periyar 329நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள் நாட்டில் தங்களுக்கும் இக்காரியத்திற்கும் ஆதரவில்லை என்று தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்களின் பெயரை வைத்துக்கொண்டு, வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்கள். இது காங்கிரசின்போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்து விட்டால் நாளைக்கு பார்ப்பன கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கும் ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும் ஏமாற்றமும் செய்யக்கூடும் என்பதையும் இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவி செய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.11.1927)

***

சந்தேகம் உறுதியாய் விட்டது

ஸ்ரீமதிகள் துரைகண்ணு அம்மாள், பார்வதியம்மாள் ஆகிய இரு பெண்கள் பெயரால் பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்கு கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்பிரசாரமும் செய்ய வந்த காரியங்களை நாம் பார்த்தவுடனேயே இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆண்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படி சந்தேகப்பட்டது சரியென்று மெய்ப்பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. என்னவென்றால் சுயராஜ்ஜியக் கக்ஷி உயிர்நிலையான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் கக்ஷித் தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால் இம்மாதிரி ஆnக்ஷபங்களை பொது ஜனங்கள் லக்ஷ்யம் செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.11.1927)

Pin It