்க்க ஏனையா விடவில்லை என்று கேட்டால், அவர்கள் அப்போதுதான் கண் விழித்துக் கொண்டு அந்த ஆழ்வார் வேறு இவர்கள் ஜாதி வேறு என்று மதப்புரட்டுகள் பேசுகிறார்கள்.

ஆதலால், இத்தகைய புராணப் புரட்டுகளும் மதப்புரட்டுகளும் வயிற்றுப் பிழைப்பு அயோக்கியர்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதென்பதில் என்ன சந்தேகம்? என்னைக் கேட்டால் இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கு ஜாதி வித்தியாச இழிவுக்கு முட்பட்டு கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டு பின்னால் மோட்சமடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானமென்று சொல்லுவேன். (பெருத்த கரகோஷம்) ஜாதிக் கொடுமையை ஒழித்து இங்கு சமத்துவத்தைக் கொடுக்காத சாமி அங்கு மோட்சத்தையும், ரம்பை, ஊர்வசி நடனத்தையும், தங்க மெத்தையையும், சுகபோகத்தையும் கொடுக்கிற தென்றால் அதை நம்புகிறதற்கு மடையனாவென்றுதான் கேட்கின்றேன். (பெருத்த கரகோஷம்) உண்மையாகவே அப்படி சாதிப்பதாயிருந்தாலும் இங்கு இழிவையும் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டிருந்து இறந்த பின் அந்தச் சுகங்களைப் பெறலாமென்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது திண்ணம்.

ஆலயங்களின் பெயரால் செய்யப்படும் அக்கிரமங்களுக்கும் கொடுமைகளுக்கும் எல்லையில்லை. உதாரணமாய் மதுரை மீனாட்சி கோயிலை எடுத்துக் கொள்ளுவோம். அக்கோயிலின் ஒரு கோபுர வாசலிலிருந்து மற்றொரு கோபுர வாசலுக்குக் குறைந்தது அரை மைலுக்கு அதிகமான தூரமிருக்கும். இவ்வழி சாதாரண ரஸ்தாவைவிட அகன்று வண்டிகள் தாராளமாய்ப் போய்வரத் தக்கதாயிருக்கின்றது. இவ்வழியாய்ப் பிற மதத்தின ரான முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மிதியடி போட்டுக் கொண்டும், பீடி பிடித்துக் கொண்டும், துவஜஸ்தம்பம் வரையிலும் தாராளமாகப் போக அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், இந்துக்களாகிய நாடார்கள் என்னும் வகுப்பாரும், மற்றைய தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் மட்டும் அந்த கோயில் மதில்சுவர் அருகில் வந்தாலும் சாமி செத்துப் போகுமென்கிறார்கள். (நகைப்பு) அது சாமியா? போக்கிரித்தனமாவென்று நான் கேட்கின்றேன். (கரகோஷம்) நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனமானது என்றுதான் கேட்கிறேன்.

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமை யாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும், ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா வென்று கேட்கிறேன். இவ்வாறிருக்க, மக்களில் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்கும்உட்படுத்தி வைக்க மதப்புரட்டுகளும் புராணப் புரட்டுகளும் தான் ஆதாரமாயிருக்கின்றன. மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாயிருக்கும் இம்மதத்தையும் புராணங்களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது?

ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்கள் 7 கோடியாயிற்றே இவர்களுக்கு மதம் வேண்டாமாவென்றும் கேட்டார். இவர்கள் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் சுதந்தரத்திற்கும் மதம் அவசியமானால் இவர்கள் இந்துக்களல்லாதவர்கள் என்ற மதத்தை வைத்துக் கொள்ளட்டுமென்று சொல்லுகிறேன். இது எவ்வாறு பொருந்தும் என்றும் கேட்கலாம். தற்போது அரசியல் துறையில் கொடுமைகளை ஒழித்துச் சுதந்தரம் பெறுவதற்குப் பார்ப்பனரல்லாதார் என்ற பெயருடன் பெரிய சமூகம் வேலை செய்து பல நன்மைகளைப் பெறவில்லையா? என்று தான் கேட்கிறேன்.

அவ்வாறிருக்க, சமுதாயக் கொடுமை களை ஒழிக்கப் பரிகாரம் தேடுவதற்கும் சுதந்தரமும் முன்னேற்றமுமடை வதற்கும் மதம் அவசியமெனத் தோன்றினால் அப்போது இந்துக்களல்லா தவர்கள் என்ற பெயர் வைத்துக் கொள்வதும் முற்றும் பொருத்தம்தான். அன்றியும் சட்டசபைக்குத் தேர்தல்களில் நின்று சட்டசபை மெம்பர்களான சீனிவாச அய்யங்கார்களும், வருணாசிரம ஆச்சாரிகளும், வைதீக இந்துக்களும், மகமதியர் அல்லாத் தொகுதியின் பெயரால் நின்று சட்டசபை களுக்குள் சென்றார்களேயன்றி மற்றபடி முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலானவர்களைப் போல இந்துக்கள் என்று சட்டசபைக்குள் செல்லவில்லை என்பதையும் முக்கியமாய் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தகைய சுதந்திரமுமில்லா திருப்பதைவிட இந்துக்களல்லாதாராக கோயிலுக்குள் போகும் உரிமையும், குளத்தில் குளிக்கும் சுதந்திரமும் இருப்பது எவ்வளவோ மேலென்று தான் சொல்லுவேன் (கரகோஷம்) நான் சாவதற்குச் சில நிமிஷமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி மத புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடிச் சாகுந் தருணத்தில் முஸ்லீமாகத்தான் சாவேன். (கரகோஷம்) ஏனென்றால், நான் செத்த பிறகு என் சொத்துக்களை என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றி பறிக்கப் படாமலும் அவர்கள் மூட நம்பிக்கையிலீடு படாமலிருக்கச் செய்யவும் தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். (கரகோஷம்)

நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப் படுமென்ற மூட நம்பிக்கையினால் பார்ப்பனன் காலைக் கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்கச் செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லீமாகச் சாவேன் என்கிறேன். (பெருத்த கரகோஷம்) சுமார் 20 வருஷங்களுக்கு முன் வெள்ளைக்காரர்கள் தீண்டப்படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்க வேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல பிள்ளைகளைப் பெற்றால் போதுமென்கின்றார்கள். (பெருத்த நகைப்பு) மதம் புராணம் முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள்தனத்திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்ந்திருப்பவர் யாரென்றால் இந்துக்கள்தான் என்று சொல்ல வேண்டும்.

அதிலும் இந்நாட்டில் இழிவுபடுத்தப்படும் மக்கள் யாரென்றால் நாம்தான். பிற மதங்களில் பல பாராட்டத்தக்க சீர்திருத்தங்க ளேற்பட்டு அவர்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். கிறிஸ்து மதத்தில் அவர்களுடைய கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டு விட்டு சுதந்தரத்திற்கு வழியான விஞ்ஞான ஆராய்ச்சியிலிறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பி இருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால் தான் ஆகாசத் தந்திகளையும் இறந்தவர்களை எழுப்பி ஆறு மணி நேரம் நடமாட வைப்பதுமான பல அற்புதங்களைக் கண்டுபிடித்து வருகிறார்கள்.

அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டியையும் செய்யத்தக்க வல்லமை உடையவர் களாயிருப்பது அவர்களுக்கிருந்த மதபுராண மூடக் கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதினாலல்லவா? (கரகோஷம்) அதுபோலவே மகமதியர்களும் இந்துக்களை விட பல வகையிலும் மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள்.

முஸ்லீம்களுள் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வென்ற கேவல உணர்ச்சியும் காணப்படவில்லை. ஆலயத்தில் அரசனாயினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத் தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்கு ஒற்றுமை யையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது. தென்னாட்டைக் குறித்தமட்டில் மலையாளத்தில் தான் ஜாதிக்கொடுமை சகிக்க முடியாத தாயிருக்கின்றது.

அங்கு மற்ற உயர்ந்த வகுப்பார் இருக்கும் இடத்திற்கு அரை மைல் தூரத்திற்கு அப்பால்தான் தாழ்ந்த வகுப்பார் எனப்படுவோரும், தீண்டாதாரும் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சர்க்கார் ரஸ்தாவில் நடக்கும் சுதந்தமுரமில்லை. அவர்கள் கழனிகளில் விழுந்துதான் போக வேண்டும். மலையாளத்திலுள்ள 40 லட்சம் ஜனங்களில் 20 லட்சம் பேர் வேறு மதத்தினராயிருக்கின்றனர்.

மற்ற 20 லட்சத்தில் குறைந்தது 13 லட்சம் தாழ்த்தப்பட்ட வகுப்பார்தான். அங்கு ஆறு ஏழு லட்சம் பேர் இருந்து கொண்டு தங்களைவிட இருமடங்கு ஜனத் தொகையுள்ள சமூகத்திற்கு மதம், புராணம், பழக்க வழக்கமென்பதன் பெயரால் செய்து வரும் கொடுமைகளுக்கு எல்லையில்லை. திருவாங்கூரில் இந்துக்களை விட அதிகமாய் படித்தவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்.

கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜாதி மதக் கொடுமைகளுக்கு உட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி கல்வியளித்து விசேஷ முன்னேற்றமடையச் செய்துவிட்டனர். அவர்கள் போல என்றைக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்க ளென்று நினைத்துக் கொண்டுள்ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும், இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டும் ரஸ்தாக்களில் வருவதற்கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர்.

திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்கு பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும் சமயப் புரட்டுகளும் தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்துவ ராஜ்யமாகிவிடுமென்பது திண்ணம். துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டை கட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்ற மேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மதத்தை நம்பி கிலாபத் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது வெள்ளையரையும் நடுங்கச் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன் காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதப்பித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா, அல்லது இரண்டங் குலமாவென்று அளவு பார்த்து தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது துருக்கியில் முஸ்லிம்கள் மழுங்க சிறைத்து விடவேண்டுமென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப்படு மென்றும் சொல்லப்படுகின்றது.

இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படி குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும், அங்கு வெள்ளைக்காரர்களைப் போல உடைதரிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படுகின்றது. இங்கு கோஷா முறையின் கொடுமை மிகுதிப்பட்டு திரையைக் கனமாகப் போடும்போது துருக்கியில் தங்க விக்ரகம் போன்ற பெண்களைத் தனித்து ஐரோப்பாவுக்குப் படிக்க அனுப்பி வருகிறார்கள்.(கரகோஷம்) சுய ராஜ்யப் பேச்சு வரும்போது மட்டும் ஒற்றுமை சமத்துவம் முதலிய எல்லாம் வருகிறது.

ஆனால் அது பெரும் பித்தலாட்டமென்பது தெருவில் நடக்க உரிமையிருக்க வேண்டுமென்னும் போது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. மிருகங்களிலும் மிக இழிவான ஜந்துக்களுக்கு இருக்கும் உரிமையுமின்றி மனிதர்களுள் ஒரு சாராருக்கு அம்மிருகங்களைப் போல தெருக்களில் போகும் உரிமையிருக்கக் கூடாதாவென்றால் மதவிஷயத்தில் பிரவேசிப்பதான பித்தலாட்டத்தை என்ன அயோக்கியத்தனமென்று சொல்லுவது? பித்தலாட்டமான மதத்தில் சிக்கி இதனால் பல இழிவுக்கும் துன்பத்திற்கும் கொடுமைக்கும் உட்படுவதை விடஅம்மதத்தை ஒழிப்பதே மேலாகும். மதத்தை அழிக்கச் சுயமரியாதை இயக்கம் வந்ததா என்று சிலர் கேட்கலாம்.

ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலை நாட்டுவதாயிருந்தால் அந்த மதத்தை ஒழிக்கத் தான் சுயமரியாதை இயக்கம் இருக்கின்ற தென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்) உண்மையில் சுயமரியாதை உணர்ச்சி உங்களுக்கு இருக்குமானால் உங்கள் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் தடையாயிருக்கும் மதக் கட்டுப்பாடுகளையும் சுவாமி பூதமென்பதனையும் உடைத்தெறியப் பின்வாங்க மாட்டீர்களென்பது திண்ணம். (கரகோஷம்) மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப் போல சுதந்தரமும் சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்தெறியத் தயங்கக் கூடாது.

உங்கள் சுதந்தரத்திற்கு எது தடையா யிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர்களானால் தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்) வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும், சுதந்தரம் தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்தில் சகல வகுப்பாரும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவதற்குக் கதவுகள் திறந்து விடப்பட்டன.

உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குளங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்து விட்டால் அதனுடன் நீங்கள் திருப்தியடைந்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திரமடைய விரும்புவது போலவே உங்கள் பெண்களுக்கும் சுதந்தரமளிக்க நீங்கள் தயாராக முன்வர வேண்டும். அப்போதுதான் உங்களுள் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவைகளுக்கெல்லாம் மறுமணம் செய்ய வேண்டும். இவ்வழக்கம் உங்களுள் இல்லாதிருக்கவில்லை.

அறுத்துக் கட்டும் ஜாதி இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும் அறுத்துக் கட்டுவதால் அறுத்துக் கட்டாத உயர்ந்த ஜாதியில் நடக்கும் பல கேவலமான சிசுக் கொலைகளும், கழுத்தைத் திருகிக் கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லாதிருப்பது எவ்வளவோ உசிதமல்லவா? (கரகோஷம்) ஒழுக்கத்திலும் படிப்பிலும் முன்னேற்றமடைந்திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக் கொண்டு, குணமும், படிப்பும், ஒழுக்க முமுள்ள உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்க மாட்டோம்.

இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் சாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும். (கரகோஷம்) ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத் தான் எல்லாக் கட்டுப்பாடுகளு மிருக்க வேண்டு மென்ற மூட அறிவீனமான கொள்கைகளிருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கை கழுவினதும், கதவைச் சாத்திக் கொள்ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும் போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, அய்யாவுக்கு மோர் விடு, நான் போய்விட்டு வருகின்றேன் என்று மனைவி சொல்லிவிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். (நகைப்பும் கரகோஷம்) ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பெண்களுக்குத் தான் பதிவிரதத் தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் இடமேற் படுகின்றது. மதத்தின் பெயராலும், மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதிகளையும், அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங்களையே ஒழிக்க வேண்டுவது அவசியமானாலும் அதற்கும் தயங்கக்கூடாது.

மக்கள் சுதந்தரமடைந்து சுகமாய் வாழ்வதற்கு வழி என்னவென்று எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன். என் உணர்ச்சிக்குட்பட்டதைச் சொன்னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார், அவர் எனக்குச் சொன்னார், நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நான் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து சரி எனப்படு வதைக் கொண்டு, சரி இல்லாததை ஒதுக்கி என் மீது அனுதாபங்காட்டும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். (கரகோஷம்)

(குறிப்பு : 3.8.1929 ஆம் நாள் இராயபுரத்தில் கண்ணப்பர் வாசக சாலைத் திறப்புவிழா - சொற்பொழிவு..

(குடி அரசு - சொற்பொழிவு - 11.08.1929)

Pin It