வெள்ளக்கிணற்றில் ஸ்ரீமான்.எஸ். இராமநாதனின் அக்ராசனத்தின் கீழ் நடைபெற்ற கோயமுத்தூர் தாலூக்கா மகாநாட்டில், அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேறிற்று. தமிழ்நாட்டு அருந்தவப் புதல்வரும் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், கோவை தாலூக்கா மகாநாட்டின் அக்ராசனரும், மாகாண காங்கிரஸ் நிர்வாகசபையின் அங்கத்தினரும். கதர்போர்டின் காரியதரிசியும், ஆகிய இவைகளாயிருந்தவரும். உண்மைத் தியாக மூர்த்தியுமாகிய ஈரோடு ஸ்ரீமான். வா. மு. தங்கப்பெருமாள் பிள்ளையவர்கள் காலஞ்சென்றதைக் குறித்து இம்மகாநாடு ஆழ்ந்த துக்கத்தை அடைவதோடு, அவர் குடும்பத்தாருக்கு அநுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறது.

காலமான நம்நாட்டுப் பெருந்தேசாபிமானியும். நமது ஜில்லாவாசியுமான ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னமாகவும், அவரது போதனைகளைப் பரப்ப ஓர் சாதனமாகவும், இந்த ஜில்லாவில் ஓர் ஸ்தாபனம் ஏற்பாடு செய்யவேண்டுமென்றும், அதற்காகப் பொருள் சேர்த்தல் முதலிய வேண்டுவனசெய்ய, கீழ்க்கண்ட கனவான்களை ஓர் கமிட்டியாக நியமித்திருப்பதாய்த் தீர்மானித்திருக்கிறது.

கமிட்டி அங்கத்தினர்

ஸ்ரீமான்கள்.ஈ.வெ.இராமசாமி நாயக்கர், அக்ராசனர், எஸ். இராமநாதன், காரியதரிசி.

ஈரோடு, எம். எஸ். முத்துக்கருப்பன் செட்டியார்,பொக்கிஷதார். கோயமுத்தூர், டி.ஏ.இராமலிங்கம் செட்டியார், சி.வி,வெங்கட்டரமணய்யங்கார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், ஆர்.கே, ஷண்முகம் செட்டியார், அத்திப்பாளையம் என்.இராமகிருஷ்ண நாயக்கர், திருப்பூர் கே.ஆர். ஈஸ்வர மூர்த்திக் கவுண்டர் - அங்கத்தினர்கள்.

நமது குறிப்பு :

இம் முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியதை நாம் மிகுதியும் பாராட்டுகிறோம். பொது ஜனங்களும் அவரது ஞாபகக்குறிப்பிற்குத் தங்கள் தங்களாலான உதவியைச் செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். பணம் அனுப்புகிறவர்கள் ஈரோடு ஸ்ரீமான் எம்.எஸ்.முத்துக்கருப்பன் செட்டியாரவர்கள் பேருக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுமாய்க் கோருகிறோம். இத்தீர்மானம் நிறைவேறியவுடன் ஸ்ரீமான்கள் டி.எ. இராமலிங்கம் செட்டியார், ஈ.வெ. இராமசாமி நாயக்கர், வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர், சி.வி.வெங்கிட்டரமண ஐயங்கார், ஆர். கே. ஷண்முகம் செட்டியார் ஆகிய ஐவர்களும் ஆளுக்கு 100 ரூபாய் வீதம் 500 ரூபாய்க்குக் கையொப்பம் செய்ததை முழு மனதுடன் பாராட்டுகிறோம்.

முக்கிய குறிப்பு

இப்பேர்ப்பட்ட பிராமணரல்லாத தேசபக்தர் காலமானதைக் குறித்து பிராமண பத்திரிகைகளில் தலைசிறந்து விளங்கும் “ஹிந்து” பத்திரிகை ஒரு வார்த்தையாவது எழுதவே இல்லை. இப்பத்திரிகையைத்தான் நமது டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் மகாத்மாவிடம் யோக்கியமான பத்திரிகை என்று சொன்னாராம்.

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 28.03.1926)

Pin It