ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரசார பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31-தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித்திருந்ததில், அந்த ஆரம்ப விழாவை நடத்தித் தர கேட்டுக் கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சௌகரியப்படவில்லை என்றும், ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதன் பேரில் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப் போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒரு சமயம் ஊருக்குப் போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும், அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டியதாயிற்று.
திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்ப விழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்பட்டு முன் தெரிவித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஈ.வெ.ராமசாமி
(குடி அரசு - அறிவிப்பு - 04.11.1928)